Sunday, March 09, 2014

”இதயத் தூறல்...!”


இனியென்ன இரவையும் - என்
இனிய கனவையும் துரத்தி விட்டாய்
எந்த நொடியும் இரத்தப் பிரவாகம்
எனக்குள்ளே நின்று போகலாம்...

அந்த நொடிவரை இன்பம் பாய்ச்சும்
ஆனந்தம் தந்து கொண்டிரு...
ஆலாபனைகள் செய்யும் என்
ஆசைகளுக்கு எப்போதும்...

என்னை இயக்கும் இசையாயிரு
எப்போதும் உள் இரசிக்கும்
இதய கானங்களை என்னருகே
பாடிக்கொண்டிரு....

உணர்வுகள் குவித்த இதழ்களில்
உன்னை கொடுத்து என்னை
உனக்குள் இட்டு நிரப்ப இதயம் தா..!
இதழ்களின் வழியே....

புவியென்ன கவியென்ன
இதயமாற்ற தேடலுக்கு
அனிச்சையான ஆரம்பம்
அச்சாணியாகி கிடக்கிறது....

சில்லுகள் எத்தி விளையாடுகிறாய்
என் இதயத் தடாகத்தில்
உணர்ச்சி அலைகளில்
உயிர்த் தெறிக்கும் அழகை இரசிக்கிறாய்...

பிம்பங்கள் காட்டி நிசங்களை
மறைத்து கண்ணாமூச்சி காட்டுகிறாய்
கண்களும் மனமும் ஒருகாட்சி காண
கதவுகள் திறந்து காத்திருக்கிறேன்...

இமைகளில் வழங்கப்படும்
முத்தமாய் கண்களை அறியாமல்
கனவுகள் காட்டும் இரவினை
கவிதையின் காதலியாக்குகிறேன்...

இந்த இரவுகளிலும் - எனக்கான
இந்த கனவுகளிலும் எழுதப்படும்
உணர்வுக் குவியல்களை
உனக்கென்றே எழுதி வைக்கிறேன்...

இதுவும் கவிதை என்று...
இரசித்துவிட்டு போகாதே.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு உரிமையான கண்டிப்பு...

வாழ்த்துக்கள்...