Sunday, December 28, 2025

”பால்வீதி முத்தம்..!”




 ”இச்”சென முத்தமிட்ட இதழின் இசை

இப்போதும் கேட்கிறது,--என் காதில்

மூளையை மூலையில் முடக்கும் வித்தை

கற்றதெங்கே கண்மணி..? அசைவற்று நிற்கிறேன்.

அன்பெனும் பெருங்காடு கூட்டிப்போய்

அலையவைத்து ஒளிந்தாய்...!! ஒத்தையடிப் பாதையில்

ஒத்தையாக அலைகிறேன் விட்ட இடத்தில்

விழிகள் வியர்க்க மொழிகள் மறந்து..!!

கூட வருவாயோ..? கூட்டித்தான் போவாயோ..??

வாடி வதங்கும் நெஞ்சம்.

மாலை மலர்சூடி மயக்கும் மொழிப்பேசி

மின்மினி விளக்குகள் ஏற்றும் இரவின்

விண்மீன் வெளிச்சம் உன் கண்களில்

காணும்போதுதான்,- நீ காணாமல் போனாய்..!

இந்த இரவையும் உன் உறவையும் தொலைத்தவன்

விழிகளில் இடியும் மழையும்...!!

மிச்சமென என்னிடம் இருப்பது என்ன..??

“இச்”சென நீ இட்ட முத்தச் சத்தம் தவிர...   

பால்நிலவும் காணவில்லை,- பாதையும் தான்

தெரியவில்லை தேடித்திரிய...!!

”பால்வீதி” வரைக்கும் தேடுகிறேன்,- என்

பார்வையில் நீ படவே இல்லை.

வேறுவீதியில் நீயும் எனைத் தேடி

வேரற்று நிற்கிறாயோ என் கண்மணி..!?

மூச்சு சத்தம் நிற்கும் வரை,- உன்

முத்த சத்தம்தான் என் பால்வீதி எங்கும்.

No comments: