Monday, December 23, 2019

விசும்பு...!!




பேரன்பு ஒழுகும் பேரண்டம் ஒன்றில்
கூரலகு ஓடுடைத்து வெளிவரும் குஞ்சென
மனம் உடைத்துப் பெருகும் அன்பு
பரிசளித்த நாள் ஒன்றை

மார்கழி மாதத்துக் கோல அழகாய்
மறுமுறை சொல்ல முயலும் மனம்
கார்முகில் சிந்தும் சாரல் பனியாக
தூவும் நினைவுகள் சிலிர்க்க...!!

அடர்ந்து பரவும் இரவில் தனிமை
அரசு நடத்தும் நிலவென நானும்
உலவும் உலகம் ஒன்று கேளீர்..!!
அம்புலி தானும் கதிராக

சுடர்விடும் மதிநாள் மனம் ஒளிரும்
படர் எண்ணம் தொடர் சிந்தையுள்
மூழ்கும் வண்ணம் கவின்பொழி காதல்
முகிழ்த்த நாணம் மொட்டாகி

நினைவு வெடிக்கும் சிந்தைக்குள் மலரும்
கனவுகள் ஆயிரம் காண்பது கண்ணல்ல..!!
உணர்வுகள் ஒருகோடி ஓரிடத்து ஒன்றாகி
திணறும் அண்டப் புரட்சியாக..!!

புலப்படாத உணர்வுக்கு புலன்தாமே ஆதாரம்
புரியாத மொழியாக புலன்கள் பேசும்
அறியாதப் பொருள்கள் ஆயிரம் உண்டிங்கு
உயிர் போடும் முடிச்சிக்கு..!!

விளங்காத விளக்கம் விளங்க விளக்கும்
விண்ணும் மண்ணும் பெருக வியக்கும்
அன்பும் அருளும் துளிர்க்க..! உயிர்க்கும்
பரண் துகள் பாரில்..!!

கழுமுனை காட்டும் சுழுமுனை கயிற்றில்
ஒருமுறை ஆடி அமரும் அடிமுனை
தாங்கும் நாடி மலரும் நான்கில்
தூங்கும் இடம் மெய்யாய்...!!

வாங்கும் தூண் தாங்கும் - பரண்
தான் தங்க பரண் தேடும்
பரம் ஆடும் பரமபதம் பாரீர்..!!
பரணும் பரமும் பம்பரமாய்

சுழன்றாட உழலும் கோலத் துகள்கள்
கழன்றாட கதிர்வீசும் காந்தம் பரல்கள்..!!
ஓடியோடி ஒளிவீசி வலைவீசும் சுடர்கள்
ஆதிசூழ் இருள் விழுங்க...!!

பாதியும் ஆதியும் கலந்த சோதியுள்
நாதம் நுழைந்த நளினம் விசும்பும்
விசும்பில் விசும்பல் ஒலிக்க – அசையும்
அண்டம் ஆடும் விளிம்பில்...!!

அடரிருள் அடர்ந்த பரவெளி சூழ்நிலை
ஊடறுத்துப் பாயும் ஊமை விந்தும்
அண்டத்துள் அடங்கும் தூலங்களில் துலங்கும்
ஒளியென விரிந்து காட்டும்

களிப்பில் களிக்கும் ககனம் காணும்
சுழிப்பில் சுழலும் புவனம் தானும்
விழிப்பில் விளங்கும் விசும்பின் கோணம்
பசும்புல் பனியில் பாரீர்...!!
  


2 comments:

Anonymous said...

Very nice. Its silently speaks many things.keep it up

Anonymous said...

மிக நன்று...