Tuesday, April 26, 2011

"வருத்தமுற்று..."


வருந்தி அழைத்தும் நீ வாராதிருப்பதென்ன...?
வருத்தமுற்று நான் வாட வாளாயிருப்பதென்ன...?
பொருத்த மற்றவொன்றைப் போற்றி வளர்ப்பதென்ன...?
பொன்மலரே..! கண்மலராயோ என் மடியில்..!

கறுத்த முகம் வெளுத்த தென்ன..?
சிரித்த முகம் சிறுத்த தென்ன...?
கருங்குழல் போர்த்தி இருண்ட முகமென்ன..?
காட்டாற்று வெள்ளம் கைக்கட்டி நடப்பதென்ன..?

பொற்சிலையென போற்றி வைத்தேன் புன்னகையே.!
கற்சிலையாய் உடைந்து காணாமல் போனதென்ன..?
இருட்டு வெளியெங்கும் இன்முகம் தேடுகிறேன்.
உருட்டும் உன்விழிகள் காணாமல் வாடுகிறேன்.

காலவெள்ளம் தந்த காதல் வெள்ளம்
நதியென பெருக்கெடுக்க நான் மட்டும்
நீந்துகிறேன்,- நீந்தக் கற்றுத் தந்த
நீ மட்டும் கரையேறிப் போவதென்ன...?

ஊற்றுப் பெருக்காய் ஊறிவரும் அன்பில்
உன்னை நனைக்க ஓடிவரும் காதல்
உனக்கோ வாழ்வின் கரையில் மோதல்
வருத்தமுற்று வாடுவது நம் வாழ்க்கை.

இன்னும் இலை விடாத உனக்கு
இலையுதிர்க் காலம் இப்போது எதற்கு..?
முளைவிட்டு தளிர்விடு முல்லைக்கொடி நீ
முழுவதும் அள்ளிக் கொள்கிறேன் நான்.

பிரசவக்காலப் பிரளயம் மனதில் மூள்கிறது
பிறவிகள் யாவும் உன்நினைவில் மூழ்குகிறது
நொடிப்பொழுதும் தாங்கா வலி எனக்கு
யுகம்தோறும் துணையாய் நான் உனக்கு.

வருந்தி அழைத்தும் வாராதிருப் பதென்ன..?
வருத்தமுற்று நான் வாட வாளாயிருப்பதென்ன..?

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அசத்தல்..

MANO நாஞ்சில் மனோ said...

//காலவெள்ளம் தந்த காதல் வெள்ளம்
நதியென பெருக்கெடுக்க நான் மட்டும்
நீந்துகிறேன்,- நீந்தக் கற்றுத் தந்த
நீ மட்டும் கரையேறிப் போவதென்ன...?///

அருமை அருமை மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//இன்னும் இலை விடாத உனக்கு
இலையுதிர்க் காலம் இப்போது எதற்கு..?
முளைவிட்டு தளிர்விடு முல்லைக்கொடி நீ
முழுவதும் அள்ளிக் கொள்கிறேன் நான்.//

ரிப்பீட்டே.....

MANO நாஞ்சில் மனோ said...

//வருந்தி அழைத்தும் வாராதிருப் பதென்ன..?
வருத்தமுற்று நான் வாட வாளாயிருப்பதென்ன..?//

சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஒர்க் ஆகவில்லை மக்கா...

நிலாமதி said...

இத்யச்சாரல் இவ்வாறு ஏங்குவது ஏன் ? காலம் கனிந்து வரும். கவிதை அற்புதம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நொடிப்பொழுதும் தாங்கா வலி எனக்கு
யுகம்தோறும் துணையாய் நான் உனக்கு.//

......ஹ்ம்ம்ம்.. காதலின் தவிப்பு வார்த்தையில்.. ரொம்ப நல்லா இருக்குங்க.. :)