Tuesday, May 31, 2011

"ஒளியும் இருள்"


வனத்திடை ஊடறுத்து வனப்புக் கூட்டும்
புனலின் புனலாட்டம் புகுந்து நலம்
கேட்கும் வேர்களின் விழியில் கசியும்
காதலை மூடி மறைக்கும் பொங்குநுரை

கங்கு கனலை எங்கும் படரவிட்டு
பச்சைத் தாவணியில் இச்சைக் கொண்டு
பற்றித் தழுவும் சூரியச் சுடரில்
படர்ந்திருக்கும் காதல் யாரறிவார் பாரில்...?

புனல் போர்த்தும் மலர்ப் போர்வை
புகுந்து விளையாடும் கயல் நீந்தி
கரைசேரும் புங்கமர பசும் நிழல்
புரியும் புன்னகை புதிரை யாரறிவார்..?

இருட்டுக்குள் இழையோடும் ஒளிக்கீற்றின் நேசம்
இன்னும் உயிர்ப்போடு இருக்கும் இரகசியம்
இப்புவியில் யாரறிவார் இருட்டைத் தவிர..!
ஒளியைப் உறவாக்கும் இருள்...

ஒளிந்துக் கிடக்கும் ஒளியின் வரவுக்காய்.        

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தலான கவிதை நண்பரே...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு பதிவு செய்து விட்டேன்....

நிலாமதி said...

அழகு தமிழ் விளையாடும் கவிதை ஒளி வீசுகிறது பாராட்டுக்கள்.