Friday, September 27, 2019

"குறிஞ்சி..!" (பாகம் –5)




"குறிஞ்சி" (பாகம் –5)
பூத்தனப் புகுந்துப் பூந்தேன் குடித்து
முரலும் வண்டுகள் மயங்கி மதர்த்து
உருளும் உள்மடல் உறங்கும் பொழுது
பகலும் உருண்டு இருளாகும்

பால்நிலவு உலவும் பால்வீதி ஒளிரும்
சுடர்மீன்கள் பலவும் பார்த்து நகைக்க
மடல்மூடும் மலரில் மல்லாந்து கிடக்க
பனிப்பொழிந்து மொட்டு முனகி

இதழ் வெடிக்கும் இன்னிசைக்கு வண்டுகள்
இமை திறக்கும் விடியலில் கதிரவன்
ஒளித் தீண்டும் மடல்விரிய விட்டு
விடுதலை வானில் பறக்கும்

கள்குடித்த கருவண்டுகள்..! காடுகள் வளர்க்கும்
மந்தை மான்கள் ஆடுகள்மேயு முகடுகள்
கற்றைப்புல் மேல்கவனம் வைத்து எதிரிகள்
மீதிருக் கண்ணும் வைத்து

அச்சம் ஒழுகும் பார்வையில் நாளும்
மிச்சமாய் ஒழுகும் உயிர்…! தவிப்புடன்
தாவித்தாவி உயிர்ப்புடன் இருக்க புல்லுடன்
போராடும் கொடுந்துயர் வாழ்க்கை…!

அரியும் நரியும் அத்தொடு சேர்பகையும்
புலியும் பெரும்பூனை இனங்களும் வலிய
வழிமறிக்கும் உயிர்குடிக்கும் இடர்களில்,- ஒன்றை
இழந்து மற்றவை தப்பும்

தந்திரம் மரபெனக் கொண்டன மந்தைகள்..!
உயிர் வாழ்தலின் உன்னதம் புரிந்தே
ஒற்றுமை கற்றன அஃறிணை அவைகள்…?!
குற்றுயிர் நடுங்க குட்டிகள்

ஈனும்..! போராடிப் போராடிக் குட்டிகள்
பேணும்…!! ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை
கண்டு,- ஓரினம் காக்கும் வேறினம்
கண்டு நட்புப் பாராட்டும்

தகைமையும் உண்டு,- எவை எவை
எவற்றுக்கு உதவும் அவை அவை
அடையாளம் கண்டு ஒத்து வாழும்
வாழ்க்கைப் பழகியும் வாழ்ந்தன..!

கரியும் பரியும் கூட்டமாய் குடும்பமாய்
எதிரியும் வியக்க வாழ்ந்துக் காட்டின…!
கருதிய எதிரியை காலால் மிதித்தே
தப்பித்துக் காக்கும் தலைமை…!

ஒப்பிலாப் பண்புகள் ஒவ்வொன்றும் கற்றன..!!
கற்றவைச் சேர்ந்து மரபுகள் ஆயின.!
மற்றவை யாவும் மடிந்தே போயின
உற்றது உரைத்தேன் காண்..!

பல்லுயிர் பெருக்கமும் நெருக்கமும் பன்முகத்
தேவைகள் சார்ந்தே இயல்பாய் நடந்தன..!
தப்பிப்பிழைத்து தன்னினம் பேணல் எப்படி..?
கற்றது நின்றது காலத்தில்…!

அச்சுறுத்து மச்சங்க ளாயிரம் ஆயிரம்
அண்டவும் ஒண்டவும் இடம் தேடும்
அத்தேவை கொண்டவை தங்கும் இடம்
தான்தேடிக் கொண்டன வெற்பில்..!!

விலங்கொடு விலங்காகி விலங்குடன் பழகி
விளங்கிக் கொள்ள வேண்டியது ஏராளம்..!
முதுமயிர் பூத்த முரட்டுடல் பலம்
உதவாத விடத்தே கற்றல்

தொடங்கிய காலம் மந்திப் போல்
குந்தியும் தாவியும் குதித்தும் எஞ்சியப்
பண்புகள் யாவிலும் கற்றலும் தெளிதலும்
மானுட மரபுகள் ஆனது. (தொடரும்)

1 comment:

அனிதா ராஜ் said...

//இதழ் வெடிக்கும் இன்னிசைக்கு வண்டுகள்
இமை திறக்கும் விடியலில் கதிரவன்
ஒளித் தீண்டும் மடல்விரிய விட்டு
விடுதலை வானில் பறக்கும்

கள்குடித்த கருவண்டுகள்..! காடுகள் வளர்க்கும்// அழகான் எழுத்து நடை