Thursday, February 20, 2014

”முரண்தொடை...!”

நுனியில் பற்றியத் தீயின் நாக்குகள்
கசியும் புகையை நுகரும் மனிதம்
இசையின் சுரங்களை உணர்தல் இயலுமா..?
எரியும் புல்லாங்குழல் கேட்கிறது...

விளக்கின் ஒளியில் விழுந்து இறக்கும்
இரவு வாழ்க்கை வாழ்ந்து முடிக்கும்
விடியலில் எழும் கதிரவன் ஒளியால்
கவரப்படாத விட்டில் பூச்சிகள்...

பூக்களைத் தின்று இலைகளில் கூடுகட்டும்
புழுக்களின் பசியினில் அழிந்திடும் செடிதனில்
அழகிய தலைமுறை பிறந்திட வேண்டியே
ஆழமாய் வேர்களின் பயணம்...

புழுக்களை கொன்று புரதம் எடுக்கும்
வன்மம் காட்டும் வனச்செடி இன்னும்
வண்டுகள் தின்று வாழ்ந்திருக்க கூடுமெனில்
வேர்களின் வேலைதான் என்ன...?

ஒட்டகம் குடித்த நீரைக் குடிக்க
ஒட்டகம் கொல்லல் புனிதம் என்னும்
பாலையின் தர்மம் பரவிய உலகம்
ஒட்டகம் கடிக்க ஒவ்வுமா...?

இழுபறி நிலையில் இருக்கும் இறைச்சியில்
ஊசலாடும் உயிரின் வேதனை உணர்தல்
கோரைப்பல் கொண்டு கிழிக்கும் பசிக்கு
காலம் காலமாய் இரையாமோ...?

கொல்லலும் வெல்லலும் துள்ளிய துள்ளலும்
ஒருகோடியில் மறைந்த அதிசயம் கண்டும்
ஆயிரம் காரணம் அடுக்கியே காட்டும்
ஆறாம் அறிவை என்சொல்ல..?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்...