Thursday, January 20, 2011

"கண்ணீர்..!"

இமைகளில் கரையும் மையில்
கரையும் உண்மைகளை கைகளில்
துடைத்து தொலைத்து விடுவாயோ...?!
கைக்குட்டைக் கொண்டு மறைத்து விடுவாயோ...?!

சற்றே சரியும் கூந்தலில்
உண்மைகள் மறையலாம் ஊருக்கு...
உள்ளத்தில் உயிர்த்திருக்கும் என்செய்வாய்...?!
கனவுகள் கலைந்ததாய் ஒரு கதை சொல்வாய்...
காதல் கலைந்ததை சொல்வாயோ..?

நடுங்கும் விழிகளில் ஒடுங்கும் பார்வையில்
உயிர்த்திருக்கும் காதலின் மிச்சங்கள்..!
கண்ணீரில் கரையா நினைவுகளை
உணர்வுகள் விழுங்கி உறைய செய்கிறாய்...!
உண்மைகளையும்தான்...!



கள்ளிக்கு வெள்ளைக் கண்ணீர் 
மீனுக்கு தண்ணீர்க் கண்ணீர்
பெண்ணுக்கு உண்மை கண்ணீர்...!

அழிக்க முடியா நினைவுகளையும்
அரிக்கும் உணர்வுகளையும்
ஒருசேர கரைக்கும் முயற்சி
கண்ணீர்....!

காணாமல் போன காலங்களின்
கனவுகளாய் போன கோலங்களின்
அரிதார அவதாரம் கண்ணீர்...!


கடைவிழியோடி தலையணையில் கொஞ்சம்....
நடுவிழி மீறி தாவணியில் கொஞ்சம்...
நாசிவழியோடி இதழ்கடை கொஞ்சம்...
உண்மைகளாய் உறைந்திருக்கும்
கண்ணீர்...!
உப்புகளின் நிறங்களில் ஒளிர்ந்திருக்கும்...
கண்ணீர்...!
உயிர் சிந்தும் பன்னீர்...!  

5 comments:

Chitra said...

கடைவிழியோடி தலையணையில் கொஞ்சம்....
நடுவிழி மீறி தாவணியில் கொஞ்சம்...
நாசிவழியோடி இதழ்கடை கொஞ்சம்...
உண்மைகளாய் உறைந்திருக்கும்
கண்ணீர்...!


.....அந்த படமும் கவிதையின் வரிகளும் - மனதை தொட்டன.

'பரிவை' சே.குமார் said...

Super....

சுவடுகள் said...

# நடுங்கும் விழிகளில் ஒடுங்கும் பார்வையில்
உயிர்த்திருக்கும் காதலின் மிச்சங்கள்..!

அருமை நண்பா, காதலுக்கு இப்படியும் விளக்கம் உண்டோ???!!!புதிதாய் இருக்கு. நன்று

சுவடுகள் said...

கள்ளிக்கு வெள்ளைக் கண்ணீர்
மீனுக்கு தண்ணீர்க் கண்ணீர்
பெண்ணுக்கு உண்மை கண்ணீர்...!

உண்மை. மாறுபட்ட உங்கள் சிந்திப்பு இரசிக்க வைக்கிறது.

Philosophy Prabhakaran said...

கண்ணீருக்கு யத்தனம் பரிமானங்களா... கவிதை அருமை நண்பா...