Sunday, December 29, 2019

”எண்ணங்கள்...!!”



உதிக்கும் எண்ணம் உதிக்கும் மூலம்
உணரத் தேடுகிறேன் – ஒருதலை சுமக்கும்
ஓட்டில் உறையும் மூளையிலா? மூளையின்
மூலைகளில் ஒன்றிலா?? மாய

மனமெனும் குடுவையோ? ஓயாதுத் துடிக்கும்
இதயத்தின் இருப்பிலா? உதிக்கும் எண்ணம்
உதிப்ப தெங்கே? உறைவ தெங்கே?
வேரில் தொட்டு தொடரவோ...!

நுனியில் தொடங்கி வேரில் முடிக்கவோ..?!
நுட்பம் நுணுகி அணுகி அருகில்
நுணுக்கப் பயணம் தொடர்கிறேன் – நீளும்
பரவெளிப் பயணம் நிற்காது...!!

உயிரென உணரப்படா உட்பொருளிலா? – எதில்
தொடங்கி? எதில் தொடர்ந்து? எப்படி
இடைவெளி இல்லாப் பயணம் நடத்தும்
எண்ணங்களின் மூலம் தேடுகிறேன்....

ஊண்பொதி சூட்சுமங்கள் உணரும் தருணம்
மூலங்களால் மூண்டு மூண்டு மூலங்கள்
தூண்டும் தூண்டல் தொடர்பில் துடிக்கும்
தூலங்கள் தாம்பொதி ஊண்...!!

காலங்கள் கடந்து ஞாலங்கள் உருளும்
கோளங்கள் யாவிலும் வண்ணக் கலவை
ஒளியுள் ஒளிந்தும் ஒலிக்குள் கலந்தும்
அண்டம் அண்டமாய் பேரண்டத்

தொப்புள்கொடி விரிந்து பரந்து விழுதாய்
வேர்விடும் மூலங்களே,- காணும் தூலங்கள்..!
கண்ணற்றக் கண்ணில் காணும் எண்ணற்ற
எண்ணங்கள் அலைமோதும் குவியல்

வலம்வரும் வளையங்கள் விண்ணின்று சுழலும்
கோளங்கள் யாவிலும் ஊடறுத்துப் பாயும்
உள்வெளி மாற்றங்கள் பால்வெளிப் பயணத்தில்
கோள்நிலை காட்டும் கண்ணாடி

தறிக்குள் ஊடும் தாரதுவாக இழைவீசும்
காந்தம் கவரும் ஒளிவீசும் எண்ணங்கள்
கலந்துக் கலந்துக் காந்தப் பொதிக்குள்
சுமந்துத் திரியும் விண்துகள்

விந்துகள் தாம்பொழி யாற்றல் பொதிந்து
ஊண்பொதி உள்வாங்கும் நுண்ணுணர் பொறிகளில்
பிரிந்துப் பிரிந்துப் போய்சேரும் வெவ்வேறு
அலைகளில் அமிழ்ந்து உமிழும்

புறப்புறத் தூண்டல்கள் நிகழ்த்தும் தொடர்வினை
அகத்துள் அடர்ந்து எழும்பும் அதிர்வுத்தொகுதி
தொகைத்தொகை பிரிவுகள் தொடர்வது பிரித்து
உணர்ந்ததை உணர்த்தும் உட்பொறிகள்

எழுந்த எண்ணங்கள் யாவும் புறத்தே
விழுந்த தொகைத் தொகுதி விந்துகள்
தாமென உணர்வார் உணர்வில் உள்ளும்
புறமும் ஒன்றே ஆகும்.


Wednesday, December 25, 2019

”உள்ளத் தீ...!!”



உள்ளம் அகலாக எண்ணம் திரியாக
அன்பு நெய்யூற்றி இதயத்தில் தீபம்
ஏற்றும் கண்களில் ஒளிரும் காதல்
சுடரில் எழுதும் கடிதம்....!!

சிந்தனைச் சிறையில் தனிமை தவம்
தன்னை இழந்து தன்மை மறந்து
உண்மை அன்பில் உருகும் மனதை
தேற்றுவதோ? தூற்றுவதோ? நானறியேன்...!!

அண்மை சேய்மை இடைவெளி மறந்து
ஆண்மை பெண்மை பாலினம் கடந்து
அவள் அவனாக அவன் அவளாக
அனுபவ மாற்றம் ஆருயிரில்....!!

கற்சிலை மாறும் கடவுள் நிலை
பொற்சிலை பூணும் பூவின் மணம்
உற்சவ சிலை ஊர்கோலம் காணும்
அன்பில் தேடல் அதிசயம்...!!

உருவம் கடந்து உருகும் உள்ளம்
அருவம் கொண்டு அருகில் செல்லும்
கனவென காணும் நினைவில் நிற்கும்
காதல் காலம் கடக்கும்...!!

கன்னம் சிவக்க கனியும் இதழில்
எண்ணம் எழுதும் முத்த மையில்
பூத்துச் சிரிக்கும் காதல் மயில்
காத்துக் கிடக்கு ஒயிலாக...!!

உருண்டும் புரண்டும் உருவம் தேடும்
அருகில் இருக்கும் அருவம் கண்டு
அரண்டும் மிரண்டும் ஆசைத் திரண்டு
விழிகளில் சிந்தும் காதல்...!!

மொழிகள் மறந்து மொழியவும் மறந்து
வியந்து வியந்து விரியும் விழிகள்
உளரும் உளறல் உள்ளக் கதறல்
ஊமையின் கனவாய் நெஞ்சில்...!!

நெஞ்சம் சுமக்கும் நேசம் கனக்கும்
கொஞ்சம் இறக்கி கொஞ்சும் சிறுக்கி
அஞ்சும் அழகில் தஞ்சம் அடைந்த
உயிரில் உயிர்த்த காதல்...!!  

Tuesday, December 24, 2019

உயிரின் நேசம்...!!



முன்னொரு சென்மம் முளைத்த காதல்
பின்னிப் பிணைந்து பின்னும் நீளும்
எண்ணத் தொடர்பில் எழுதும் விதி
எண்ணவோ எழுதவோ வியப்பில்...!!

கண்ணின் மணிக்குள் விழுந்த ஒளிக்குள்
கலந்தே நுழைந்த காந்தக் காதல்
உள்ளும் புறமும் ஓடும் மூச்சில்
உயிரின் உயிரை தீண்டும்

அண்டம் பிறந்து பிண்டம் நுழைந்த
பரவெளிப் பாய்ச்சல் அடர்ந்த அன்பில்
அகமும் புறமும் ஊட்டம் காணும்
வளர்ந்து மலர்ந்து செழிக்க

தூண்டும் தூண்டல் தூண்டில் போடும்
வேண்டும் மனதின் வேண்டல் யாவும்
தாண்டவம் ஆடும் தன்னொரு பாதிக்கு
ஆழ்மன ஆசைகள் துளிர்விட

பாதியாய் ஆதியில் பிரிந்த பாதியாய்
பாதிக்கும் பாதியின் ஆதிக்கும் பாதியாய்
பாதியைப் பிடிக்கப் பாதைத் தேடும்
பாதியில் இணையும் பாதிக்காய்...!!

வாதிக்கும் உள்ளுள் தன்னை சோதிக்கும்
வருத்தம் வந்து வருத்த வருந்தும்
பெருத்த ஏமாற்றம் பிணியாய் துரத்த
கருத்த மனம் கன்னும்

தேடும் நாளும் தேடாமல் ஓயாது
பாடும் உறவின் பாசம் தேயாது
நாடும் மனம் நன்மை தீராது
வாடும் உயிரின் வேரில்

கண்ணீர் சொரியும் காதல் துளிர்க்க
பன்னீர் பூக்கள் பார்த்துப் பேசும்
பால்நிலவு மதி மயக்கும் பால்வீதி
பயணத்தில் பருவப்பால் தேடும்

உயிரின் துருவங்கள் ஒன்றை ஒன்று
தொட்டுத் தொடரும் பிறவிப் பேசும்
கட்டுக்கடங்கா காதல் ஊறும் – மூலம்
உணர்ந்து மோகம் மூளும்

பாகம் பிரிந்த தேகம் தன்னில்
பாகம் பிணைய பாதை வகுக்கும்
மேகம் மிதக்கும் நீரில் கலக்கும்
ஆவிக்குள் ஆவி சுரக்கும்

ஐந்தாற்றல் அடங்கி எழும் ஐம்பொறி
பைக்குள் பொதிந்த பாசப் பொறிக்குள்
நைந்து நைந்து நாட்கள் கழியும்
பேராற்றல் பெரு வெள்ளம்

அகம் நோக்கி முகம் நோக்கி
ஆழ்ந்து அமிழ்ந்து உயிர் நோக்கும்
வாழ்க்கை வாழவே மனம் ஒப்பும்
வாழாது வீழ்ந்துப் போவதோ..!!

நிலம் மோதும் கடலாக நீயும்
கடல் தாங்கும் நிலமாக நானும்
அலை மோதும் கரைமீது ஆசைகள்
எழுதும் விழியின் மொழிகள்..!!

நிலவின் தீண்டல் நீயென காட்டும்
இரவின் அழகில் இளமை கூட்டும்
உறவின் உரிமை உயிலாய் தீட்டும்
காதல் பட்டயக் கவிதை..!!

கனவில் வந்த நினைவில் வந்து
உணர்வில் ஒன்றி உயிரில் கலந்து
புணர்வில் பொங்கி பொதுவில் தங்கி
அழியா அன்பில் ஆழ்ந்த

நொடிகள் பொழுதாய் நீளும் அழகில்
விழிகள் மொய்த்து விழிகள் மொழிந்த
முத்தச் சுடர்கள் பால்வீதி எங்கும்
பருவத் துகளாய் மின்னும்

இடையொரு பாகம் இழையோடு தாகம்
மடையேறு மோகம் கடைவாய் மீறும்
மனம் தின்னும் எண்ணம் தாங்கும்
மதுக்கிண்ணம் தேகம் ஆகும்

நினைவுகள் ஊற்றி நிறைக்க நிறைக்க
நிறைவுப் பெறாத பிண்டப் பாத்திரம்
கனவுகள் ஊற்றியும் காலியாகும் குடம்
உணர்வுகள் ததும்பத் ததும்ப

ஆசைகள் ஊற்றும் அட்சயப் பாத்திரம்
மாதொரு பாகம் மீதொரு காதல்
மீளாது சொல்லி மாளாது என்றும்
தீராது இன்பச் சுரங்கம்..!!

சிந்தும் மொழிகளில் சிணுங்கள் கொஞ்சும்
சந்தம் வழியும் சந்தனக் கிண்ணம்
சொந்தம் சொந்தம் என்றொரு சந்தம்
பண்ணில் பொழியும் உறவின்

இசையில் இசையும் இன்பக் கசிவில்
கனிந்து கனிந்து உயிரின் சுடரில்
காதல் மிளிரும் கவித்துவ அடர்வில்
பொழியும் அன்பே பூவுலகாம்.


Monday, December 23, 2019

விசும்பு...!!




பேரன்பு ஒழுகும் பேரண்டம் ஒன்றில்
கூரலகு ஓடுடைத்து வெளிவரும் குஞ்சென
மனம் உடைத்துப் பெருகும் அன்பு
பரிசளித்த நாள் ஒன்றை

மார்கழி மாதத்துக் கோல அழகாய்
மறுமுறை சொல்ல முயலும் மனம்
கார்முகில் சிந்தும் சாரல் பனியாக
தூவும் நினைவுகள் சிலிர்க்க...!!

அடர்ந்து பரவும் இரவில் தனிமை
அரசு நடத்தும் நிலவென நானும்
உலவும் உலகம் ஒன்று கேளீர்..!!
அம்புலி தானும் கதிராக

சுடர்விடும் மதிநாள் மனம் ஒளிரும்
படர் எண்ணம் தொடர் சிந்தையுள்
மூழ்கும் வண்ணம் கவின்பொழி காதல்
முகிழ்த்த நாணம் மொட்டாகி

நினைவு வெடிக்கும் சிந்தைக்குள் மலரும்
கனவுகள் ஆயிரம் காண்பது கண்ணல்ல..!!
உணர்வுகள் ஒருகோடி ஓரிடத்து ஒன்றாகி
திணறும் அண்டப் புரட்சியாக..!!

புலப்படாத உணர்வுக்கு புலன்தாமே ஆதாரம்
புரியாத மொழியாக புலன்கள் பேசும்
அறியாதப் பொருள்கள் ஆயிரம் உண்டிங்கு
உயிர் போடும் முடிச்சிக்கு..!!

விளங்காத விளக்கம் விளங்க விளக்கும்
விண்ணும் மண்ணும் பெருக வியக்கும்
அன்பும் அருளும் துளிர்க்க..! உயிர்க்கும்
பரண் துகள் பாரில்..!!

கழுமுனை காட்டும் சுழுமுனை கயிற்றில்
ஒருமுறை ஆடி அமரும் அடிமுனை
தாங்கும் நாடி மலரும் நான்கில்
தூங்கும் இடம் மெய்யாய்...!!

வாங்கும் தூண் தாங்கும் - பரண்
தான் தங்க பரண் தேடும்
பரம் ஆடும் பரமபதம் பாரீர்..!!
பரணும் பரமும் பம்பரமாய்

சுழன்றாட உழலும் கோலத் துகள்கள்
கழன்றாட கதிர்வீசும் காந்தம் பரல்கள்..!!
ஓடியோடி ஒளிவீசி வலைவீசும் சுடர்கள்
ஆதிசூழ் இருள் விழுங்க...!!

பாதியும் ஆதியும் கலந்த சோதியுள்
நாதம் நுழைந்த நளினம் விசும்பும்
விசும்பில் விசும்பல் ஒலிக்க – அசையும்
அண்டம் ஆடும் விளிம்பில்...!!

அடரிருள் அடர்ந்த பரவெளி சூழ்நிலை
ஊடறுத்துப் பாயும் ஊமை விந்தும்
அண்டத்துள் அடங்கும் தூலங்களில் துலங்கும்
ஒளியென விரிந்து காட்டும்

களிப்பில் களிக்கும் ககனம் காணும்
சுழிப்பில் சுழலும் புவனம் தானும்
விழிப்பில் விளங்கும் விசும்பின் கோணம்
பசும்புல் பனியில் பாரீர்...!!