Saturday, September 21, 2019

”குறிஞ்சி..!” (பாகம் –1)




      ”குறிஞ்சி..!”  (பாகம் –1)
நிலமடந்தை பருவம் எய்திய பருவம்
ஊண்பொதி கைப்பூப் பெய்திட உருவம்
உண்டான மாற்றம் கொண்ட கொங்கை
முகடுகள் முளைத்தக் காலம்

உயிர் வளர் வளம் யாவும்
உட்பொதி ஊணுள் தாங்கி – பயிர்
உலகாகு முகடுகள் தாங்கும் மயிர்
செறிந்த வளம் காடு

கார்முகில் உலாவும் கொங்கைக் காம்பில்
காமுற்றுப் பொழியும் வெள்ளம் வாங்கி
வழியும் அழகில் பிறக்கும் அருவிகள்
உயிர் செழிக்க ஓடிப்பாயும்

பள்ளங்கள் பக்கத்துப் புடைப்புகள் நடுவே
செல்வங்கள் சேருமிடம் செழிப்பில் – இயற்கை
நலம்பேண சிற்றுயிர் தோன்றிய இடம்தான்
”குறிஞ்சியாம்” கேள் குலமகளே..!

அருவியும் குருவியும் எழுப்பும் இசையில்
அகடும் முகடும் செழிக்கும் செழிப்பில்
பல்லுயிர்ப் பெருக்கம் பலகாலம் நடக்க
பரிணாமம் கண்டதுகாண் மானுடம்…!

மண்வரு முன்னே மானுடம் வந்தது
பொன்னெனத் திகழ்ப் புவியுள் உயிர்த்த
மாமகுடம் மானுடம்…! நிலத்துள் ஊர்ந்து
நடந்து நிமிர்ந்த பரிணாமம்

காடுகள் தோறும் காமுற்று காமுற்று
பண்பட்ட காலம் முளைத்த காதலில்
பருவம் பூத்துச் சிரித்தது குறிஞ்சி…!
மனிதம் பலகாலம் பண்பட்டது

உயிர் உடல் தேவை கடந்து
அறிவுத் தேடல் தொடங்கிய காலம்
உடல்மொழி பிறந்தது – ஊமைகள் ஓலமிட்ட
ஓசைகள் சுருங்கி விரிந்து

சொற்கள் ஒலிக்கப் பிறந்தது முதல்மொழி..!
கற்கால ஒலிகள் காலப்போக்கில் செதுக்கி
கவிப்பாடும் மொழியாகி இயலாய் இசையாய்
இயற்கை வழியில் வளர்ந்தது..!

ஒலிக்கும் ஒலிகள் உள்வாங்கி உள்வாங்கி
ஒலிக்கும் கருவிகள் உருவாக்கி உருவாக்கி
ஒலிக்கும் ஒலிகள் ஒலிக்கும் பொருள்வாங்கி
ஒலியை உயிரின் மொழியாக்கி

மொழிந்து மொழிந்து மொழியை வளர்த்து
அளந்து அளந்து காலம் கணித்து
உணர்வுக்கு உயிர்ச்சுவை ஊட்டும் திறம்
வளர்த்து உறவுக்கு பெயரிட்டான்

உணவுக்கு ஊரும் நிலத்துக்கு காணும்
வனத்துக்கு வானுக்கு – தாவரம் விலங்கு
தம்முடன் தொடர்புடை யாவுக்கும் தான்
வைத்தான் காரணமாய் பெயர்..!

உணவைத் தேடியவன் உள்ளுறை மருத்துவம்
உணவில் கண்டான் உற்றநோய் தீரவே…!
கற்றல் என்பது காலத்துடன் சேர்ந்தே
கற்றது மானுடம் கருத்தாக…!

உண்பதும் கற்பாறைக்குள் உறைவதும் தொடர
காண்பதை கோடிழுத்து காண்போர் காண
வரைந்த கிறுக்கல்கள் முதலெழுத்து,- ஆம்
கற்பாறைகளே மானுட கரும்பலகைகள்..!

குறியீடுகள் எண்ணக் குறியீடுகள் தாங்கும்
குறிப்பில் குறிப்பு உணர்த்தும் உணர்வுச்
செறிப்பில் சிறப்புற பழகும் பண்பும்
கற்றான் கற்றல் அறியாமலே…!   (தொடரும்)


2 comments:

அனிதா ராஜ் said...

Arumai...

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பா...
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...