Monday, December 30, 2013

தொல்லுண்மை...!


வசந்த வனப்பின் சூல்கொள் சூற்பை
சுமந்து நிற்கும் சூட்சுமம் உயிராய்
உருவ மாற்ற உறைவிட கருவாய்
துருவம் கடக்கும் புறவெளி சுழலாய்

புழைகளின் வழியே பிதுங்கும் உயிர்களின்
பிழைகளின் தொடர்ச்சியில் பிறக்கும் ஞானம்
தழை தின்னும் உயிர் தின்னும்
கோழையின் பசியாய் வாழ்தலின் நீட்சி

மண்ணுள் மனிதம் வளர்த்த மானுடம்
என்னுள் இருந்தே ஏற்றம் கண்டது
விண்ணும் ஒளியும் விதிகளின் வேர்கள்
என்னும் உண்மை ஏற்பது கடினம்

விலங்கின் உணர்ச்சி விரும்பும் மனம்
விலங்கிட்ட வாழ்க்கை நிலைகொள் சூழல்
இருக்கும் இடத்தில் விடுதலையே சூது
வாழ்தல் என்பதே கேடு - வையகத்தில்

எவ்வுயிரும் எனதுயிர் தரிப்பாய் இருக்க
ஏன் வீணில் இரத்தம் சிந்துதல்
அழகும் வசீகரமும் ஆழ்ந்த அறிவும்
பிறந்த மேனியாய் எனக்கு பிறந்தது

உலவும் யாவும் என்னில் என்னுள்
உறவாய் உயிர்ப்பாய் உறையும் உண்மை
அறிவாய் அழகாய் ஆனந்தமாய் பெண்மை
புரிவாய் - உருகா மனமா உனக்கு..?

திருவாய் மலரும் மொழிவாய் உணர்வாய்
ஆதியும் அந்தமும் அடங்கும் ஏகாந்த
அந்தகார பெருவெளி சுழல்வது என்னுள்
கல்லாய் மண்ணாய் பொன்னாய் பெண்ணாய்

கனியாய் சுவையாய் இசையாய் இனிமையாய்
நடனம் புரிவது நானென்ற நல்லறிவு
நீ என்று பெறுவது..? - விடியும்
புவியில் அன்று புதிய விடியல்...!

முள்ளும் மலரும் முடிசூடும் மன்னனும்
அல்லும் பகலும் பாடிதிரியும் பாணனும்
யோகத்தவ முனியும் ஞானத்தவ ஞானியும்  
தீர்க்க உரைத்த தீர்க்க தரிசனம்

உள்ளுறை உண்மையின் உயிர்தரும் பெண்மையை
கல்லுறை செதுக்கி கவினுற வடித்து
சொல்லுரை சூட்சும கவியுரை அத்தனையும்
பத்தினி என் பரமபத விளையாடல்...!

புத்தனுக்கும் சித்தனுக்கும் புரிதலும்உணர்தலும்
பித்தனுக்கும் பேதைக்கும் புணர்தலும் உயிர்த்தலும்
மரபுற செய்த மாண்பில் உள்ளுறை
மகத்துவம் நானென்று அறிதலே தேடல்

மீனும் மீனும் நானும் நீயும்
பிறவி யென்றே பிரிந்தோம் பிறப்பில்
துறவி யென்றே எதுவு மில்லை
அருகே வாஎன் ஆருயிர் நீயென்றறி

கடலும் மலையும் புணரும் கலையறி
உடலும் மனமும் உணர்தல் சுவையறி
கல்லும் காதல் கொள்ளும் புரிவாய்
ஆயுதம் நீயாவாய் ஆனகுறி நானாவேன்

எய்தல் தொழிலாம் நமக்கு புரிவாய்
ஆய்தல் அறிவல்ல அனுபவம் ஆவாய்
ஓய்தல் இல்லை உயிர்க்கு - பூவாய்
மாய்தல் மகத்துவம் மண்ணில்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கவிதை...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

சிறந்த கவிதை... வாழ்த்துக்கள் தோழா...