Sunday, March 02, 2014

”முழங்கு தமிழ்...!”

எட்டுக எட்டுக வையகம் எட்டுக
கொட்டுக கொட்டுக வானுர கொட்டுக
மானுடம் பிறந்த மண்கதை கொட்டுக
மாந்தர் குழாம் காதில் உறைக்கவே

தட்டுக தட்டுக பண்ணிசை தட்டுக
பைந்தமிழ் பாடியே நல்லிசை தட்டுக
வாய்மொழி யாம்தமிழ் வையகத் துதித்த
தொன்மொழி யாம்புகழ் கொண்டிட கொட்டுக

இலக்கண மரபுகள் பிறந்ததும் தமிழிலே
இசையியல் மரபதன் ஊற்றாம் தமிழ்
இன்பத்தை பகிரவே இயல் இசைத்தமிழ்
உணர்வெலாம் ஊற்றாக பொங்கிடும் தமிழ்

பன்னெடுங் காலமாய் பாடிய தமிழ்
தன்னெடுங் காவியம் மேவிய தமிழ்
பொன்னேடு பொதிந்த பொக்கிசத் தமிழ்
என்னாடு தந்த உயருயிர் தமிழ்

பன்னாடுங் கடந்தே பல்கிய தமிழ்
பன்னாடும் கலந்தே ஒல்கிய தமிழ்
உள்ளாடும் உணர்வென ஓதிய தமிழ்
உன்னுள்ளே ஊணிலே ஊறிய தமிழ்

கசையடி பட்டும் இசையடி சொட்டும்
கவின்மிகு கவிதைகள் இதழ்வழி கொட்டும்
புவின்மிகு காதலும் புண்ணிய சாதலும்
தன்னுடன் பிறந்த காப்பென கொட்டும்

வானிசை வயலிசை வயங்கு கொல்லிசை
தேனிசை பூவிசை புயலிசைப் பூட்டியே
பொற்சபை சிற்சபை பொன்னொளி வீசியே
எண்ணருங் காப்பியம் தன்னுலே கொண்டிடும்

தமிழ்மறை ஓங்கிய தனித்தமிழ் நாடே
தமிழரை சுமந்தே தமிழை வளர்த்த
தமிழர்தம் பூமியில் அமிழ்தம் தமிழே
தான்சென்ற திசையெங்கும் தழைத்திடு தமிழே

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ் பொங்குவதை ரசித்தேன்...

வாழ்த்துக்கள் பல...