Tuesday, August 04, 2026

”அன்பெனும்..!!”


இதுவென புரியாத இப்பிறவி இங்கே

எதுவென தெரியாத தேடல் எங்கே..??

உடலுக்கா? உணர்வுக்கா? உணர்ச்சிக்கா? உயிருக்கா..?

வாழ்க்கை எதற்கானது? எதற்காக வாழ்வது?

 

ஈன்றவர் கையில் ஏந்திய காலமும்

ஈந்தவர் தோளில் வாங்கிய கடனும்

ஈடுகொடுத்து உழைக்கவா இப்பிறவி?,- அன்றி

ஈடேற்ற முயல்வதா? காடேற்ற உழல்வதா?

 

ஊனுடல் தாங்கும் உயிர்கடன் வாங்கும்

உணர்வும் அது உந்தும் உணர்ச்சியும்

பெருகப் பெருகும் உடலின் வளர்ச்சியும்

ஒன்றில் ஒன்று ஒன்றை சார்ந்து

 

பால் கொடுத்த தோலும் பற்றி

பால் குடித்த வாயும் ஒற்றி

பாலகம் தாண்டும் பருவம் தூண்டும்

பண்புகள் நீண்டும் உருவம் தாங்கும்

 

தேவையின் பிடியில் பற்றும் பற்றுகள்

ஆசையின் வலையில் சுற்றும் சுற்றம்

பாசம் என்பது பிணைப்பா? இணைப்பா?

பல்லுயிர் தோறும் பாசத்தின் தேவை..!!

 

அன்பென படுவது யாதெனின் இதில்

அகப்படா அகப்பொருள் அப்பொருள் இங்கே

அகமுடன் அதுதரும் இன்பதுன்ப மெய்யுள்

அரவமிலா ஆருயிர் சுரக்கும் நீர்..!!

 

ஈர்ப்பதும் ஈர்க்கப் படுவதும் ஈர்ப்பியல்

ஈர்ப்பில் இருப்பது எதுவென ஈர்க்க..!!

காரண காரணம் கண்டுணர காணும்

உணர்வின் புதிருக்கு உணர்சிகள் பதிலாய்..!!

 

உயிரின் உயிர் தீண்டல் அது

மெய்வழி மெய்யாகி உணர்வில் உணர்வாகி

உணர்ச்சியில் உணர்ச்சி கலக்கும் பாற்கடல்

அதுஅது அதைஅதை அடையும் அற்புதம்..!!

 

அணுவாகி கணுவாகி அணுக்கமாகி அண்டமாகி

தாதுள் தானாகி தானேதன் உணவாகி

தையுள் பையாகி பைக்குள் உயிராகி

மையல் மையம் மயக்கும் துடிப்பாகி

 

ஆட்படுதலும் ஆளப்படுதலும் ஆருயிர் தொழிலாக

உட்படுதலும் உடன்படுதலும் ஊனுயிர் வழியாக

மெய்ப்பொருள் காட்டும் மெய்ப்பொருள் காண

மெய்ப்பொருள் பெற்ற பேரண்ட பெருவெளி

 

குமிழுக்குள் அடைபட்ட குமிழென வாழ்க்கை

ஒன்றை ஒன்று ஒன்றில் ஒன்றாய்

எதிரொளித்து எதிரொளித்து எதிரில் இருப்பதை

மெய்யென நம்ப வைக்கும் காலக்கண்ணாடி..!!

 

பொய்யென புட்டுப்புட்டு வைக்கும் உண்மை

குமிழ்கள் உடைந்து மறையும் பொழுதுகள்

நீடிக்க செய்வதா..? நிலைபெற செய்வதா..??

வாழ்வின் அமிழ்தம் என்பது எது..??

 

அத்தனை எளிதல்ல அன்பென படுவதும்

ஆருயிர் வாழ்வில் அன்பில் படுவதும்

அத்தனை எளிதல்ல அன்பை அன்பால்

அன்பில் தீண்டல் ஓருயிர் ஒருபிறவி. 

Sunday, August 02, 2026

”நம்பிக்கை..!!”


மனிதத்தின் மீதான மதிப்பும் நம்பிக்கையும்

மரணித்துக் கொண்டிருக்கிறது மெல்லமெல்ல – இந்த

மாலைப்பொழுதின் கதிரவன் நிலையாக,- சுடர்வீசும்

மலையுச்சி கீற்றாக மனதில் ஏக்கம்

 

தனித்து விடப்பட்ட குழந்தையின் தேடலில்

மானுடத்தின் விழிகளில் விழுந்துக் கொண்டிருக்கிறது

உதிரத்தின் உறவு அருவிகள்..!! பெரும்வரைக்கும்

பெற்றவர்கள் துணையாக – தனக்கொரு துணை

 

தொட்டபின் பெருஞ்சுமை பெற்றோர் பிள்ளைக்கு

தொட்டவள் தொட்டுத்தொடரும் தொப்புள்கொடி உறவால்

பிள்ளைகள் பெற்றோராகும் பேறுகாலம்,- பின்வரும்

பிள்ளைக்கு பெருஞ்சுமை தானே வினையாக..!!

 

ஒற்றை பிள்ளை ஊராகாது – தனிமரம்

தோப்பாகாது – பொருள் மட்டும் வாழ்வாகாது..?!

பனைமரங்கள் நிழலில் இளைப்பாற இயலாது

பாழும் மானுடம் இயல்புகள் புரியாது

 

வாழும் கலை மறந்த மானுடம்

தாழும் நிலை தானே தேடியது

விழும் முன் விழிக்க வேண்டி

எழும் எந்தன் குர;லும் எழுத்தும்

 

உலையுள் இட்ட இரும்பென உலகம்

தகிக்க தகிக்க ஆழியும் ஆவியாகும்

நிற்கும் மரங்கள் நெடுதழல் பற்ற

முழுக்காடும் தீயில் முக்காடு மூட

 

எக்காலமிடும் காலத்தின் கொக்கரிப்பு கூட

நிலமும் நீரும் நிலைமாறி உருகும்

வளமும் வனப்பும் இழந்து அழிந்து

குளம் வற்றி குடிநீரும் வற்றி

 

ஓரினம் செய்த பெருந்தவறில் உலகில்

பேரினம் யாவும் பேதலிக்கும் வாழ்வில்

மாறிவரும் சூழலை மாற்ற தேவை

மானுடம் பிழை நிறுத்தல் மட்டுமே

 

நுண்ணுயிர் கற்றுத்தந்த காலப்பாடம் நமக்கு

மண்ணுயிர் யாவும் பிழைக்க தழைக்க

புடம்போட்டு புரட்டிபுரட்டி அடிக்கும் உண்மை

வடம்போட்டு நம்வரம்பு காட்டும் தன்மை

 

மலைகள் மடுக்கள் ஆகும் தலைகீழ்

மாற்றம் மானுடத்தின் ஏற்றம் ஆகாது

பனிச்சிகரம் பல்லிலிக்கும் உச்சி முகடுகள்

பலகால மாற்றத்தின் பளிங்குச் சுவடுகள்

 

பூகம்பப் பெருவெடிப்பு ஆழ்கடல் துளைக்க

பெருவெள்ளம் பிளந்து நிலமதை அடைக்க

கருமேகம் கலைந்து வெண்மேகம் மிதக்க

கரும்புகை கக்கும் மானுடத்தின் வளர்ச்சி

 

செறுபகை வேரறுக்கும் செயல் செய்யும்

இயற்கை,- உயிர்களின் உருவழியச் சீற்றம்

செயற்கை செய்கைகள் செய்யாமை ஏற்றம்

முயன்று காத்தல் முடிவின் மாற்றம்.