Wednesday, December 25, 2013

கனவல்ல நாங்கள்...!


கனவல்ல எங்கள் வாழ்க்கை -ஞாலத்தில்
காலத்தால் எழுந்த கம்பீரம் நாங்கள்...!
புரட்சியல்ல எங்கள் போராட்டம் புனிதம்
வறட்சியல்ல எங்கள் வாழ்க்கை

திரட்சியும் திண்மையும் ஆண்மையும் அன்பும்
திண்தோல் வலிமையும் உண்மையும் இன்பமும்
திசுக்கள் தோறும் உயர்பண்பில்முகிழ்த்த
திருவின் உருவில் திகழ்பரம்

பொருளில் பொதிந்த தெங்கள் வாழ்நாள்
பொருளால் நிறைந்த தெங்கள் வளநாடு
பொதுவில் அறம் வளர்த்த திருநாடு
பொறியியல் திறமார்த்த கொடைநாடு

அறிவியல் ஆய்வியல் பாய்மவியல் பதுமையியல்
அகத்தியல் புறத்தியல் நிலவியல் புவியியல்
ஆழ்மன தியானம் சூழ்நிலை சூட்சுமம்
ஆறு குளம் வாய்க்கால்

வடிகால் - வயல்காடு நிறைத்த நீரொடு
வாழ்ந்த கலை வடித்த சிலைபேசும்
வாழுங்கால் வையகம் வாழும் கலை
வழங்கிய அனுபவம் நாங்கள்

பட்டதும் பெற்றதும் கற்றதும் உற்றதும்
பண்பாட்டு கல்வியாம் உங்களுக்கு - புவியில்
பண்பட்ட வாழ்வின் பயனுற்ற மாந்தர்
பாரத தேசமெங்கும் வாழ்ந்திட்ட

புலிகள் நாங்கள் - போர்களில் வாளும்
புலவர் தம்மில் தோளும் உரசும்
புதுமை எங்கள் வாழ்வில் நாளும்
புதுமை தந்த கோலம்

வில்லும் மீனும் எங்கள் உறவு
வீம்பென்றால் அடிக் கரும்பு - தெம்பில்
வளர்ந்த கூட்டம் சுயத்தெம்பில் சுகமாய்
வாழ்ந்த ஊட்டம் இன்னும்

பொதுவாய் இருக்க புவியில்...! - ஆயிரங்கள்
ஆண்டுகளாய் ஆனபின்னும் பாயிரம் கொண்டு
பகுத்து தொகுத்த புலமை எங்கள்
புலவன் வாயில் புகுத்திய

நுண்கலை திறமைகள் யாவும் - சிற்பியின்
வண்கல் வடிக்கும் சிலையில் கலையாய்
உயிர்ப்பித்து உயிர்விட்டோம் - உலகில் என்றும்
உயர்ந்தோம் ஒப்பற்ற வாழ்வில்.