Saturday, May 16, 2026

"நினைவலை..!!"


 நீந்தும் மீனை தாங்கும் நீராய்

ஏங்கும் இதயம் ஏந்தும் பூவாய்

துள்ளும் கயல்கள் தெறிக்கும் துளிகள்

நினைவுக் குவியல் நெறிக்கும் வலிகள்

 

அடைகாத்த உணர்வு முடிச்சவிழ சிதறும்

அத்தனையும் நாற்புறம் நகர – நிகழும்

அத்தனையும் நீயாக,- தனிமை நானாக

தத்துவமாய் தனித்துவமாய் தனித்துமாய் பொழுதுகள்

 

மூடியிலா சோற்றுப் பானையாய் சிந்தும்

நினைவுப் பருக்கைகள் பொருக்க மனமின்றி

முடியிலா தலையென மொத்தமும் தெரிய

மூடவோ ஓடவோ வழியறியா வாழ்வியல்

 

குளத்தில் இருந்தா லென்ன? அன்றி

குடத்தில் இருந்தா லென்ன? நீரின்

குணமா மாறும்? புதுமணமா சேரும்?

குடையும் கேள்விகளில் உடையும் மௌனம்

 

விடியவிடிய வினாக்களை எழுதுகிறேன் விடைதாளில்

விடைகளை அறியாமலே விடிகிறது என்பொழுதுகள்

உள்ளிருந்து குடைவதில் உளியும் தோற்கும்

உன்னோடு,- அகம் குடையும் அழகியல்

 

இடைச்செருக்கு உடையாளோடு இணக்கம் தேடும்

இடையிடையே செருக்கு உடையவன் நிலையில்

இணக்கமும் சுணக்கமும் இன்பம் துன்பமாய்

இக்கட்டில் நிற்க வைத்தாய் இக்காட்டில்

 

சொக்கட்டான் ஆடும் சொற்களை வைத்து

சொல்ல எத்தனிக்கும் எந்தன் ஆசைகள்

அடுக்கப்பட்டு அப்படியே சரியும் சீட்டுக்களென

ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒற்றை அடையாளமாய்..!!

 

அன்றுபழுத்த பழத்துக் கலையும் கிளியென

இன்றுதின்று செறிக்கும் நினைவுகள் என்னில்

கொன்றுகொழுக்கும் உந்தன் உணர்வுகள் தன்னில்

மெல்ல கழியும் இந்தநாளும் பொழுதும்.  

Friday, April 10, 2026

"புவியை போற்று..!!”



பிறப்பும் பின்வரும் இறப்பும் நிலைபெற

தன்னிலை எதுவென அறியா மயக்கம்

தன்னை தானே நிலையென நினைத்து

வாழ்வின் பிடியில் விழுந்து

 

விதியின் விதியை உணராது விழிப்பிதுங்கி

வினையை விதையாக்கி வினையுமாக்கி,- தானே

வாழ்வின் தத்துவப் பொருளென நினைத்து

வழிமாறும் மடமை மானுடம்

 

இயல்பில் இயல்பாய் இருப்பதை எல்லாம்

இயற்கை பொருளை இன்னொரு பொருளாக்க

இருக்கும் இயற்கை இயல்பை சிதைக்கும்

சிறுமை தொடரும் மாந்தர்

 

நிலையாமை மறந்து நிற்கவும் மறந்து

தொடர்ந்து தொடரும் எதிர்வினைகள் யாவும்

மண்ணும் விண்ணும் காற்றும் நீரும்

தன்னிலை இழக்கும் தவறுகளே..?!

 

நுனியேறி அடிமரம் வெட்டும் அறியாமை

அறிவியல் என்றும் அறிவு என்றும்

அடையாளம் சொல்லும் மூடர்கள் நிறைந்த

உயிர்க்கோளம் உயிர் பிழைக்குமா..??

 

உன்னுயிர் மட்டுமா..? உலகம் என்பது..?

அண்டவெளி எங்கும் தேடியும் இன்னும்

உயிர்க்கோளம் காணாத அறிவியல் உனக்கு

உணர்த்தாத உண்மை அறி..!!

 

இருப்பது ஒருபூமி..!! உயிர்க்கோளம் இதுவே..!!

இருப்பதை அழிப்பதை நிறுத்து,- இனியேனும்

பறப்பதை பிடிக்க நினைத்து இருப்பதை

விட்டுவிடாதே பரவெளியில்,- உன்வீடு

 

இதுவென்பது மறந்து கொள்ளிக்கொண்டு தலை

சொறியும் தற்குறித்தனம் நிறுத்து,- மானுடம்

மட்டுமல்ல மண்ணில் கோடானுகோடி உயிர்கள்

இன்புற்று வாழ்வதும் இங்கேதான்..!!

 

வாழவந்த நிலைமறந்து வாழ்வை தொலைத்து

தானும் வாழாது வாழ்வதையும் வாழவிடாது

தன்வீட்டில் தீவைக்கும் திமிரை விடுத்து

தன்தவறை தானே திருத்து.  

Thursday, March 05, 2026

உருமாற்றம்..!!


 உருவம் பார்த்து உருவம் பார்த்து

உருவம் செதுக்கும் உருவம் பார்க்கும்

உருவத்தில் உள்ளதை செதுக்குமா? அன்றி

உருவத்தின் உள்ளத்தை செதுக்குமா..??

 

உளிப்பட்ட இடமெல்லாம் வலிகள் உளிக்கா..?

உளிப்பட்ட சிலைக்கா..? உளிப்பிடித்த கரத்துக்கா..?

அசைவற்ற உருவம் வரும்வரை அங்கே

அசைவற்று நிற்கும் கலைக்கா..?

 

உருவம் கொள்ளும் கல்லும் உருக

உருவம் கொள்ளும் உயிரின் தாகம்

உயிர்ப்பெறுமா..? உளியின் வேகம் தாங்கி

உருவக்கல் உயிர்ப்பெறுமா..? உண்மைச்சொல்.

 

பருவம் காட்டும் உருவின் பருவம்

பதியும் கல்லில் பதியும் பருவம்

பதித்தபடிப் பார்த்துப் பதிக்கும் பருவத்தின்

உணர்வில் பதியுமா உருவம்..?

 

விழிகளில் விழிகள் விழுந்து கலந்து

உளிவழி வழியும் உயிரின் உணர்வு

சிலையின் விழிகளில் வழியும் அழகு

கலைகள் பேசும் கவிதை..!!

 

முகமும் அகமும் மொய்த்து மொய்த்து

மொழிகள் மொழியாது மொழிந்த வனப்பு

அகடும் முகடும் அளந்து அளந்து

வளைவும் நெளிவும் வரைந்து

 

குழலும் விரலும் கூட்டும் தகிப்பு

உடுப்பும் இடுப்பும் காட்டும் மடிப்பு

முலைமலர் மொய்க்க முரலும் வண்டு

சிலைமுலை இழைத்த செழிப்பு


கவின்மிகு கவிதை காதல் மலர்ந்து

கலைவழி காதல் கவிதை வடித்து

உளிமொழி உணர உளமது கனிந்து

உலகுக்கு படைத்த அழகமுது...!! 

Friday, February 27, 2026

"தமிழ்க்கடவுள்..!"


அன்னைத் தமிழை அருளிய அழகன்

தமிழுக்கு ஓளவை தந்தமால் மருகன்

வெற்றிக்கு வேலினை கண்டமா முருகன்

குறிஞ்சி நிலமதன் குன்றினில் குமரன்

 

தீதொன்றும் நேராது தமிழ்க்காத்த நக்கீரன்

ஆறுபடை அப்பனுக்கு தந்ததொரு ஆற்றுப்படை

வாயொன்றும் பேசாத குமரன் குருபரன்

கந்தனால் அருளிய கந்தர் கலிவெண்பா

 

நாவல்பழம் நீயுலுக்க நாலுப்பழம் தான்பொறுக்க 

நாவில்தமிழ் பழுத்த பாட்டிக்கு பாடமெடுத்த

பேரன்,- அப்பனுக்கே அறிவுத்தந்த சூரன்

நற்றமிழ் நானிலத்து பேணிவந்த வீரன்

 

சொல்லில் சொக்கட்டான் ஆடும் அருணகிரி

சொக்கிநிற்கும் தமிழுக்குச் சொந்தம் வேலன்

அண்ணாமலை மீதமர்ந்த தமிழ் அருணோதயம்

பண்ணால்மலை படைத்த பாவலன் காவலன்

 

ஐந்தொழில் புரிந்தவன் ஆயினன் இறைவன்

ஆறாம் தொழில் ஆற்றியவன் ஆறுமுகன்

தோன்றத் தோன்றும் தோற்றத் தொடுக்கம்

தோன்றாது மறையாது தொழில்புரி செந்தில்

 

வள்ளியை வலம்வந்த வாலறிவன் – தமிழ்

அள்ளிப் பருகும் காதலன்,- தமிழர்

குறிஞ்சிநில குலமகள் காதலின் சேவகன்

அருஞ்சுவை அமுதத்தமிழ் பேசும் சேயோன்

 

தன்னை எதிர்த்தவன் முதல்தான் எதிர்த்தவன்

தன்மை புரிந்து தயைப்புரிந்த மறவன்

தரணிக்கோர் தாய்மொழி ஈந்ததமிழ்க் குரவன்

பரணிக்கும் அடுத்து வளர்த்தப் பாலகன்

 

எதை அழிக்க வேண்டும்? – தாம்

எதை வளர்க்க வேண்டும்..!! ஞானம்

அதை கொண்டு பகை வென்று

கதை முடித்த கரவோன் கந்தன்

 

ஆறுமுகம் அவன் ஆற்றலின் வெளிப்பாடு

பன்னிரு கரம்தான் செயல்வழி சிறப்போடு

ஈறாறு விழிகள்தாம் அருளொளி புறப்பாடு

அமுதவாய் தேன்தமிழ் பாயும் களிப்போடு

 

உலகம் அவன் உலவும் இடமாகும்

கலகம் அவன் காரியக் காரணமாகும்

திலகம் அவன் திருநெற்றிக் கழகாகும்

சூலகம் அவன் திருவுருக் காணாப்பாகம்

 

படைத்தவன் படைப்பின் மூலம் மறக்க

அடைத்தவன் சிறையில் பாடம் எடுக்க

மூலத்தோடு சேர்த்து சூலத்தை அடக்க

காலத்தை கணித்தவன் எந்தன் கந்தன்

 

ஞாலத்தை எதிர்வரும் காலத்தை நேர்கொள்

ஞானத்தை நேரெதிர் பகைவரு பாவத்தை

ஞாயிரென பட்டொளி வீசும் கோபத்தை

ஞானவொளி தணிக்கும் தணிகை வேலன்

 

மூவகை ஆசைகள் மூழ்கடிக்கும் ஓசைகள்

நால்வகை குணங்கள் நாற்றமொடு வசைகள்

ஐம்பொறி வலையில் அமிழ்ந்த இசைவில்

துதித்தக்கை தூக்கிவிட மனம்நாட மயிலாடும்

 

எண்ணி யதுமுடிக்க எடுத்த வேலை

எண்ணிய படிநடக்க துதித்த வேளை

திண்ணிய மாய்துணை நிற்கும் வேலே

தண்ணிய மாய்தாங்கும் செந்தூர் வேலே..!!

 

ஞானப்பழம் தரநீயார் எனக்கு? நானே

ஞானப்பழம் உமக்கு,- மூத்தோர் முன்னே

கற்பித்தப் பாடம் காலம் அறியும்

அகந்தை இருப்பவன் அப்பன் என்றாலும்

 

மண்டியிட வைக்கும் மான உணர்ச்சியில்

தவறென்றால் தாய் தடுத்தாலும் விடாதவன்

தவம்புரிந்தும் தண்டணையில் தப்ப முடியாதவன்

விடைப்பகரும் வரைவிடாது கேள்வி தொடுப்பவன்

 

எவருக்கும் அடிபணியா வீரம் தரணியில்

அவருக்கன்றி வேரொருவர்க் கில்லை பாரீர்

தென்திசை தெய்வமாய் விளங்கி நிற்கும்

எண்டிசை அருகன் எங்கள் மாமுருகன்..!!

 

வள்ளல்கள் உடன்தமிழ் வளர்த்தோர் பேணி 

வள்ளலார் வழித்தமிழ் வாய்த்தோர் காணும்

அருள்வெளி உள்ளும் புறமும் பெருகவே

மருள்நீக்கி இருள்நீக்கி ஆளும் குருவே..!!

 

கற்றவர்கள் கற்றது கந்தனிடம் – தமிழை

பெற்றவர்கள் பெற்றதும் எம்மிறை காட்டும்

தமிழ்மறை தாமே தரணியில் எங்கும்

நிலவும் உலவும் உலகு காண்.


Tuesday, February 24, 2026

குமரித் தமிழர்..!!


நெடுங்கடல் கொள்குமரிக் கண்டமது வான்பார்த்த

காலமதில் வாழ்ந்து செழித்து வளர்ந்த

கோலமிகு குழாமவர் தான்பெற்ற புகழ்

கோலம் அழிந்த காலம் கூட

 

கொடுந்துயர் வருத்த வாழிடந்தேடி அலைந்தார்

தொலைந்தார் தம்தொப்புள் கொடியுறவு தொலைத்தார்

தொலைவு தொலைவாக தொடர்பு அறவே

அடையாள எச்சமிட்டார் ஆங்காங்கே மிச்சப்பட்டார்

 

தீவுகள் தாங்கும் திடல்களில் தங்கி

கூட்டம் கூட்டமாய் குறுகிப் போனார்

நாற்பத்தி யெட்டுத்தீவுகள் தொட்டு நடந்தவை

நூற்பத்தி பதிவுகள் இட்டார் செந்தமிழர்

 

கலம் கண்டு கலமேறி காலம் தாவி

நிலம் கண்டு நிலம் கண்டு நீண்டு

புவியின் குணம் கண்டு மொழிந்தார்

நிலவின் நிலை கண்டுலவி வாழ்ந்தார்

 

அலைவழி அலைந்தார் புவியை அளந்தார்

செவ்வழிக் கண்டார் செம்மொழி கொண்டார்

அவ்வழி வாழவே அறவழி நின்றார்

ஆழியுள் மூழ்கிய கடுந்துயர் வென்றார்

 

வாழிடம் வேறிடம் ஆனபோதும் ஊருடன்

வேருடன் தடம் பதித்தார் தமிழில்

பெயருடன் தாம் பெயர்ந்த ஊருடன்

இட்டார் இடுகுறி தம்மினக் கொள்குறி

 

குன்றுகள் தோறும் குழாம் குழாமிட

தமிழ்குரவர் வரைந்த வரலாறு வாழ்கிறது

குன்றின்மேல் கோடுகளாய்..!! நின்று

நிலைத்தவர் நெடுந்தமிழ் பாரில்..!! பாரீர்..!!

 

கடலுடன் மல்லுக்கட்டி கல்லுடன் சொல்வெட்டி

அல்லும் பகலும் அருந்தமிழ் சபைக்கூட்டி

நிலையற்ற வாழ்வில் நிலைபெறும் வழிக்காட்டி

சென்றார்..! நீயும் நானும் வாழ்ந்திடவே..!!

 

Thursday, January 08, 2026

"இறை..!! “


தன்னை இறைத்தலும் தானாய் இறைதலும்

தன்மை விதைப்பதும் தானே முளைப்பதும்

ஒருமை தோன்றி பன்மை ஆவதும்

பொறுமை குன்றா பொலிவில் நிலைப்பதும்

 

அருவில் அருகி உருவில் பெருகி

அணுவில் மருகி ஆற்றலில் விலகி

தூசுமாகி மாசுமாகி துகளாகி துளியாகி

வளியென ஒளிந்து ஒளியென மிலிர்ந்து

 

ஓங்கி ஒலிக்கும் ஒலியென அலைந்து

வீங்கிப் பெருத்து விண்ணை நிறைத்து

தன்னை தனக்குள் தானே அடைத்து

தானடைந்த கூட்டினை தானே உடைத்து

 

விதியென மதியென வினையென துணையென

விளைவென தளையென துளையென உலையென

வினாவென விடையென வியப்பென விழிப்பென

வழியற்ற வழியில் மொழியற்ற மொழியில்

 

தனிமையே தவமாக தனக்கான தானுமாகி

வெறுமையே வெவ்வேறு வேராகி உலவும்

பொருளாகி பொருளின் பொருளுமாகி திகழும்

பெருவெளி இடைவெளி இட்டு நிரப்ப

 

இடமும் வலமும் இறுப்பது மாற்றி

இருளும் ஒளியும் இருப்பதை காட்டி

நிகழ்வது நிகழும் நிகழ்காலம் சுட்டி

நில்லாது கால்மாற்றி காலமாற்ற நடனம்

 

சொல்லாது செல்வது தன்னை கடந்து

செல்வதை சொல்லாது மௌனக் கூத்து

சொல்லும் காலக்கவிதை மனதை மயக்க

அசைக்க அசைக்க அசையும் உயிர்


கருவின் கருவாகி உருவின் உருவாகி

பொழியும் அருளாகி ஒளிரும் அருவாகி

கழியும் பொழுதுகள் காட்டும் காலச்சுவடு

கால்தடம் பதித்த கருணை பதி.  

 

 

  

 

 

  

Sunday, January 04, 2026

எதிர்கொள்..!!

 


எண்ணம் எழுத எடுக்கும் முயற்சி

ஏறுதிசை  ஓடம் இயக்கும் முயற்சி

மாறுதிசை மாறாது இலக்கு நோக்கும்

எதிர்நீச்சல் பயணம் எகிறி அடிக்கும்

 

அலைகளின் ஆட்டம் நதியில் மனதில்

ஆற்றலின் தேவை அதிகம் கரையேறும்

காலம் வரை துடிப்பும் துடுப்பும்

தடுப்பதை தாண்டும் தவிப்பும் தேவை

 

நடப்பதை கடப்பதை அடுத்தடுத்து நடப்பதை

நோட்டம் நோக்கம் அறிந்து தெளிந்து

ஏற்றம் இறக்கம் மாற்றம் யாவும்

புரிந்து புரியும் வினைதான் வித்தை

 

அலைவது கலைந்து அறிவது தெளிந்து

சுழல் சூழல் உணர்ந்து உள்வாங்கி

தள்ளிதள்ளி தள்ளாட்டம் தடுமாற்றம் தவிர்த்து

துள்ளியெழும் எண்ணம் அலை மோதும்

 

வரிவரியாய் வரிகள் தொடரும் ஆற்றல்

நீரலை நீந்தும் எண்ணம் ஏந்தும்

மனம் குவியகுவிய பேரறிவின் பெருநெருப்பு

பற்றி எரியும் தாக்கம் பக்கமாய்..!!

 

களமறிந்து கலம் செலுத்தும் கவிதை

தளமறிந்து நீரின் தாளமறிந்து காற்றின்

குணமறிந்து பரிசல் காப்பது கடமை

பரிசில் பெரும் புலமை வாழ்க..!!

  

 

 

 

 

Saturday, January 03, 2026

மானுட(ப், ம்) பிழை

 


தான் உடைக்கும் மண்பாண்டப் பொருளாக

பூமியை எண்ணும் மானுட மடமை

பேசும் தமிழ்மகன் மனதின் மடல்

உயிர்களின் உலகம் காக்க..!!

 

ஆழியும் அதில் சேரும் ஆறும்

பாழியும் அதில் சேரும் நீரும்

காடும் முகடு முட்டும் கோடும்

கார்முகில் சுமக்கும் காற்றும்

 

வளைந்து நெளிந்து அசையும் நதி

செல்லும் கரை யெங்கும் சோலையும்

குன்றும் பாலையும் நிலமும் – காணும்

கதிரும் காலையும் மாலையும்

 

இரவும் பகலும் – இதில் எதுவும்

நீயோ நானோ நாமோ செய்ததில்லை

புல்லுடன் பிறந்த பல்லுயிர்ப் பெருக்கம்

பல்லுடன் பிறந்த ஊனுடம்பு

 

தின்றதை தின்று நாள் நகர்த்தும்

நல்வழி ஒன்று இருக்க நாம்

கொன்றதை கொன்று தின்னும் கொலைவெறி

பயின்ற பழக்கம் பாழுடம்பு

 

சிதைக்கும் சிறுமையை நிறுத்தாத வாழ்க்கை

சிதைக்குப் போகும்வரை சிற்றுடம்பு,- வதைத்தல்

வாட்டுதல் வாடுதல் என்பதே வாழ்க்கையாய்

நாட்டுதல் தான்மானுட மகிமை

 

வழிவழி காத்த மரபொன்று நமக்குண்டு

வாழையடி வாழை கற்றுத் தரும்

பரம்பரை பாடம் தெரியுமா உனக்கு?

பரன்-பரை அறிவை தேடு..!!

 

எவ்வுயிரும் மண் திருடி விற்றதில்லை

மலைகள் உடைத்து தின்றதில்லை – நதியை

தடுத்ததில்லை கரையை உடைத்ததில்லை விதியை

மாற்றிமாற்றி இயற்கையை சரித்ததில்லை

 

நிலம் நீர் விற்று இன்று

நீயும் உடல் உறுப்பு விற்று

வாழும் இழிநிலை வந்தது ஏன்..?

வாழுங்குடி கெடுத்து பாழுங்குடியானாய்

 

செஞ்சோற்றுக் கடன் செய்யும் பல்லுயிர்

செய்யக்கூடா செயல் செய்யும் மானுடம்

உய்யகூடா வழியில் உய்ய நினைத்த

வினையின் வினைப் பயன்

 

உன்னிலிருந்து உன்னை உருவாக்க முடியா

உன்னை உருவாக்கவா இத்தனைப் போராட்டம்

தன்னை இழக்கும் தன்மை அடைந்த

உயிர்கள் வாழாது வீழ்ந்துப்போகும்

 

கருவற்றவன் கருவூட்ட முடியாது – காலம்

கருப்பையில் கை வைத்து விட்டது..!! தன்னால்

தாய்மை அடையாத பெண்மை பிழைப்பதெப்படி..?

இனியேனும் பிழை நிறுத்து.