Thursday, March 06, 2014

”தகிப்பு....”

கொந்தளிக்கும் உணர்வுகளில்
கொப்பளிக்கும் நினைவுகள்
சப்தமிட்டு வெடிக்கின்றன
குமிழ்களாய்.....

இறப்புக்கும் பிறப்புக்குமான
நீண்ட இடைவெளியை
இட்டு நிரப்பத் தெரியாமல்
மனத் தடுமாற்றம்....

குண்டும் குழியுமான
மனித உறவுகளில்
மடிந்து போகிறது என்னிடம்
மிச்சமிருக்கும் மனிதம்.....

புத்திக்கும் தேடலுக்குமான
நீண்ட போராட்டத்தில்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது அனுபவம்....

நிகழ்வுகளின் நிசங்களில்
கோரைப்பற்கள் ஈட்டிகளாய்
கிழித்து எறிகிறது
உள்ளிருக்கும் துணிச்சலை....

பரிசுத்தமான மனதில்
பலகார பட்டிமன்றம்
நடத்துகிற காலம்
சிலந்தி வலையாய்....

ஆயுதம் பிடித்தக்கைகள்
அமைதியின் அடையாளம்
பெருவெளி வெடிப்பாய்
சிரிக்கிற மனசாட்சி....

கொலையும் புனிதம்
கொல்வதும் புனிதம்
சத்தமாய் இல்லாமல்
சாட்சியும் இல்லாமல்....

சைவவிரத அரிமாக்கள்
சதைதின்ன காத்திருக்கும்
சந்தர்ப்ப அவகாசத்தில்
இழுபறியாய் வாழ்தல்....

துப்பாக்கியை முத்தமிட
இதழ்களை பழக்கப்படுத்த
ஈரமும் இரத்தமும்
காய்ந்த மனங்களில்....

கண்ணீர் ஆவியாகும்
கன்னத்தின் தகிப்பில்
எண்ணமும் எரிகிறது
ஏக்கப் பெருமூச்சாய்....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...

'பரிவை' சே.குமார் said...

நன்று கவிஞரே...