Tuesday, August 16, 2011

”கேள்விக்குறி..?”



இதயத்தில் பூத்த நறுமலரே...!!
இன்பக் கோட்டையின் வாசலுக்கு
வரவழைத்து கொன்று போட்டவளே..!!

கொட்டும் குருதியில் வழியும்
அன்பையன்றி யான் அறிந்ததென்ன..??
அறியாமல் விக்கித்து விழிக்கிறேன்.

மிஞ்சும் எழில் கொஞ்சும் தமிழ்
விஞ்சும் சுகம் தந்து வீழ்த்தும்
மதியின் மயக்கம் என்ன...??

கடல் நீந்தும் நத்தைக்கு
கரைக் காட்டும் மேகமாய்
கை காட்டிப் போனவளே..!!

எட்டாத் தொலைவில் இருந்தபடி
எட்டி உதைக்கும் கலையை
எங்கே கற்றாய்...??

நினைவுகளில் தீ மூட்டும்
உன் உணர்வுகளை என்ன செய்ய..??
பருத்தியாய் பற்றுகிறது பாழும் மனம்.

உற்றத்துணை நீ பெற்றதும் கற்றதும்
உழலும் மனம் உதறத்தானா..?
சுழலும் நினைவுகள் சுடுகிறது.

குற்றாலத்தில் கொட்டுகிறது
எரிமலைக் குழம்பு..!!
நயாகராவில் வீழ்கிறது
கொதிக்கும் கோப உணர்ச்சிகள்..!!

குளிக்கும் எண்ணமும்...
குதிக்கும் எண்ணமும்...
தற்கொலை செய்து கொள்ள
தவித்து நிற்கிறது வாழ்க்கை.

வெறித்துப் பார்க்கும் விழிகளில்
விழுந்துக் கிடக்கிறாய் பிம்பமாய்...!!
மனம் பட்டும் படாமலும்,- உனைத்
தொட்டும் தொடாமலும்...!!

உடைந்து நொறுங்கும் கண்ணாடியாய்
சிதறிக்கிடக்கும் எண்ணங்களில்
எகிறிக் குதிக்கிறது எதிர்க்காலம்..!!

விடைத் தேடுதல் வேட்கை...
விடைத் தேட வைக்கும் வாழ்க்கையில்
விஞ்சி நிற்கும் கேள்விக்குறிகள்...??

தீமைகள் தவிர்த்த ஊமையின் மனம்
தீயினால் பொசுங்கும் வேதனை யாரரிவார்..??
காணாமல் ஏங்கும் கண்களில் திராவகம்...!!

வளர்பிறைக் காண வந்தவனை
தேய்பிறை வந்து திதிக் கேட்கிறது..?!
வாசக்காலில் நின்று சிரிக்கிறது விதி.

பாசத்தில் மூழ்க விட்டு
பக்குவமாய் மூச்சைத் திணறவைக்கும்
நேசத்தை நெஞ்சில் சுமக்கிறேன்.

விடிந்தும் விடியாதப் பொழுதுகளில்
தொடர்ந்து தேடுகிறேன்..... 
தொலைந்துப் போன உன்
காலடித் தடங்களை.....!

5 comments:

பிரேமி said...

"வளர்பிறைக் காண வந்தவனை
தேய்பிறை வந்து திதிக் கேட்கிறது..?!" அருமை...

தொலைந்து போன காலடித் தடங்கள் விரைவில் உங்கள் கண்களுக்கு கிட்ட வாழ்த்துகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை தேன் மழை.....!!!

காயத்ரி வைத்தியநாதன் said...

விடைத் தேட வைக்கும் வாழ்க்கையில்
விஞ்சி நிற்கும் கேள்விக்குறிகள்...?? கேள்விக்குறிகள் நிறைந்ததே வாழ்க்கையாகிறது பலருக்கு....

குற்றாலத்தில் கொட்டுகிறது
எரிமலைக் குழம்பு..!!
நயாகராவில் வீழ்கிறது
கொதிக்கும் கோப உணர்ச்சிகள்..!!.........உணர்ச்சிப்பெருக்கு...

Nagaraj Nachiappan said...

கவிதை அருமை

காயத்ரி வைத்தியநாதன் said...

//கொட்டும் குருதியில் வழியும்
அன்பையன்றி யான் அறிந்ததென்ன..??
அறியாமல் விக்கித்து விழிக்கிறேன்.//

//வெறித்துப் பார்க்கும் விழிகளில்
விழுந்துக் கிடக்கிறாய் பிம்பமாய்...!!//