Friday, December 27, 2013

உறைதல்....!


ஒளியுள் ஒளிந்த ஒலியுள் ஒலிக்கும்
இசையுள் இயைந்த இசைவின் இசைவும்
ஒலிக்குள் ஒளிந்த ஒளியின் ஒளிக்கும்
ஒளியில் பொதிந்த ஒளியின் இருளும்

வெளியில் ஆடும் துகளின் ஆட்டம்
வெளிச்ச புள்ளிகள் பகலின் தோற்றம்
வெட்ட வெளியின் புறவெளி தோட்டம்
இரவின் திருவிளை யாடல் காட்டும்

காலம் பிறந்த காலத் தொடக்கம்
கவினுறு ஞாலம் பிறந்த பெருக்கம்
கண்ணுற சாலச்சிறந்த கோலம் -நினதருள்
கலந்தே பொலிவுறும் கவின்மிகு காதல்

இருத்தல் இயைதல் கலத்தல் கலைதல்
நிறுத்தல் நிலைத்தல் பிளத்தல் பிரிதல்
சுவைத்தல் சுகித்தல் முகிழ்தல் எழுதல்
உடைதல் உருகுதல் பெருகுதல் அழிதல்

ஒளிர்தல் உதிர்தல் மின்னுதல் மறைதல்
ஒன்னுதல் பின்னுதல் பிணைதல் பிழிதல்
பொழிதல் மொழிதல் வழிதல் கழிதல்
விழித்தல் செழித்தல் தழைத்தல் வாழ்தல்

அலைதல் அவிழ்தல் அலர்தல் அழுதல்
ஒழுகல் அழுகல் இளகல் இறுகல்
விலகல் வெடித்தல் இடித்தல் துடித்தல்
நொடித்தல் பொடித்தல் பொழுதுகள் முடித்தல்

இருள்வெளி யாவும் இருத்தல் மறைதல்
பரம்பொருள் காட்டும் பரவெளி ஆட்டம்
புரிதலும் அறிதலும் அறிவின் தோற்றம்
அரிதான அரியினை அறிதல் அறிவாம்

அவிழ்சடை அவிழ்த்து புரிநடம் புரிந்த
திகழ்பர திகம்பர  இகம்பர இரகசியம்
திகழொளி  திங்களும் சோதியும் விளக்கென
ஒருகை உடுக்கை ஒலிக்கும் மிடுக்கென

அடுக்குகள் ஆயிரம் உயர்தலும் தாழ்தலும்
கடுக்கண் அசைவினில் கடைக்கண் இசைவினில்
அலைதலும் மிதத்தலும் அலைவழி திரிதலும்
இதழ்கடை விரிப்பினில் புரிந்திடும் புன்னகை

முகிழ்சடை மூத்தவன் தளிர்நடை பயில
நெகிழுறு நெஞ்சம் நெக்குருகும் அழகில்
மகிழ்வுறு வேந்தன் மண்ணில் தொழுகையில்
ஆக்கிய தொழில்கள் வினைகளின் விதையாய்

போக்கும் வரவும் புரிந்த நிலையில்
காக்கும் கைகள் காட்டும் சிலையில்
வாக்கும் நோக்கும் ஊட்டும் அறிவில்
வாழ்தல் ஒன்றே எம்பணி அறிந்தேன்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

படம் அருமை....
கவிதையும் நன்று.