Saturday, January 18, 2014

இங்கே பிறந்து இங்கே இறக்க....

இங்கே பிறந்து இங்கே இறக்க....

முடியும் வாழ்நாள் கழித்தல் ”வாழ்வு”
பெரும் பொருள் சொல்லும் பொருள்
பேதை மனம் விட்டு பொருள்
தேடுதல் தொழிலாம் உயிர்க்கு

நாடுதல் வாடுதல் ஓடுதல் முடியும்
நாடியும் நரம்பும் ஓயும் ஓர்பொழுதில்
மாயும் உயிர் தவிக்கும் புரிதலில்
வாழாதுபோன வாழ்வை எண்ணி

நல்லதை நாடாது நாடாகாது யாதும்
நல்லதை தேடாது வளராது நல்லது
நல்லதை ஓதாது உயராது மானுடம்
நல்லதை வாழாது நல்லதும் புரியாது

அல்லவை பெருக்க அல்லவை செய்தல்
அல்லவே அல்லவை போக்கல் வழியாம்
அல்லவை நீக்கல் நல்லவை ஆக்கல்
அல்லவோ அல்லவை அழிக்கும்

மோகத்துள் மூழ்குதல் வேகத்தில் விழுதல்
தாகத்தில் தழுவுதல் யாவும் நிலையா..?
தேகத்துள் புத்தி திரிந்து முடிந்து
திருந்துங்கால் வாழ்வில் வருந்துங்கால்

ஒன்றே முடிந்த செயலாம் செயலற்ற
உயிர்க்கு அழுதலும் தொழுதலும் ஆற்றாமை
இறைபெருக்கு நிறுத்தி இரைப்பெருக்க நீந்தி
குறைபெருக்கும் குற்றம் பெருகுதல்

முற்றும் ஒழிதல் வேண்டி முயலுதல்
முன்னம் செய்த பிழைகள் அகலுதல்
பின்னும் தழைக்கும் தலைமுறை நிலைத்தல்
என்னும் எண்ணம் வேண்டுகிறோம்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்.