Tuesday, June 14, 2011

"விலையாகிறது வாழ்க்கை"


மானத்தை மறைக்க
தேகத்தை விற்பவள் நான்.

தேகம் தீண்டும் மோகம்
அறியுமா என் தாகம்.

விலைக்குப் பேசப்படும் பொழுதுகள்
விதியை மாற்றாதோ....?

மனதை இழக்காமல்
உடம்பை விற்கிறேன்...

விற்க வேறெதுவும்
இல்லாத காரணத்தால்.

பட்டினிக்கு படுக்கையில்
உணவாகி பின் பசித் தீர்கிறேன்.

பட்ட மரம் போல்
பகலெல்லாம் வாழ்கிறேன்.

உற்ற துணை யாருமில்லை
உருப்படவும் வழி இல்லை.

கற்றவர்கள் வருகிறார்கள்
காசு மட்டும் தருகிறார்கள்.

இச்சைப்படி ஆட்டுவித்து
இம்சித்துப் போகிறார்கள்.

வம்சத்து குலவிளக்கு
வாழ்ந்திருக்க விதிவிலக்கு.

பகட்டு மனிதர்கள் பகலெல்லாம்
தாயம் உருட்ட....

நான் பட்ட காயங்களில்
பட்டினத்தார் சிரிக்கின்றார்.

இரவுக்கு மிச்சமாய் 
இடுப்பு வலி எனக்கிருக்கு.

தசைத் தின்னும் அவசரத்தில்
பிணமாகும் என் தேகம்.

பிழைப்புக்காய் பிழைத்திருக்கேனா...?
பிழைத்திருக்க பிழைத் திருத்துவேனா..?

என் உடல் தொட்ட எவனும்
என் மனம் தொடாத காரணத்தால்

மனதோடு மட்டும் கற்புக்கரசி நான்
கற்பு என்பது மனதுக்குதான் என்றால்.

பணத்துக்கும் வாழ்க்கைக்கும்
முடிச்சிட்டது யார்...?

பணத்தால் உலகை வாங்கும் உலகம்
என்னையும் வாங்கியது விலை பேசி.

விற்றது என் வாழ்வு.
விற்க சொன்னது என் வறுமை.

மனதார சொல்கிறேன்....
என்னை முதன் முறையாய்

பெண் கேட்ட வரன்
கேட்டுவிட்ட தட்சணை

வாங்கும் அளவுக்கு இப்போ
கையில் காசிருக்கு.

வாழ்க்கைத்தர அந்த வரன்
இப்போ வருவாரா...?

மானத்தை காக்க
தேகத்தை விற்பவள் நான்.

மனதோடு மட்டும் கண்ணகி நான்.
எந்தக் கோவலனும் தீண்டா மாதவி நான்.

நிற்க நிலம் இருந்தால்
விற்றுத் தந்திருப்பேன்.

விற்க வீடிருந்தால்
விற்று "மறுவீடு" போயிருப்பேன்.

மிச்சமாய் இருப்பது நான் மட்டும்தான்
விற்க முடிந்தது என் உடல் மட்டும்தான்.

மனதைக் கேட்க யாருமில்லா தேசத்தில்
மற்றதெதுவும் பாவமில்லை.

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாவ்...

////
மனதைக் கேட்க யாருமில்லா தேசத்தில்
மற்றதெதுவும் பாவமில்லை.//////

புல்லரிக்கிறது இந்த வார்த்தைகள் கோவத்தோடு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓவியம் அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டாச்சி.

தமிழ்க்காதலன் said...

வாங்க கவிதை வீதி சௌந்தர், வணக்கம். உங்களின் அன்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

Kayathri said...

பிழைப்புக்காய் பிழைத்திருக்கேனா...?
பிழைத்திருக்க பிழைத் திருத்துவேனா..?
---வலி நிறைந்த வினா.

மனதார சொல்கிறேன்....
என்னை முதன் முறையாய்

பெண் கேட்ட வரன்
கேட்டுவிட்ட தட்சணை

வாங்கும் அளவுக்கு இப்போ
கையில் காசிருக்கு.

வாழ்க்கைத்தர அந்த வரன்
இப்போ வருவாரா...?
----தட்சிணை கேட்பவர்க்கு சவுக்கடி.

மனதைக் கேட்க யாருமில்லா தேசத்தில்
மற்றதெதுவும் பாவமில்லை
......நியாயமான கோவம்

மிகவும் அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை! வாழ்த்துக்கள்..! அந்தப் படமும் மிக நன்றாக உள்ளது!

தமிழ்க்காதலன் said...

வாங்க காயத்ரி, வணக்கம். உங்களின் வருகையும், கருத்தும் நெஞ்சைத் தொடுகிறது. தொடருங்கள் ஆதரவை. நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க ராமசாமி அண்ணா, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

arnaiyana varikal...
kavithikku kavithaiyaai azhagana photo....
kalakku thangam.

மதுரை சரவணன் said...

மிகவும் மனதை வருடி விட்டது இந்த கவிதை... வாழ்த்துக்கள்