Tuesday, September 10, 2019

”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…? (சந்திரயான்)




காரணப் படைப்பு நான் – புவியில்
காரணப் பெயர் பெற்றேன் வளர்ப்பில்
கண்ணும் கருத்துமாய் சிவனால் உயிர்த்து
கைகளில் தவழ்ந்த குழந்தை தான்

மண்ணும் மாந்தரும் பயனுற நான்
விண்ணில் பறக்க…! வியந்த விழிகளில்
கலந்த கனவு நான் – என்னோடு
கலந்தே பயணித்த உறவுகள் ஆயிரம்

சுற்று வட்டப் பாதையில் நான்
சுற்றி வந்த வேளையில் – இளையோர்
காதலில் சுற்றியது என் மீதுதான்
விட்டுவிலகி சற்றே நான் சந்திரன்

நோக்கி நகர்ந்தாலும் – உற்ற காதலோடு
விடை கொடுத்த உறவுகளின் கனவை
சுமந்தே திரிந்தேன் அவர்களின் கண்மணியாய்
விண்வெளியில் விடியல் தேடிய மின்மினியாய்

பிறந்தகம் விட்டுப் புகுந்தகம் புகுந்த
பருவப்பெண் போல்தான் நானும் இங்கே
சந்திரனை வந்து சேர்ந்தேன், - என்னுள்
உருவான கருவினைச் சுமந்து - அம்புலி

மடியில் அழகாய் இறக்கி வைக்க
இடம்தேடி இடவலம் அலைந்தேன் – நிலவின்
மடியில் கிடத்தி நெஞ்சம் நிமிர
கொஞ்சம் நேரமானது – இடுப்புவலி வந்தவளாய்

இங்கும் அங்கும் அலைந்தேன் முடிவில்
இதமாய் பதமாய் பெற்றேன் – பிரிந்தேன்
பிறந்தன ஒன்றுக்குள் ஒன்றாய் இரண்டு
பிள்ளைகள் - மூத்தவன் ”விக்ரம்” விழித்தான்

உள்ளுக்குள் உறங்கும் பிள்ளை ”பிரக்யான்”
உலகம் வியக்க சிறகு விரித்து
ஒய்யாரமாய் பறந்தான் பாரீர்…! பாரீர்…!!
தந்தை கைப்பிடித்து நடைப்பழகும் பிள்ளை

வலம்வரும் அறிவியல் எல்லை - சந்திரன்
மடியில் கிடத்தும் வழியில் பயணம்
முடிவில் முடிவை நோக்கிய வழியில்
சற்றே சறுக்கி விழுந்தான் நிலவில்..!

ஒட்டகச்சிவிங்கி பெற்ற பிள்ளையாய் - முடிவில்
மானுடம் தந்த மகனை மடியில்
தாங்கும் நிலவின் தாய்மை பெரிதே..!
ஏங்கும் இதயம் எத்தனை எத்தனையோ..?!

பெருமையும் பொறுமையும் சுமந்தபடி சுற்றுகிறேன்
நல்லோர் காதில் நற்செய்தி சொல்லவே..!
அழாதப் பிள்ளையை தலைகீழாய் தொங்கவிட்டு
தலையில் மார்பில் தட்டித்தட்டி உசுப்பும்

வித்தை ஒன்று நிகழ்ந்துக் கொண்டிக்கிறது
விடாது முயன்று மூச்சுவிட வைக்கும்
வித்தையில் உயிர்த்தெழ இன்னும் சிலநாள்…
”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!?”.






3 comments:

தினேஷ்குமார் said...

எல்லாம் அவன் செயல்

Yarlpavanan said...

அருமையான வரிகள்

Yarlpavanan said...

படிக்க மறக்காதீர்கள்
நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html