Saturday, August 15, 2026

”விளை வித்தை...!!”



விதைக்கும் புட்டிக்கும் விதைக்கும் நிலத்துக்கும்

விதைப்பவன் கைவீசும் வித்தையில் இருக்கும்

விஞ்ஞானம் உணரும் தருணம் உள்ளம்

வியக்கும் கடிகார ஊசலின் கணக்கில்

 

அடிவைக்கும் அளவுக்கு காலடி கணக்கு

அளந்துவீசும் பரப்புக்கு கைகள் பொறுப்பு

நிலம் விழும் விதையுடன் விழிகள்

கலமுடன் கைகளுடன் பின் தொடரும்

 

மனக்கணக்கில் ஓடும் காலக்கணக்கு சொல்லும்

மண்ணில் விழும் விதைகளின் வாழ்வியல்

பயிரோடு உயிரோடு உயிராக உறவாடும்

ஓருயிர் பார்த்துப் பார்த்து இரசிக்கும்

 

விளைதலும் விளைதலுக்கு முன் வளைதலும்

பசுமைப் போர்த்திப் பின்பட்டு முதுமை

பொன்னிறம் போர்த்தும் புல்லின் புதுமை

தன்னிற மாற்றம் உழவன் உவகை

 

உழைப்புடன் உயிர் மூச்சும் கலந்தது

அறுவடை எனும் ஆனந்தம் கனிந்தது

பருவம் பார்த்து தன்னுருவம் மெலிந்து

பட்டப்பாடு படும்பாடு மறக்கும் மனதில்

 

கலத்தில் கலம்கலமாய் குவியும் நெல்மணிகள்

உயரம் காணும் ஒவ்வொரு நொடியும்

அடிவயிறு நனையும் பேரின்பம் யாரறிவார்

ஆடிக்கும் தைக்கும் அள்ளாடும் வாழ்க்கை

 

பிறப்பொக்கும் எவ்வுயிருக்கும் இந்நிலத்து யாண்டும்  

பசியறுக்கும் இவ்வுயிரின் உழைப்பு,- பல்லுயிர்

பல்கிப்பெருக பாரினில் புசித்திட நல்வயல்

படைத்திடும் பண்பாளன் உலகின் அன்பாளன்

 

முத்துகள் முளைத்திடும் வித்துகள் யாவையும்

சத்துகள் முழுமையும் சேமிக்கும் கலன்கள்

கொத்துகள் குலைகள் யாவிலும் பலன்கள்

மொத்தமும் மன்னுயிர் உண்டிக்கு உண்டியாம் 

No comments: