Monday, September 23, 2019

"குறிஞ்சி..!" – (பாகம்-2)

              குறிஞ்சி – (பாகம்-2)
காட்டை ஆள்வதும் அதிலூரும் மிருகங்களை
வேட்டை ஆடுவதும் கல்லில் கருவிகள்
கட்டுவதும் மரங்கள் வெட்டுவதும் – பற்றும்
பசித்தீரப் பெரும் பாடாகும்..!

விலங்குப் பழகி விளங்கிக் கொண்டு
பறவைகள் பார்த்து தீங்குகள் கண்டு
அஃறிணை கொடுத்த உயர்வினை கற்று
உயர்ந்து உயர்ந்து உயர்திணையாக

மானுடம் வளர்ந்த கதைகள் பேசும்
மலைகள் ஈன்ற குன்றுகள் தோறும்
மத்தளம் கொட்டும் அருவிகள் கூறும்
மாந்தர் இனத்தின் நிலைமாற்றம்

தான்தோன்றித் தாவர இனம் கண்டு
தான் உண்ணத் தகுந்தது தகாதது
சிற்றுயிர் கொண்டு சிறுதானியம் கண்டு
உணவின் வழியில் உணர்வு

ஊடாடும் உண்மை தெளிந்தான் – மனதால்
உடலால் உறுதியை பேணும் உன்னத
உணவுக் கொடுக்கும் காடுகள் காத்து
உடனுறை உயிர்கள் காத்து

அல்லும் பகலும் அலைந்த குன்றுகள்
மடுக்கள் சரிவுகள் எங்கும் - தங்கும்
இடம்தேடி தானுன்ன உணவும் தேடி
முடிவில் குறிஞ்சிப் பெண்ணோடு

முயங்கும் வாழ்க்கை தெவிட்டாத நல்லின்பம்
திணையோடுத் தேனும் தின்னக் கொடுத்த
துணையோடு தானும் கன்னம் கொடுத்துக்
காதல் விளையாடும் களம்

மாதர் மீதொரு மயக்கம் மீளாது
வேட்டை வழி வீரம் காட்டி
கயல்விழிக் காட்டும் மடந்தை மடித்தேடும்
காதல் பூத்த மனம்

தனக்கும் தன்னைச் சேரும் துணைக்கும்
தானே தேடித்தேடி தேவை தீர்க்கும்
தேவையே தனிமனிதன் ஏற்ற முதல்
பொறுப்பு இப்புவியுள் காண்

ஆடையற்ற ஆடவரும் பெண்டிரும் ஆங்கே
ஆர்வமும் ஆசையும் கொண்டுலாவ தன்னை
மூடிமறைத்த மயிர்ப் போர்வை உடுத்தி
கூடிநிதம் மகிழ்ந்த நிலம்

குளிரும் கோடையும் கூடிக்கூடி வாடையும்
வருத்தும் வாழ்க்கை ஓடியாடி பேடையொடு
தழைக்க இயற்கை விடுக்கும் இடர்களில்
பிழைத்தல் என்பதே பெரும்பாடு..!

மனிதன் இயற்கையை கற்றது,- குறிஞ்சியில்
தொடங்கி நீள்கிற மரபுத் தொடரில்
அடங்கிக் கிடக்கிற ஆற்றல் மூலங்கள்
எதிர்ப்பில் வாழ்விக்கும் ஏணிகள்…!

அஞ்சியஞ்சி நெஞ்சம் தவிக்கும் இடர்கள்
ஆயிரமுண்டு – விஞ்சும் வழிகள் கண்டு
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மரபின் நீட்சியில்
மானுடம் துளிர்த்த மலைக்காடு…!

உணவைச் சேமிக்கும் உன்னதப் பழக்கம்
உற்றதால் உற்ற இடர்களால் கற்றதே…!
உலர வைத்த உணவுச் சேமிப்பு
உணரத் தேவை உற்றக்காலை

பக்குவப் பகுமானம் பெற்றதே - மாந்தர்
பகிர்ந்து உண்ணும் இனமாக மாற
பசிப்பிணிக் கொல்லும் பருவங்கள் யாவும்
பாடங்கள் நடத்தும் காலம்..!   (தொடரும்)



Saturday, September 21, 2019

”குறிஞ்சி..!” (பாகம் –1)




      ”குறிஞ்சி..!”  (பாகம் –1)
நிலமடந்தை பருவம் எய்திய பருவம்
ஊண்பொதி கைப்பூப் பெய்திட உருவம்
உண்டான மாற்றம் கொண்ட கொங்கை
முகடுகள் முளைத்தக் காலம்

உயிர் வளர் வளம் யாவும்
உட்பொதி ஊணுள் தாங்கி – பயிர்
உலகாகு முகடுகள் தாங்கும் மயிர்
செறிந்த வளம் காடு

கார்முகில் உலாவும் கொங்கைக் காம்பில்
காமுற்றுப் பொழியும் வெள்ளம் வாங்கி
வழியும் அழகில் பிறக்கும் அருவிகள்
உயிர் செழிக்க ஓடிப்பாயும்

பள்ளங்கள் பக்கத்துப் புடைப்புகள் நடுவே
செல்வங்கள் சேருமிடம் செழிப்பில் – இயற்கை
நலம்பேண சிற்றுயிர் தோன்றிய இடம்தான்
”குறிஞ்சியாம்” கேள் குலமகளே..!

அருவியும் குருவியும் எழுப்பும் இசையில்
அகடும் முகடும் செழிக்கும் செழிப்பில்
பல்லுயிர்ப் பெருக்கம் பலகாலம் நடக்க
பரிணாமம் கண்டதுகாண் மானுடம்…!

மண்வரு முன்னே மானுடம் வந்தது
பொன்னெனத் திகழ்ப் புவியுள் உயிர்த்த
மாமகுடம் மானுடம்…! நிலத்துள் ஊர்ந்து
நடந்து நிமிர்ந்த பரிணாமம்

காடுகள் தோறும் காமுற்று காமுற்று
பண்பட்ட காலம் முளைத்த காதலில்
பருவம் பூத்துச் சிரித்தது குறிஞ்சி…!
மனிதம் பலகாலம் பண்பட்டது

உயிர் உடல் தேவை கடந்து
அறிவுத் தேடல் தொடங்கிய காலம்
உடல்மொழி பிறந்தது – ஊமைகள் ஓலமிட்ட
ஓசைகள் சுருங்கி விரிந்து

சொற்கள் ஒலிக்கப் பிறந்தது முதல்மொழி..!
கற்கால ஒலிகள் காலப்போக்கில் செதுக்கி
கவிப்பாடும் மொழியாகி இயலாய் இசையாய்
இயற்கை வழியில் வளர்ந்தது..!

ஒலிக்கும் ஒலிகள் உள்வாங்கி உள்வாங்கி
ஒலிக்கும் கருவிகள் உருவாக்கி உருவாக்கி
ஒலிக்கும் ஒலிகள் ஒலிக்கும் பொருள்வாங்கி
ஒலியை உயிரின் மொழியாக்கி

மொழிந்து மொழிந்து மொழியை வளர்த்து
அளந்து அளந்து காலம் கணித்து
உணர்வுக்கு உயிர்ச்சுவை ஊட்டும் திறம்
வளர்த்து உறவுக்கு பெயரிட்டான்

உணவுக்கு ஊரும் நிலத்துக்கு காணும்
வனத்துக்கு வானுக்கு – தாவரம் விலங்கு
தம்முடன் தொடர்புடை யாவுக்கும் தான்
வைத்தான் காரணமாய் பெயர்..!

உணவைத் தேடியவன் உள்ளுறை மருத்துவம்
உணவில் கண்டான் உற்றநோய் தீரவே…!
கற்றல் என்பது காலத்துடன் சேர்ந்தே
கற்றது மானுடம் கருத்தாக…!

உண்பதும் கற்பாறைக்குள் உறைவதும் தொடர
காண்பதை கோடிழுத்து காண்போர் காண
வரைந்த கிறுக்கல்கள் முதலெழுத்து,- ஆம்
கற்பாறைகளே மானுட கரும்பலகைகள்..!

குறியீடுகள் எண்ணக் குறியீடுகள் தாங்கும்
குறிப்பில் குறிப்பு உணர்த்தும் உணர்வுச்
செறிப்பில் சிறப்புற பழகும் பண்பும்
கற்றான் கற்றல் அறியாமலே…!   (தொடரும்)