Friday, June 17, 2011

"உயிருக்கு நீ..."




ஒற்றைச் சொல்லில் உதறிவிட 
எப்படி முடிந்தது உன்னால்..?


மனதார விரும்பிதானே 
"மாமா" என்றழைத்தாய்.


உன் விடியல்கள் யாவும் 
என் முகம் பார்த்த பொழுதில்


"அத்தான்" என அத்தனை ஆசையாய்
ஆவி உருக அழைத்தவள் நீ.


உருக உருக உயிர் குடித்த 
உறவல்லவா நீ.


மருகி மருவித் திரிந்து 
மறுதலிக்கும் மாயம்தான் என்ன..?


முத்தங்களைக் கூட 
மூச்சுமுட்டத் தந்தவள் நீ.


மனம் இழைந்து குழைந்து 
ருசித்த அன்பை எப்படி மறந்தாய்..?


விழிகளில் காதல் தேக்கி வைத்து
காத்திருந்தக் காலம் மறந்தனையோ..?


விக்கித்து நான் நிற்க 
விலகி நிற்கும் காரணம்தான் என்ன..?


இன்னுமொருமுறை உன்னை 
எங்கே காண்பேன்..?


இதழ்களில் இட்ட முத்தம் 
இன்னும் இருக்குதடி ஈரமாய்.


மனதுக்குள் அடைக்காக்கும் 
உன் மெல்லிய சிரிப்பொலிகள் 


என்னைப் பேசவிட்டு நீ
இரசித்த பொழுதுகள்....


என்னைப் பேசவிடாமல் நீ
மட்டும் பேசியப் பொழுதுகள்...


இரண்டுக்கும் இடையில் என்
இப்போதைய உலகம் உருள்கிறது.


மிச்சமென இருப்பதெல்லாம் 
உன் நினைவுகள் மட்டுமே.


அச்சமென்னப் பெண்ணே..?
அருகில் வர...


விழிகளால் தீண்டிய காதல்
மொழிகளால் வளர்ந்த நேசம் 


அத்தனையும் உதறி என்னை
பிணமாக்கி விட்டவளே..!


இரணங்களில் மருந்தென 
உன் நினைவுகள் பூசுகிறேன்.


இதயத்தின் விருந்தென இந்தக் 
கவிதை வாசிக்கிறேன்.


மறந்தனையோ...? அன்றி எனைத் 
துறந்தனையோ..? யானறியேன் பேதையே..!


ஈழத்தை இழந்த தமிழனாய்
இழந்துத் தவிக்கிறேன் உன்னை.


சொந்த தேசமும், தனக்கொரு 
சொந்த நேசமும் இல்லாத மனிதன்


பூமியின் சாபக்கேடு...! புனிதமே 
புரிந்து வா.


கணங்களை கனக்க விட்டவளே..!
காத்திருக்கிறேன்... 


கண் மூடும்வரை
உனக்காக மட்டும்.


உரிமையாய் வந்து 
உயிருக்கு வாழ்வு கொடு.


இல்லை... ஒருமுறை மட்டும் வந்து
"உயிர்த் தண்ணீர்" ஊற்றிச் செல்.      

4 comments:

மதுரை சரவணன் said...

arumai.. vaalththukkal

காயத்ரி வைத்தியநாதன் said...

காதல் கொண்ட மாமாவை விட்டுப் பிரியவும் மணம் வந்ததோ கன்னிகைக்கு?.........அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம் என்ன மக்கா புதுசா பட்டைய கிளப்புறீங்க சூப்பரா இருக்கு....

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku.... unnidam irunthu satrey vithiyasamana kavithai....

ama sollavey illai... ithuvum nadakuthaa?
nadakkattum nadakkattum...