Monday, February 27, 2012

”இனிய தாகம்..!”


வருந்துமுயிர்க்கு விருந்தாய் வாழ்வளித்த ஆருயிரே..!
விரும்புமுயிர் விரும்பிய வண்ணம் விரும்பிய
அரும்பே..! குழவியின் குறும்பே..!! இதயம்
விரும்பும் எழிலே..! அடிக்கரும்பே..! ஆரணங்கே..!!

மகரந்தம் குழைத்த தேன்சுவையோ,- குரல்
மதுரம் ததும்பும் பூங்குழலோ,- குழை
மறைத்துப் பிதுங்கும் பூவழகோ,- பிறை
உதித்து வளரும் பொன்னழகோ நுதல்..!

கிளைத்த கிளையின் துளிர்த்த இலை
மிஞ்சும் மென்னழகு உன்னழகு தலை
செழித்த பூவின் முன்னழகு விழி
தொடுத்த வில்லின் நேரழகு புருவம்

சிறுத்து சிவந்த இதழழகு சிதறடிக்கும்
சிந்தனை முகிழ்த்து கிடக்கும் உனதழகு
குழைந்து கிடக்கும் குறுந்தேகம் என்னை
இழந்து தவிக்கும் வெண்மேக பூந்தேக

கிண்ணத்தில் தேன்வார்க்கும் எண்ணத்தில் பூவார்க்கும்
கன்னத்தில் கவிவார்க்கும் முத்தத்தில் செவிசாய்க்கும்
மோனத்தில் புவிபூக்கும் புன்னகை விடியல்கள்
வானத்தில் சிவந்து காட்டும் வெட்கம்.

கையணைக்க மெய்யணைக்க மெல்லியலாள் மனமணைக்க
கையடித்து கைப்பிடித்து கண்ணார காதலித்து
மொய்த்த மனம் துய்த்துக்கிடக்க தூயவள்
உருகும் ஓசை காற்றை கிழிக்கும்.

சில்வண்டாய் சிலநேரம் சிறகடிக்கும் எண்ணம்
சில்லென்ற பூங்காற்றாய் கிறங்கடிக்கும் உள்ளம்
இதழுடைத்துப் பெருகும் இன்ப வெள்ளம்
இதழடைத்து கடைவழிய வழியும் காதல்.

நாளும் நலம் சேர்க்கும் நற்றுணை
காலம் கரை சேர்த்த பொற்சிலை
காதல் தனை வார்த்த குறுந்தொகை
கண்மணி உந்தன் கயல்விழிப் புன்னகை.     

Sunday, February 12, 2012

”நதி மூலம்...!”



காலன் வகுத்த வழிக்கும்
நூலோன் தொகுத்த வழிக்கும்
நடுவே நான்.....!!

எது என் பக்கம்..?
நான் எந்த பக்கம்...?
தேடல்.....!!

புத்தியின் புரிதலில்
நூல் விரிகிறது....!
நூலின் உணர்த்தலில்
வாலன் வலிமை விரிகிறது.

வாலன் வகுத்த வழி தேட
காலன் தொகுத்த விதி விரிகிறது.
விதியின் வேர்கள் பற்றி தொடர
வினையின் மொட்டுக்கள் வெடிக்கிறது.  

எதிலிருந்து எது...? எங்கே தொட்டு எங்கே தொடர்கிறது..?
வினைகளை கேட்கிறேன்...,
விதிக்கு கை காட்டுகிறது.
விதியின் கண் நோக்குகிறேன்
வினையின் வழி காட்டுகிறது.

விடுதலை வேண்டுபவன்...
இப்படித்தான் தேடுகிறான்.....,
வினாக்களில் வீசிய புயலுக்குபின்
தென்றலாய் ஒரு பதில் தேடி.....!!

ஆடிய எண்ணங்களில் அமைதியாய் விரிகிறது
நிர்வாணமாய் இந்த பிரபஞ்சம்.
முதன்முறையாய் ஆடையை பாரமாய் பார்க்கிறேன்.
முரண்பட்டு நிற்பது யார்...?

இல்லாததிலிருந்து இருப்பது பிறக்க
இருப்பது இல்லாமல் போகும்
இரகசியம் வெட்டவெளியாய் சிரிக்கிறது...!
கண் மூடிக்கொள்கிறேன்.

இருப்பதிலிருந்து இல்லாதது பிறக்க
இல்லாததின் "இருப்பு" புரிகிறது,
இருப்பதும் இல்லாததும் யார் பொறுப்பு..?
தொடரும் வினாவின் பயணம்...(?)

வினை தொற்ற எந்த விதிக் காரணம்..?
விதி தொற்ற எந்த வினைக் காரணம்..?
இருப்பதா..? இல்லாததா...??
வெற்றிடமா..? பருப்பொருளா...?

எது காரணமானாலும்....
உயிரற்றது என்ற விஞ்ஞானத்தின் கூற்று
விடையற்று விழிபிதுங்கும் உண்மை புரிகிறது...
உயிர்களின் விதியை தீர்மானிக்கும்
உயிரற்றவைகளின் உண்மை உயிர் புரிய.

வெற்றிடத்தை சுற்றி வரும் பருப்பொருள்
வெறுமையாய் சுற்றுகிறதா..?
தனிமையாய் சுற்றுகிறதா..?
வேறெதற்கு சுற்றுகிறது...?!

இயக்கமும் இயக்க மூலமும்
தூலமும் துருவமுமாய் மாறி நிற்கும்
சூட்சுமத்தில் பருப்பொருள் பிறக்கிறது.
பிறப்பது அறியாமல்.....!

பருப்பொருளிலிருந்து...
பிறப்பொருள் பிறக்கிறது.
பிறப்பு புரியாமல்....!
தொடக்கமும் முடிவும் ஒரே இடத்தில்...!

தொடக்கம் வேறு, முடிவு வேறு.
தொட்டுக்கொள்ளும் இடம் ஒன்று.
வட்டம்தான் எத்தனை வசதியானது...!!?
விட்டங்களில் அடங்கும் ஆரங்களாய்....

விடைகள் கிடக்கும் விந்தைகள் காண்கிறேன்.