Monday, September 23, 2019

"குறிஞ்சி..!" – (பாகம்-2)

              குறிஞ்சி – (பாகம்-2)
காட்டை ஆள்வதும் அதிலூரும் மிருகங்களை
வேட்டை ஆடுவதும் கல்லில் கருவிகள்
கட்டுவதும் மரங்கள் வெட்டுவதும் – பற்றும்
பசித்தீரப் பெரும் பாடாகும்..!

விலங்குப் பழகி விளங்கிக் கொண்டு
பறவைகள் பார்த்து தீங்குகள் கண்டு
அஃறிணை கொடுத்த உயர்வினை கற்று
உயர்ந்து உயர்ந்து உயர்திணையாக

மானுடம் வளர்ந்த கதைகள் பேசும்
மலைகள் ஈன்ற குன்றுகள் தோறும்
மத்தளம் கொட்டும் அருவிகள் கூறும்
மாந்தர் இனத்தின் நிலைமாற்றம்

தான்தோன்றித் தாவர இனம் கண்டு
தான் உண்ணத் தகுந்தது தகாதது
சிற்றுயிர் கொண்டு சிறுதானியம் கண்டு
உணவின் வழியில் உணர்வு

ஊடாடும் உண்மை தெளிந்தான் – மனதால்
உடலால் உறுதியை பேணும் உன்னத
உணவுக் கொடுக்கும் காடுகள் காத்து
உடனுறை உயிர்கள் காத்து

அல்லும் பகலும் அலைந்த குன்றுகள்
மடுக்கள் சரிவுகள் எங்கும் - தங்கும்
இடம்தேடி தானுன்ன உணவும் தேடி
முடிவில் குறிஞ்சிப் பெண்ணோடு

முயங்கும் வாழ்க்கை தெவிட்டாத நல்லின்பம்
திணையோடுத் தேனும் தின்னக் கொடுத்த
துணையோடு தானும் கன்னம் கொடுத்துக்
காதல் விளையாடும் களம்

மாதர் மீதொரு மயக்கம் மீளாது
வேட்டை வழி வீரம் காட்டி
கயல்விழிக் காட்டும் மடந்தை மடித்தேடும்
காதல் பூத்த மனம்

தனக்கும் தன்னைச் சேரும் துணைக்கும்
தானே தேடித்தேடி தேவை தீர்க்கும்
தேவையே தனிமனிதன் ஏற்ற முதல்
பொறுப்பு இப்புவியுள் காண்

ஆடையற்ற ஆடவரும் பெண்டிரும் ஆங்கே
ஆர்வமும் ஆசையும் கொண்டுலாவ தன்னை
மூடிமறைத்த மயிர்ப் போர்வை உடுத்தி
கூடிநிதம் மகிழ்ந்த நிலம்

குளிரும் கோடையும் கூடிக்கூடி வாடையும்
வருத்தும் வாழ்க்கை ஓடியாடி பேடையொடு
தழைக்க இயற்கை விடுக்கும் இடர்களில்
பிழைத்தல் என்பதே பெரும்பாடு..!

மனிதன் இயற்கையை கற்றது,- குறிஞ்சியில்
தொடங்கி நீள்கிற மரபுத் தொடரில்
அடங்கிக் கிடக்கிற ஆற்றல் மூலங்கள்
எதிர்ப்பில் வாழ்விக்கும் ஏணிகள்…!

அஞ்சியஞ்சி நெஞ்சம் தவிக்கும் இடர்கள்
ஆயிரமுண்டு – விஞ்சும் வழிகள் கண்டு
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மரபின் நீட்சியில்
மானுடம் துளிர்த்த மலைக்காடு…!

உணவைச் சேமிக்கும் உன்னதப் பழக்கம்
உற்றதால் உற்ற இடர்களால் கற்றதே…!
உலர வைத்த உணவுச் சேமிப்பு
உணரத் தேவை உற்றக்காலை

பக்குவப் பகுமானம் பெற்றதே - மாந்தர்
பகிர்ந்து உண்ணும் இனமாக மாற
பசிப்பிணிக் கொல்லும் பருவங்கள் யாவும்
பாடங்கள் நடத்தும் காலம்..!   (தொடரும்)



1 comment:

அனிதா ராஜ் said...

Aruvi pol alagai ....thodarnthu yeluthungal