Saturday, March 01, 2014

”தமிழின் தாகம்...!”

என்னை நீ கொன்றதும்
என்னுடல் சதை நீ தின்றதும்
எலும்புகள் உடைத்து மென்றதும்

புத்தியில் உறைந்தே கிடக்கிறது
புழுக்களென எண்ணி நசுக்கியதும்
புன்னகை வீசி மறைத்ததும்

புதைந்தா போய்விடும் பூமியில்....

உன் தாகத்துக்கு
என் கண்ணீரை குடித்தாய்
உன் தேகச்சத்துக்கு

என் குருதி உறிஞ்சினாய்
எத்தனை அவலம் உண்டோ
அத்தனையும் நிகழ்த்தி காட்டியது

நிழற்படமாய் இருக்கிறது
நினைவுகளில் என்றும் அழியாது...
நீ என்னை கொன்றது

உன் விழிகளின் இமைகளில்
உறுத்தும் சிறுதூசு நான்
உன் உள்மனம் எழுப்பும்

கேள்விகளில் என் வேள்விகள்...

பிணம் தின்ன நீ
பழகிய நாட்களில் தான்
சதை இழந்தேன் என்பதை மறவாதே...

பின்னிய சதிவலைகளில் தான்
பின்னும் உயிர் இழந்தேன்
பிழைகளின் பிறப்பிடமே - என்

வரலாற்று பிழைகளின்
பிறப்பிடமாய் நீ மாறிப்போவாய்
தகப்பன் கறிதின்று உயிர்வாழும்

பிள்ளை நீயென்று அறியாது போனேனே...

தவறாது உன் தவறுகள்
தப்பாது என் வரலாற்றில்
தடங்கள் பதிக்கும் மறவாதே....

இதழ்களில் முத்தமிட்டு
இடையில் கத்தி சொருக கற்றதெங்கே...?
இன்னும் பிழை செய்....

குற்றுயிராய் இருந்த என்னை
குலைநடுங்க கொல்லும் வித்தை
குழிகளில் போட்டு புதைத்து

விளம்பரங்களில் அமைதியை
வீசி சென்ற புதிய யுக்தி
பூசிமறைக்க முடியாத உண்மைகளை...

நாசிமுழுக்க சுமந்து திரிகிறேன்
நாடு நாடாய் அலைந்து கழிகிறேன்
நாற்நாறாய் கிழிந்து மடிகிறேன்

விழுந்து கிடக்கிறேன் விடியலுக்காய்...

பிறந்த மேனியாய்
பிணம் தின்ன விரும்பிய
தினங்களில் தான் புதைக்குழிகள்

பிறந்தன என்பதை மறவாதே..!
பிழைகளில் எழுதிய பிழையான
உன் வரலாறுகள் திருத்துவேன்

ஆணிவேரிலா ஆலமரம் நீ...
ஆழ்மனம் கொன்ற மானுடம் நீ...
பாழும் உலகில் பழிசுமக்க போகிறாய்

கற்பை சூறையாடி உனக்கொரு
கல்லறை கட்டிக்கொண்டாய்
கடவுளை கொன்று விட்டு...

2 comments:

Unknown said...

மிகச்சிறப்பாக நெஞ்சைத்தொடும் வரிகள்...//உன் தாகத்துக்கு
என் கண்ணீரை குடித்தாய்
உன் தேகச்சத்துக்கு

என் குருதி உறிஞ்சினாய்// இரத்தத்தால் எழுதப்பட்ட வரிகளாய் ....!

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் சாட்டையடி...!