Tuesday, August 04, 2026

”அன்பெனும்..!!”


இதுவென புரியாத இப்பிறவி இங்கே

எதுவென தெரியாத தேடல் எங்கே..??

உடலுக்கா? உணர்வுக்கா? உணர்ச்சிக்கா? உயிருக்கா..?

வாழ்க்கை எதற்கானது? எதற்காக வாழ்வது?

 

ஈன்றவர் கையில் ஏந்திய காலமும்

ஈந்தவர் தோளில் வாங்கிய கடனும்

ஈடுகொடுத்து உழைக்கவா இப்பிறவி?,- அன்றி

ஈடேற்ற முயல்வதா? காடேற்ற உழல்வதா?

 

ஊனுடல் தாங்கும் உயிர்கடன் வாங்கும்

உணர்வும் அது உந்தும் உணர்ச்சியும்

பெருகப் பெருகும் உடலின் வளர்ச்சியும்

ஒன்றில் ஒன்று ஒன்றை சார்ந்து

 

பால் கொடுத்த தோலும் பற்றி

பால் குடித்த வாயும் ஒற்றி

பாலகம் தாண்டும் பருவம் தூண்டும்

பண்புகள் நீண்டும் உருவம் தாங்கும்

 

தேவையின் பிடியில் பற்றும் பற்றுகள்

ஆசையின் வலையில் சுற்றும் சுற்றம்

பாசம் என்பது பிணைப்பா? இணைப்பா?

பல்லுயிர் தோறும் பாசத்தின் தேவை..!!

 

அன்பென படுவது யாதெனின் இதில்

அகப்படா அகப்பொருள் அப்பொருள் இங்கே

அகமுடன் அதுதரும் இன்பதுன்ப மெய்யுள்

அரவமிலா ஆருயிர் சுரக்கும் நீர்..!!

 

ஈர்ப்பதும் ஈர்க்கப் படுவதும் ஈர்ப்பியல்

ஈர்ப்பில் இருப்பது எதுவென ஈர்க்க..!!

காரண காரணம் கண்டுணர காணும்

உணர்வின் புதிருக்கு உணர்சிகள் பதிலாய்..!!

 

உயிரின் உயிர் தீண்டல் அது

மெய்வழி மெய்யாகி உணர்வில் உணர்வாகி

உணர்ச்சியில் உணர்ச்சி கலக்கும் பாற்கடல்

அதுஅது அதைஅதை அடையும் அற்புதம்..!!

 

அணுவாகி கணுவாகி அணுக்கமாகி அண்டமாகி

தாதுள் தானாகி தானேதன் உணவாகி

தையுள் பையாகி பைக்குள் உயிராகி

மையல் மையம் மயக்கும் துடிப்பாகி

 

ஆட்படுதலும் ஆளப்படுதலும் ஆருயிர் தொழிலாக

உட்படுதலும் உடன்படுதலும் ஊனுயிர் வழியாக

மெய்ப்பொருள் காட்டும் மெய்ப்பொருள் காண

மெய்ப்பொருள் பெற்ற பேரண்ட பெருவெளி

 

குமிழுக்குள் அடைபட்ட குமிழென வாழ்க்கை

ஒன்றை ஒன்று ஒன்றில் ஒன்றாய்

எதிரொளித்து எதிரொளித்து எதிரில் இருப்பதை

மெய்யென நம்ப வைக்கும் காலக்கண்ணாடி..!!

 

பொய்யென புட்டுப்புட்டு வைக்கும் உண்மை

குமிழ்கள் உடைந்து மறையும் பொழுதுகள்

நீடிக்க செய்வதா..? நிலைபெற செய்வதா..??

வாழ்வின் அமிழ்தம் என்பது எது..??

 

அத்தனை எளிதல்ல அன்பென படுவதும்

ஆருயிர் வாழ்வில் அன்பில் படுவதும்

அத்தனை எளிதல்ல அன்பை அன்பால்

அன்பில் தீண்டல் ஓருயிர் ஒருபிறவி. 

No comments: