Sunday, August 02, 2026

”நம்பிக்கை..!!”


மனிதத்தின் மீதான மதிப்பும் நம்பிக்கையும்

மரணித்துக் கொண்டிருக்கிறது மெல்லமெல்ல – இந்த

மாலைப்பொழுதின் கதிரவன் நிலையாக,- சுடர்வீசும்

மலையுச்சி கீற்றாக மனதில் ஏக்கம்

 

தனித்து விடப்பட்ட குழந்தையின் தேடலில்

மானுடத்தின் விழிகளில் விழுந்துக் கொண்டிருக்கிறது

உதிரத்தின் உறவு அருவிகள்..!! பெரும்வரைக்கும்

பெற்றவர்கள் துணையாக – தனக்கொரு துணை

 

தொட்டபின் பெருஞ்சுமை பெற்றோர் பிள்ளைக்கு

தொட்டவள் தொட்டுத்தொடரும் தொப்புள்கொடி உறவால்

பிள்ளைகள் பெற்றோராகும் பேறுகாலம்,- பின்வரும்

பிள்ளைக்கு பெருஞ்சுமை தானே வினையாக..!!

 

ஒற்றை பிள்ளை ஊராகாது – தனிமரம்

தோப்பாகாது – பொருள் மட்டும் வாழ்வாகாது..?!

பனைமரங்கள் நிழலில் இளைப்பாற இயலாது

பாழும் மானுடம் இயல்புகள் புரியாது

 

வாழும் கலை மறந்த மானுடம்

தாழும் நிலை தானே தேடியது

விழும் முன் விழிக்க வேண்டி

எழும் எந்தன் குர;லும் எழுத்தும்

 

உலையுள் இட்ட இரும்பென உலகம்

தகிக்க தகிக்க ஆழியும் ஆவியாகும்

நிற்கும் மரங்கள் நெடுதழல் பற்ற

முழுக்காடும் தீயில் முக்காடு மூட

 

எக்காலமிடும் காலத்தின் கொக்கரிப்பு கூட

நிலமும் நீரும் நிலைமாறி உருகும்

வளமும் வனப்பும் இழந்து அழிந்து

குளம் வற்றி குடிநீரும் வற்றி

 

ஓரினம் செய்த பெருந்தவறில் உலகில்

பேரினம் யாவும் பேதலிக்கும் வாழ்வில்

மாறிவரும் சூழலை மாற்ற தேவை

மானுடம் பிழை நிறுத்தல் மட்டுமே

 

நுண்ணுயிர் கற்றுத்தந்த காலப்பாடம் நமக்கு

மண்ணுயிர் யாவும் பிழைக்க தழைக்க

புடம்போட்டு புரட்டிபுரட்டி அடிக்கும் உண்மை

வடம்போட்டு நம்வரம்பு காட்டும் தன்மை

 

மலைகள் மடுக்கள் ஆகும் தலைகீழ்

மாற்றம் மானுடத்தின் ஏற்றம் ஆகாது

பனிச்சிகரம் பல்லிலிக்கும் உச்சி முகடுகள்

பலகால மாற்றத்தின் பளிங்குச் சுவடுகள்

 

பூகம்பப் பெருவெடிப்பு ஆழ்கடல் துளைக்க

பெருவெள்ளம் பிளந்து நிலமதை அடைக்க

கருமேகம் கலைந்து வெண்மேகம் மிதக்க

கரும்புகை கக்கும் மானுடத்தின் வளர்ச்சி

 

செறுபகை வேரறுக்கும் செயல் செய்யும்

இயற்கை,- உயிர்களின் உருவழியச் சீற்றம்

செயற்கை செய்கைகள் செய்யாமை ஏற்றம்

முயன்று காத்தல் முடிவின் மாற்றம்.      

No comments: