Friday, July 24, 2026

”மௌனக்கேள்வி..?”


மனதின் தகிப்பில் பொசுங்கும் உணர்வுகள்

மௌனம் வீசும் கனத்த பொழுதுகளில்

மொழியும் விழியும் உயிரற்றுப் போகும்

மோனத்தில் உயிரின் விழித்தல்

 

தண்மதி வீசும் மென்குளிர் அழகொளி

தன்மதி இழந்தவன்முன் தமிழின் அழகொலி

தன்முன் எரியும் உணர்ச்சி சிதறல்கள்

தன்கதி சொரியும் தாளகதிகள்..!!

 

விட்டுவிட்டு விடுகதை போடும் வாழ்க்கை

விடாமல் விகடம் வீசும் விதியுடன்

விடுவிடு வெனவிலகும் நேசத்தின் பிரிவும்

விடைதெரியா விடியல்களின் நீட்சியாய்..!!

 

அழகின் அழகியல் தொடரும் உளவியல்

அறிவின் அறிவியல் தொடரா இயல்பியல்

அமுதம் ஆயினும் அப்போது புரியாது

அழுதாலும் பின்னொருநாள் கிடைக்காது..!!

  

இரவின் யோனியில் சிக்கித் தவிக்கும்

பகலின் பிறவியாக முக்கித் திணறும்

மனதின் மௌன முடிச்சுகள் உடைந்து

ஒழுகும் உயிர்ப்பில் மூச்சுத்திணறல்..!!

 

கலியுகம் காணா களிப்பில் திளைக்க

கலிமுகம் காட்டும் கொதிப்பில் திகைக்க

கலிதந்தவன் காட்டிய கருணையில் நனைந்து

கலிதின்றவன் ஊட்டிய பெருங்காதல்..!!

 

சிலிர்க்க வைத்த சில பொழுதுகள்

சிற்றம்பல கூத்துகள் எங்கும் சிலேடைகள்

மௌனத்தின் முன் தோற்கும் பொன்மொழிகள்

யௌவனத்தை எள்ளி நகையாடும்..!!

 

முதுமையின் முத்தச் சிதறல்கள்,- மூச்சடைக்கும்

பதுமையின் பாதங்களாய் மறைந்தும் விரிந்தும்

புதுமையின் பூப்பெய்தல்களில் பூரிக்கிறது அந்த

ஆலகாலம் ஆட்கொள்ள வழிதேடி..!!

 

சிந்தைக்குள் விந்தைகள் நிகழ்த்தும் சிற்பத்தின்

சிற்றிடை உடுத்தும் கற்சேலை மறைக்கும்

காலத்தின் கால்களில் சதிராடும் விதியின்

விரலிடுக்கில் சிக்கிக்கிடக்கிறது வாழ்க்கை..!!

 

முன்னும் பின்னும் முரண் பேசும்

பின்னம் போல்பிழியும் எண்ணம் யாவும்

கன்னம் தின்னும் கனவுகள் என்றாகும்

உண்மையின் உரைக்கல் உரசலில்..!!

 

எனதென்று நானே இல்லாத இவ்விடத்து

என்னை உனதென்றும் உன்னை எனதென்றும்

உளமாற உளறும் பொய்மையின் பாடல்களில்

உன்னை தேடியலையும் நெஞ்சம்..!!

Sunday, July 05, 2026

”ஞான வாழ்வு..!!”


 ஆலமர் ஆலமர விழுதுகள் விழுந்து மண்ணில் நுழைந்து

தழைத்துச் செழித்து துளிர்த்துச் சிரித்து பூத்துப் பழுக்கும்

காலமது கனியும் காலம்வரை காத்துக் கிடக்கும்,- உயிரது

பிழைத்து நிலமதில் உய்த்து வளம்பெற நிலை பெறும்

 

தாளமர் தயையும் தானுறும் நிலையும் தேனினில் சுவையாம்

கோளமர் நிலையும் மீன்பெறும் கதியும் தான்பெறும் வழியாம்

சூலமர் உறையும் சூழ்வினை நிறையும் வாழ்வென விரியும்

நூலறி வுடையோர் வாலறி வழியறி மேல்மதி கதியாம்

 

ஆழ்நிலை அறிந்து சூழ்நிலை உணர்ந்து வாழ்நிலை தெரிந்து

தாழ்நிலை மறித்து பாழ்நிலை கெடுத்து கீழ்நிலை தவிர்த்து

வாழ்வினை அடையும் வழியினை அடைக்கும் மடையது திறக்கும்

ஊழ்வினை உடைந்து உயர்நிலை அடைந்து உய்த்தலே அறிவாம்

 

அச்சில் அமர்ந்து தச்சில் இணைந்து வட்டில் சுழலும்

ஆரத்தால் அளந்து உச்சியில் நிறுத்த விட்டம் சுமக்கும்

பாரத்தால் சமநிலை சரியாக தூரத்துப் பயணம் களிக்கும்

மூச்சில் உணர்த்தி முழுவீச்சில் இழுக்கும் காளைக்கு இனிக்கும்

 

அன்பில் ஆருயிர் தோய்ந்து என்பில் இறைந்து உறையும்

நுண்மான் நுழைபுலம் நம்மில் நயமுற வாய்ந்த துறையும்

எண்ணம் எழலும் திண்ணம் தெரியநற் சிந்தனை முறையும்

மனமதில் சுழலும் வண்ணம் பொலிவுற செய்கை நிறையும்

 

மாண்புற வாழ்தல் மானுடம் மகிழ்தல் ஊனுடல் வழியாம்

கேண்மின் வீழ்தல் விதியா மேன்மைகள் அறியா மதியாம்

ஊண்வழி உயரும் ஊனுயரம் கட்டுதல் உணரா மடமையாம்

வீண்பழி சுமந்து உழலும் முடமது விலக்கல் நல்ஞானமாம்

 

பட்டறியும் பலன் பகுத்துத் தொகுத்து பாடமாக நல்கும்

பாமரன் பாடல்கள் பாய்மரம் செலுத்தும் வழியாய் நிற்கும்

பல்வழி அலைந்து பால்வழி அளந்து ஞானப்பால் ஊட்டும்

பகலவன் புகலும் நல்வழி ஊழ்வினை உதறல் உத்தமம்