Wednesday, September 25, 2019

குறிஞ்சி – (பாகம் –3)




குறிஞ்சி – (பாகம் –3)
அடர்மழைத் தொடரும் காலங்கள் – மின்னல்
இடிமழைத் தருமச்ச முடன்கொடு மிருள்
மிரட்டும் வெள்ளம் வழுக்கும் பாறைகள்
உருளும் பள்ளம் தொட்டுத்

தொடரும் முன்பனிச் சாரலும் தூரலும்
மூடுப்பனி பின்வரும் காலமும் – தனக்கு
கொடுமைத் தொடரும் வேளைகள் என்றாக
தப்பிக்கும் தருணம் தேடியப்

பொழுதுகள் கடும்பசி விரட்டக் காத்திருக்கும்
கொடுமிருகத் தொல்லை எட்டும் எல்லை
உயிரின் வேரில் ஊற்றிய அமிலம்..!
நெடுங்காலப் போராட்ட தொடர்ச்சியில்

நல்லனத் தீயன வகைப் பிரித்தான்
அஃறிணை யாவிலும் நன்மை தீமை
கண்டான் – புரிதல் கொண்டான் வாழ்வில்
வரும் இடர் களைய

வழியும் தற்காப்பு முறையும் தெளிந்தான்
மிருக என்பும் கல்லும் கைத்தடியும்
காப்புக் கருவிகள் கொண்டான் – இன்னும்
இடர்கள் தோறும் கற்றான்

தோற்றும் இழந்தும் கொடும் தாக்குற்று
இயற்கைத் தருமிடர் மிருகத் தொல்லை
மீண்டான் மரபுவழி இனம் காத்து
நீண்டான் உயிர்வாழும் பேரினமாக..!

ஓடியும் ஒளிந்தும் வாழ்ந்தவன் வழியில்
கோடையும் கொடும் வேதனையும் வந்தன..!
ஒட்டும் பொடியும் உச்சிமேல் வெயிலும்
கொட்டும் தேளென கொடுமை..!

ஒட்டிய வயிரும் காய்ந்த வாயும்
தள்ளிய நாக்குடன் தளர்ந்த நடையும்
நீருக்கும் உணவுக்கும் போட்டியும் வந்தது
உயிர்வாழப் போராடும் உயிர்கள்..! 

ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி – தற்காத்து
தம்தேவைக் காத்து பிழைத்தன…! ஒன்றை
ஒன்றுத் தாக்கியும் தப்பித்தும் போராடிப்
பதுங்கி வதங்கிப் பிழைத்தன..!

அருவிகள் காய்ந்து ஒழுகும் நீரில்
ஆங்காங்கு சேர்ந்தக் குட்டையும் குளமும்
சுனையும் மொத்த உயிர்களின் கூடாரம்..!
சொட்டும் நீரும் அமிழ்தம்..!!

சுடும் பாறைகள் காய்ந்த முட்கள்
முறிந்த மரங்கள் கூர்நுனிக் கிளைகள்
அடர்ந்த வனமும் அழிந்த நிலையில்
காய்ந்தப் புதர்கள் அண்டிய

உயிர்கள் அழிவதும் கருகும் வனத்தில்
போராடித் துளிர்க்கும் சிற்சில மரங்களும்
உயிரைப் பிடித்து நிற்கும் கள்ளிச்செடிகளும்
குடையாக நிழல்தரும் கோடை…!

மாண்ட உடல்கள் கிடக்கும் இடத்தில்
மீண்ட உயிர்கள் மோதும் களத்தில்
நீண்டப்பசி விரட்டும் வேகம் – பலம்
காட்டும் உணவுப் போர்…!!

இரசிக்கவோ உருசிக்கவோ இடமற்றக் காலம்
இரவோப் பகலோ வேட்டைகள் தொடரும்..!!
ஊணுண்ணி விரட்டும் உயிர்ப்பசிக் கொலைகள்
தானுண்ணத் தேடும் தவிப்புகள்…!

கடும்போர் நிகழ்த்தும் கோடையும் – அதனுடன்
கைக்கோர்த்த வாடையும் சுழற்றி அடிக்கும்
பெரும் கொடுமை நிகழ்த்தும் இயற்கை
கருகும் உயிர்கள் வீழும்…

குற்றுயிர் நடுங்கும் கொலைக் களம்
சிற்றுயிர் ஒதுங்க இடம் தேடும்
பாறையில் பூத்தக் கள்ளியில் தேனூரும்
கொல்லும் கோடையில் உயிர்வாடும்…! (தொடரும்)



1 comment:

'பரிவை' சே.குமார் said...

இவ்வளவு கொடூரமானதா...
தொடருங்கள் கவிஞரே...
வாழ்த்துக்கள்.