Saturday, October 02, 2010

"காந்தியின் ஏக்கம்...?"


ரகுபதி ராகவ ராசாராம் பதித்த பாவன சீத்தாராம்..., தேசத்தின் விடுதலை எண்ணி பாடு பட்ட எண்ணற்ற உயிர்களுக்கு இந்த நாளில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி.., மிதவாதத்தின் தலைவர்களின் தலைவர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்களை நாடு நினைவு கூறும் இந்த வேலையில்....,
இந்த தேசத்தின் குடிமகன் என்கிற முறையில் எனக்கான சந்தேகங்களை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

#
காந்தியின் "கனவு"... "இலட்சியம்"..... சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவு என்னென்ன...?

#
சுதந்திரம் என்பது வெள்ளையனை வெளியேற்றி நம்மை நாம் ஆள்வது மட்டுமா? இல்லை. இந்த தேசத்தின் மடமை, அறியாமை, வறுமை, பெண் சுதந்திரம், இவற்றிலும் இந்தியா முழு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே...! அடைந்தோமா?

#
சட்டம் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும். பாவிக்கிறதா?

#
ஆண், பெண் இருவருக்கும் சம மரியாதை கொடுக்கப் பட வேண்டும்.? கொடுக்கிறோமா? 33 % க்கே இன்னும் மூச்சு வாங்கி போராட வேண்டி இருக்கிறதே?

#
காந்திய வழியில் உள்நாட்டுப் பொருள் உற்பத்திக்கு முதலிடம், விற்பனையில் முதல் உரிமை வழங்க வேண்டும். நடந்திருக்கிறதா?.... கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை இலட்சம் உள்நாட்டு நிறுவனங்கள் இழுத்து மூடப் பட்டு விட்டன தெரியுமா? நன்றாக வியாபாரம் நடந்த கம்பெனிகளை வியாபார யுக்தி என்ற பெயரில் விலைக்கு வாங்கி அந்த பொருளை மார்க்கெட்டில் இருந்து அழித்து, வெளிநாட்டு பொருள்களை தரமில்லாமலே இங்கே விற்கிறார்கள்.
உள்நாட்டு உற்பத்தி குறைவு, இந்திய உற்பத்தியாளர்கள் குறைவு பற்றி கவலையோ, அக்கரையோ காட்டியதுண்டா இந்திய அரசு?

#
சாதாரண மக்களின் முன்னேற்றத்தில் எவ்வித கவனமும் செலுத்த படவில்லை. வெளிநாட்டு கல்வி, தொழிற்சாலை, வேலை, சம்பளம் இதுதான் நமது தலையாய கவனம். எவனோ இங்கிருக்கும் வளங்களை பயன்படுத்தி "கார்" தயாரிக்க முடிகிறது. ஒரு இந்தியனுக்கோ, இந்திய அரசுக்கோ அதை செய்ய ஏன் இயலவில்லை?

#
உணவு உற்பத்தியில் 1980 முதல் 1998 வரை தன்னிறைவில் இருந்த நாம் இப்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டதன் உண்மை என்ன? நம்முடைய விவசாயம் நலிவுற்று கேட்ப்பாரற்று கிடக்கிறது என்பதற்கு இதை விட சாட்சி வேண்டுமா? பட்டினி சாவு? கடன் தொல்லையால் விவசாயித் தூக்கு? இந்த தேசத்தின் அவலத்துக்கான அத்தாட்சி..!!

#
தஞ்சையில் "எலிக்கறி", கஞ்சித்தொட்டி ...... நடந்தேறியக் கொடுமை மறந்தீரோ மக்கள்..?

#
நதி நீருக்கு நாடே கையேந்தி நிற்கிறது. வெளி நாட்டான் நம்ம ஊர் ஆற்றுப் படுகையில் நீரெடுத்து நம்மிடமே காசுக்கு விற்று இலாபம் பார்க்கும் கொடுமை காணீ ரோ?

#
வர்த்தகத்திற்கு வந்தவன்தான் ... நம்மை அடிமையாக்கினான். இப்போதும் அதேதான் நடக்கிறது. ஆக இந்திய விடுதலை என்பது வெறும் 70 அல்லது 80 ஆண்டுகள் மட்டும்தானா?

#
இந்த தேசத்தின் நல்ல நிலங்கள் எல்லாம் வெளி நாட்டானுக்கு 300 முதல் 600 ஏக்கர் வரை அவனுக்கு தாரைவார்க்கப் பட்டு விட்டன. சுமார் 3000 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளே நுழைந்து விட்டன. நிலம் அவனுக்கு சொந்தமான பிறகு நம்முடைய கதி...., அதோ கதிதான்..?!

#
ஆக உள்நாட்டு அகதிகளாக நம் தலைமுறை மாற காலம் வெகு தொலைவல்ல...?

#
இன்னொரு சுதந்திரப் போருக்கு இனி எந்த மகானும் இந்த மண்ணில் பிறக்க மாட்டார். பட்டது போதாதா?

#
வாழத் தெரியாதவன் வாழ்கிற நாட்டில்... ஆளத் தெரியாதவன் ஆள்வானாம்..... நம்ம எப்படி?

# காந்தி
பிறந்த நாளில் சிறிதேனும் சிந்திப்போம்...?!. வாய்ப்பிருந்தால் சந்திப்போம்.

#
அதுசரி...., நியாயம் கிடைக்க 60, 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நாட்டில்.... சிந்திக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?.

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

காந்தி பிறந்த, பிரிந்த நாட்டில் நன்கு சிந்திப்போம்....வாழ்த்துகள்

தமிழ்க்காதலன் said...

எனது பதிவுக்கு முதன்முறை வருகைத் தந்து கருத்துக்கள் பறிமாறியமைக்கு நன்றி ஆர்.கே.குரு. தொடர்ந்து வாருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

உங்களது கேள்வியில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது? என்ன செய்ய...
எல்லாம் அரசியலாகிவிட்ட உலகில் காந்தி ஜெயந்தி அன்றாவது காந்தியை நினைக்கிறோமே...

தமிழ்க்காதலன் said...

வாங்க குமார்..., உங்கள் கருத்துரைக்கு நன்றி. தனி மனித மற்றத்தில் இருந்துதான் உலக மாற்றம் நண்பா...., நாம் எதாவது ஒரு நன்மை செய்வோம்......, இந்த சமூகத்துக்காக, தேசத்துக்காக...,