Tuesday, November 10, 2009

"நினைவில் நீ..!"

நீ கால்தடம் பதித்த வழிகளிலெல்லாம்
என் நினைவுகள் ஒற்றி நகல் எடுக்கிறேன்.
நினைவு சுழல்கள் என் நெஞ்சம் அழுத்த
நிலைதடுமாறுது என் இரத்த ஓட்டம் .
எனக்கு மட்டுமல்ல….
என் போன்ற… சக நண்பர்களுக்கும்தான் தோழி.
கனவுபோல் தோன்றுகிறது…
நிகழ்ந்துபோன இறந்தகாலம்…!
இல்லை …இல்லை…!?
அவை இறந்த காலங்கள் இல்லை.
உன்னோடு நாங்கள் வாழ்ந்த காலம்.
சுவாமிநாதன் என்டெர்பிரைசஸ் நிறுவனத்தில்
நான் கால்தடம் பதிக்க, எனக்கு
வழித்தடம் வகுத்தவள்.
அந்த நன்றியுணர்ச்சி என் நெஞ்சம் நிறைக்க …
கண்களில் குளம் கட்டுகிறது …கண்ணீர் !
அணைபோட யாருமில்லாததால் ….அந்த
“அன்பு” வெள்ளம் கரை மீறுகிறது.
நினைத்துப் பார்க்கிறேன் !
நீ நிகழ்த்திய அதிசய மாற்றங்கள் …
எத்தனை …எத்தனை …!

எவருக்கும் திறக்காத “இரும்புக்கதவு”
உனக்கு மட்டும் “உடனே” திறந்தது.
பணியாளர்களுக்காய் … நீ
புரிந்த துணிகர பணிகள் பாராட்டுதலுக்குரியவை.
பின் வாங்காத உன் “கம்பீரம்” …எல்லாராலும்
பின்பற்ற படவேண்டியவை.

மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும்
“மகத்துவம்” உனக்கு இறைவன் கொடுத்த வரம்.
பனிமலர் பார்த்திருக்கிறேன் …!
“பணிமலர்” இப்போதுதான் பார்க்கிறேன்.
நிறைவு செய்யும்வரை …
நீ விழி மூடாமல் உழைக்கும் உழைப்பு ..
எதையும் சந்திக்கும் துணிச்சல் …
மறக்க முடியுமா ?...

உன்னைப்போல் ஒருவர்
இனி வரலாம் ?!
உன் பணிகள் …செய்வது அரிது !
எத்தனை துயரங்கள் தாங்கி …
இத்தனை உயரம் சென்றிருக்கிறாய்.

விழிகளில் வழியும் உன் துயரங்கள் மறைத்து
முன் நிற்பவர் குறை கேட்கும் …
குறை தீர்க்கும் …
நல்ல உள்ளம் ….எல்லோர்க்கும் வாய்க்காது.

முகத்துக்கு முன்னால் புகழ்ந்தவர்கள்,
முதுகுக்கு பின்னால் இகழ்ந்தவர்கள்,
எல்லோருக்கும் நன்மை செய்தாய்.
பிறரின் உயர்வுக்கு வழிவகுத்தாய் .
ஒவ்வொருவரின் தனிப்பட்ட குறை நிறைகளை
கவனம் கொண்டு கேட்கும் பக்குவம் …
பாராட்டுதற்குரியது.
பசுமரத்து ஆணியாய் ..
எங்களின் நினைவுகளிலும் ..உணர்வுகளிலும் ..
கலந்து போனாய் ., உள்ளுக்குள்
உறைந்து போனாய்.
ஒரு வகையில் …
“பிரிவு” என்பது …
மனிதனுக்கான இன்னொரு “பரிணாம வளர்ச்சி”!
அந்த வகையில் …உன்
அடுத்த வளர்ச்சி காண ஆவலாய் உள்ளோம்.
எங்களோடு …உறவாடி …
எங்களோடு …உரையாடி …
நீ வாழ்ந்த வாழ்க்கையை …
நாங்கள் இழப்பதை நினைக்கும்போது…
“இந்த நாள் விடியாமல் போயிருக்கலாம்”
எனத் தோன்றுகிறது.

குறையும், நிறையும் நிறைந்த …
கூத்தாடும் குறைகுடங்கள் …
யாவற்றையும் உன் இடுப்பில் சுமந்த ..
இரக்கமுள்ள “கன்னித்தாய்”….!
இரண்டுபக்கம் யோசிக்கும் …”யதார்த்தவாதி ”!
எங்களோடு உன் உணர்வுகளை ,
உணவுகளை பகிர்ந்துகொள்ளும் “பதார்த்தவாதி”!
நம்முடைய புலங்கள் மாறலாம் ,
நினைவுகள் மாறாது .
உணர்வுகள் மாறாது .
உன்னோடு நாங்களும் …,
எங்களோடு நீயும் …,
இணைபிரியா தண்டவாளமாய் …
எப்போதும் வாழ்ந்திருப்போம் ,
எல்லோரும் சேர்ந்திருப்போம் ,
இனி வருங்காலம் …
இனிமையும், வளமையும் பெற்று வாழ …
இறையருளட்டும்.
என்றும் நட்புடன்,