Tuesday, February 24, 2026

குமரித் தமிழர்..!!


நெடுங்கடல் கொள்குமரிக் கண்டமது வான்பார்த்த

காலமதில் வாழ்ந்து செழித்து வளர்ந்த

கோலமிகு குழாமவர் தான்பெற்ற புகழ்

கோலம் அழிந்த காலம் கூட

 

கொடுந்துயர் வருத்த வாழிடந்தேடி அலைந்தார்

தொலைந்தார் தம்தொப்புள் கொடியுறவு தொலைத்தார்

தொலைவு தொலைவாக தொடர்பு அறவே

அடையாள எச்சமிட்டார் ஆங்காங்கே மிச்சப்பட்டார்

 

தீவுகள் தாங்கும் திடல்களில் தங்கி

கூட்டம் கூட்டமாய் குறுகிப் போனார்

நாற்பத்தி யெட்டுத்தீவுகள் தொட்டு நடந்தவை

நூற்பத்தி பதிவுகள் இட்டார் செந்தமிழர்

 

கலம் கண்டு கலமேறி காலம் தாவி

நிலம் கண்டு நிலம் கண்டு நீண்டு

புவியின் குணம் கண்டு மொழிந்தார்

நிலவின் நிலை கண்டுலவி வாழ்ந்தார்

 

அலைவழி அலைந்தார் புவியை அளந்தார்

செவ்வழிக் கண்டார் செம்மொழி கொண்டார்

அவ்வழி வாழவே அறவழி நின்றார்

ஆழியுள் மூழ்கிய கடுந்துயர் வென்றார்

 

வாழிடம் வேறிடம் ஆனபோதும் ஊருடன்

வேருடன் தடம் பதித்தார் தமிழில்

பெயருடன் தாம் பெயர்ந்த ஊருடன்

இட்டார் இடுகுறி தம்மினக் கொள்குறி

 

குன்றுகள் தோறும் குழாம் குழாமிட

தமிழ்குரவர் வரைந்த வரலாறு வாழ்கிறது

குன்றின்மேல் கோடுகளாய்..!! நின்று

நிலைத்தவர் நெடுந்தமிழ் பாரில்..!! பாரீர்..!!

 

கடலுடன் மல்லுக்கட்டி கல்லுடன் சொல்வெட்டி

அல்லும் பகலும் அருந்தமிழ் சபைக்கூட்டி

நிலையற்ற வாழ்வில் நிலைபெறும் வழிக்காட்டி

சென்றார்..! நீயும் நானும் வாழ்ந்திடவே..!!

 

Thursday, January 08, 2026

"இறை..!! “


தன்னை இறைத்தலும் தானாய் இறைதலும்

தன்மை விதைப்பதும் தானே முளைப்பதும்

ஒருமை தோன்றி பன்மை ஆவதும்

பொறுமை குன்றா பொலிவில் நிலைப்பதும்

 

அருவில் அருகி உருவில் பெருகி

அணுவில் மருகி ஆற்றலில் விலகி

தூசுமாகி மாசுமாகி துகளாகி துளியாகி

வளியென ஒளிந்து ஒளியென மிலிர்ந்து

 

ஓங்கி ஒலிக்கும் ஒலியென அலைந்து

வீங்கிப் பெருத்து விண்ணை நிறைத்து

தன்னை தனக்குள் தானே அடைத்து

தானடைந்த கூட்டினை தானே உடைத்து

 

விதியென மதியென வினையென துணையென

விளைவென தளையென துளையென உலையென

வினாவென விடையென வியப்பென விழிப்பென

வழியற்ற வழியில் மொழியற்ற மொழியில்

 

தனிமையே தவமாக தனக்கான தானுமாகி

வெறுமையே வெவ்வேறு வேராகி உலவும்

பொருளாகி பொருளின் பொருளுமாகி திகழும்

பெருவெளி இடைவெளி இட்டு நிரப்ப

 

இடமும் வலமும் இறுப்பது மாற்றி

இருளும் ஒளியும் இருப்பதை காட்டி

நிகழ்வது நிகழும் நிகழ்காலம் சுட்டி

நில்லாது கால்மாற்றி காலமாற்ற நடனம்

 

சொல்லாது செல்வது தன்னை கடந்து

செல்வதை சொல்லாது மௌனக் கூத்து

சொல்லும் காலக்கவிதை மனதை மயக்க

அசைக்க அசைக்க அசையும் உயிர்


கருவின் கருவாகி உருவின் உருவாகி

பொழியும் அருளாகி ஒளிரும் அருவாகி

கழியும் பொழுதுகள் காட்டும் காலச்சுவடு

கால்தடம் பதித்த கருணை பதி.