Friday, March 11, 2011

மனமே...!

மனமே...!
மறத்துப் போ,- முடிந்தால்
மரித்துப் போ.

நினைவென்னும் திராவகத்தீயில்
நிதம் வெந்து மனம் நொந்து
நினைவற்றுப் போக
நீ எதற்கு..?

விழியே...!
பார்வையற்றுப் போ.
மனதின் நினைவுகளுக்கு
கண்ணீர் ஊற்றி வளர்க்க
நீ எதற்கு..?

எண்ணங்களுக்கு எரிபொருள் ஊற்றி
உள்ளத்தை தகிக்க
உணர்வுகளில் தீ மூட்டும்
நீ எதற்கு..?
 

ஓ.. மனமே..!
என் உணர்வுகளின் வேர்களில்
உன் திராவகம் ஊற்று.
மிச்சம் இருக்காவண்ணம்
எச்சத்தையும் எரித்து விடு.
கனவுகள் அற்றுப்போகட்டும்
கண்ணீர் வற்றிப்போகட்டும். 

மனமற்றுப் போக
மௌனத்தின் சூனியத்தில்
மையம் கொள்கிறேன்.
மௌனமே பெரும்சப்தமாய்
என் மௌனம் கலைக்கிறது.
 




ஓசையில்லா ஒரு வெளித் தேடுகிறேன்.
ஆசையில்லா திருக்க அங்கேனும் கூடுமோ...?!
அரவத்தின் மடியில் அமர்கிறேன் அவசரமாய்
அதுவும் தீண்டாமல் "தீண்டாமை" வளர்க்கிறது.

















கொடியது கவலை என்றால்..? அதனினும்
கொடியது அதன் மூலம் அன்றோ...!
விடமே தீண்டாமல் விட்டு வைக்க
விதியின் வலிமை என்ன சொல்ல...?

வியாபாரம்தான் வாழ்க்கை என்றால் இங்கு
விலைமகள் எல்லாம் உத்தமிகள்தான்,- விதியே
வாழ்க்கையே வியாபாரம் என்றால் மண்ணில்
குலமகள் எல்லாம் விலைமகள்தான்,- நிலமகளே

நீ சொல்... 



இருவருக்கும் என்ன வித்தியாசம்...?

ஒருத்தி விலைப் போகிறாள்.
ஒருத்தி விலைப் பேசுகிறாள்.    
ஒருத்தி சில்லரை வியாபாரி.
ஒருத்தி மொத்த வியாபாரி.

பண்பும் அன்பும் பயனற்றுப்போகும் வாழ்வில்
பணம்தான் பெரிதென்றால் குணம் செத்துப்போகும்
குணமில்லா விடத்து குலம் எதற்கு..?
குன்றுபோல் இருக்கும் பணம் எதற்கு..?
 

நிலம்விட்டுப் போகும் நாளில் நீ
நிலைத்ததாய் கொண்டு போவதென்ன...? இங்கே
நிழலும் வாரா நிலையற்ற வாழ்வுக்கு
நித்தமும் ஏமாற்றும் பிழைப்பெதற்கு..? சொல்...

24 comments:

Kousalya Raj said...

சாட்டையாய் அறையும் வார்த்தைகள் !! உணர்வுகளை எழுப்பி கேள்விகேட்க வைக்கிறது ஒவ்வொரு வரியும்...!

விமர்சிக்க தோன்றவில்லை...ஆக்ரோஷமாய் மனதை அசைத்துபார்கிறது உங்கள் கவிதை...

படங்கள் வெகு பொருத்தம்.

Kousalya Raj said...

கூகுள் பஸ்ல ஷேர் பண்ணி இருக்கிறேன் ரமேஷ். நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///நினைவென்னும் திராவகத்தீயில்
நிதம் வெந்து மனம் நொந்து
நினைவற்றுப் போக
நீ எதற்கு..?///

.....என்ன ஒரு அழுத்தமான உணர்வுகள்.. அனைத்தும் உண்மை..!

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Chitra said...

மனமற்றுப் போக
மௌனத்தின் சூனியத்தில்
மையம் கொள்கிறேன்.
மௌனமே பெரும்சப்தமாய்
என் மௌனம் கலைக்கிறது.


......அருமையாக எழுதி இருக்கீங்க....

எஸ்.கே said...

//கொடியது கவலை என்றால்..? அதனினும்
கொடியது அதன் மூலம் அன்றோ...!
விடமே தீண்டாமல் விட்டு வைக்க
விதியின் வலிமை என்ன சொல்ல...?//

நிதர்சனத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பண்பும் அன்பும் பயனற்றுப்போகும் வாழ்வில்
பணம்தான் பெரிதென்றால் குணம் செத்துப்போகும்
குணமில்லா விடத்து குலம் எதற்கு..?
குன்றுபோல் இருக்கும் பணம் எதற்கு..?
...............
அனைத்தும் அருமை வரிகள்.

தமிழ்க்காதலன் said...

அன்பு கௌசல்யா வாங்க, நீண்ட நாள் இடைவெளிக்கு பின் வருகிறீர்கள். உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க ஆனந்தி, நலமா..? வெகுநாளுக்குப் பின்னான வருகை. சந்தோசம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நா நல்லா இருக்கேங்க.. நீங்க நலமா? :)

தமிழ்க்காதலன் said...

இணையதள முகவரி மட்டும் தந்து தங்கள் பெயர் சொல்லாமல் போன உங்களுக்கு, நான் உங்கள் அன்பான அழைப்பை ஏற்கிறேன். விரைவில் உங்கள் பக்கம் வருகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு அக்கா சித்ரா, வாங்க.. நலமா..? எங்கயோ.. கிளம்பிட்ட மாதிரி தெரியுது... நீண்ட நாளா காணல. உங்கள் தொடர் வாசிப்பிற்கும், வருகைக்கும் நன்றிக்கா.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு நண்பன் எஸ்.கே, வாங்க. உங்களின் ஒவ்வொரு வருகையும் எனக்கு உற்சாகத்தை தருகிறது. உங்களின் கருத்துகள் என்னை மெருகேற்ற உதவுகிறது. தொடர்ந்திருங்கள். மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழி பிரஷா, உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள். உங்களின் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்.

தமிழ்க்காதலன் said...

உங்களின் அன்பில் நலமே... மிக்க நன்றி. நீங்கள் நலமோடு தொடர்ந்திருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

super...
super...
super...
super...
super...

'பரிவை' சே.குமார் said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் நண்பரே...!


http://vayalaan.blogspot.com/2011/03/blog-post_13.html

MANO நாஞ்சில் மனோ said...

//கொடியது கவலை என்றால்..? அதனினும்
கொடியது அதன் மூலம் அன்றோ...!
விடமே தீண்டாமல் விட்டு வைக்க
விதியின் வலிமை என்ன சொல்ல...?//

அருமை அருமை....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒருத்தி விலைப் போகிறாள்.
ஒருத்தி விலைப் பேசுகிறாள்.
ஒருத்தி சில்லரை வியாபாரி.
ஒருத்தி மொத்த வியாபாரி.

பண்பும் அன்பும் பயனற்றுப்போகும் வாழ்வில்
பணம்தான் பெரிதென்றால் குணம் செத்துப்போகும்
குணமில்லா விடத்து குலம் எதற்கு..?
குன்றுபோல் இருக்கும் பணம் எதற்கு..?//

சரியான சாட்டையடி....

MANO நாஞ்சில் மனோ said...

//நிலம்விட்டுப் போகும் நாளில் நீ
நிலைத்ததாய் கொண்டு போவதென்ன...? இங்கே
நிழலும் வாரா நிலையற்ற வாழ்வுக்கு
நித்தமும் ஏமாற்றும் பிழைப்பெதற்கு..? சொல்...//

மொத்தமா போட்டு தாக்கியாச்சி.......

தமிழ்க்காதலன் said...

அன்பு தோழன் குமாருக்கு வணக்கம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் மனோ..., நலமா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வர வேண்டுகிறேன்...

அன்புடன் மலிக்கா said...

வரிகள் அத்தனையும் வெகு அருமை. சாட்டையடியாய் விலாசிதள்ளீட்டீங்க..

மனமே! கேட்டதா உனக்கு..

வழ்த்துக்கள்

செல்வன் said...

/*
ஓ.. மனமே..!
என் உணர்வுகளின் வேர்களில்
உன் திராவகம் ஊற்று.
மிச்சம் இருக்காவண்ணம்
எச்சத்தையும் எரித்து விடு.
*/
நண்பரே, இதற்குத்தான் முயறசிக்கிறேன்.
மிக அழுத்தமான கவிதை.
ஆனால்,
"வியாபாரம்தான் வாழ்க்கை என்றால் ....
..............
.....ஒருத்தி மொத்த வியாபாரி."
இங்கு கவிதையின் போக்கு தடம் புரண்டு, மீண்டும் அடுத்த வரியில் தொடர்வது போல் ஒரு உணர்வு. its just my humble comment.
ஆனால் அந்த வரிகளில் எவ்வித எதிர்கருத்தும் இல்லை.
- நட்புடன் செல்வன்
thankathirselvan.blogspot.com