நீ இட்டுப்போன இடங்களில் இருக்கிறேன்
நீ விட்டுப்போன
பின்னும்......
நான்
கட்டிவைத்த கனவுக்கோட்டைகள்
நான் காலங்கழிக்கும்
கூடமானது
நீ மூட்டிவைத்த
நெருப்பில் தான்
நீ ஆட்டிவைத்த
ஆசைகள்......
நான் நானானதும்
காலப்போக்கில்
நான் வீணானதும்
உன் காலடியில்
நீ அசைத்த விழிகளின்
வழிகளில்
நீ இசைத்த மொழிகளில்........
நான் இருக்கிறேனா
என்ற தேடலில்
நான் தொலைந்துக்
கொண்டிருக்கிறேன்
நீ வீசிப்போன
ஒரப்பார்வை புயலில்
நீ மையம் கொள்கிறாய்......
நான் கரையோர
கடலாய் தினம்
நான் உன் நினைவோடு
மோதுகிறேன்
நீ கடந்துப்போன
காற்றில் உன்வாசம்
நீ உணரவில்லையா
என் நேசம்....?
நீ உதடுச்சுழித்த
சுழிப்பள்ளங்களில்
நீ உச்சரித்த
சொற்ச்சுழல்கள்.....
நான் சிக்கிக்கொண்ட
ஆழிவெள்ளம்
நான் மிதக்கிறேனா..?
மூழ்குகிறேனா..?!
நீ பேசிவிட்டா
போனாய்..? என்னில்
நீ விட்ட மூச்சுக்காற்று........
நான் உயிர்
சுமக்க ஏதுவாகிறது
நான் மொழியும்
மொழியானாய்
நீ எதையும்
பேசியதே இல்லை
நீ எதுவும்
கற்றுத்தரவில்லை
நான் கவிதைகள்
பேசுகிறேன்
நான் பாடல்
பாடுகிறேன்
நீ சிரித்தப்
போதும் சிந்தித்தப் போதும்
நீ சிலிர்த்த
போதும்.....
நான் உடைந்தழும்
மேகமாகிறேன்
நான் உன்மீதே
மோகமாகிறேன்
நீ என் காலம்
விழுங்கும் கருந்துளை
நீ என் காதல்
முழங்கும் எரிமலை
நான் கற்றதெதும்
நீ சொல்லவில்லை
நான் கற்றதென்னவோ
உனக்காகத்தான்
நீ எனக்கு பிறப்பு
தரவில்லை
நீ பிறவி தந்த
பிரம்மா..!!
நான் உருவானபோது
உனக்கானவன் இல்லை
நான் உயிர்ப்பெற்ற
போது உனக்கு மட்டும்தான்
நீ தொட்டதுமில்லை
என்னைத் தொடர்ந்ததுமில்லை
நீ தொப்புள்கொடி
உறவுமில்லை....
நான் விட்டதுமில்லை
உன்னை விலகியதுமில்லை
நான் அடியொற்றி
நடக்கிறேன்...
நீ என் இரவுகளின்
நண்பகல்
நீ உறங்கும்
என் இரவுகள்
நான் உறக்கம்
தொலைத்த நாட்களில்
நான் உறங்க
மறந்தேனா..!! மறுத்தேனா..??
நீ எத்திநடக்கும்
ஆடைகளின் அலைகளில்
நீ ஏந்திப்
பிடிக்கும் முந்தியின் மடிப்புகளில்
நான் வாழ்க்கை
தொலைத்து அலைகிறேன்
நான் வாழ்ந்துவிட
ஏங்கித் தவிக்கிறேன்
நீ முற்பிறவி
பேசியதில்லை
நீ மறுபிறவி
நம்பியதில்லை
நான் முற்பிறவி
மறுபிறவியும் சேர்த்து
நான் இப்பிறவி
வாழ்கிறேன் – நானற்று...
நீ கற்சிலையாய்
இருந்திருக்கலாம்
நீ கடவுள் சிலையாக
கூட இருக்கலாம்
நான் ஆராதனை
செய்கிறேன்
நான் கவிதைகள்
அர்ச்சிக்கிறேன்
நீ எப்படி என்
உலகம் ஆனாய்..?
நீ எப்படி எனக்கு
உலகம் ஆனாய்..!!
நான் உன் பின்னே
சுற்றுகிறேன்
நான் உன்னை
மட்டுமே சுற்றுகிறேன்
நீ கலங்கரை
விளக்காகிப் போனாய்
நீ களங்கம்
விலக்கும் விளக்குமானாய்
நான் கரையேறுவேனா..!!
காதல் மீறுவேனா..??
நான் கறைபடியாத
காவியமாகிறேன்..!!
நீ நெருங்கி
வரவே இல்லைதான்
நீ நெருஞ்சி
முள்ளா..? நெஞ்சு முள்ளா..??
நான் கள்ளியின்
பெயரெழுதும் கள்ளி
நான் அரும்பிய
ஆசைகளை அடைக்காக்கிறேன்
நீ குற்றங்குறை
கூறவில்லை தான்
நீ குணம்நாடிய
குணக்குன்று
நான் விட்டகுறை
தொட்டகுறை தான்
நான் விடாமல்
தொடரும் குணம்
நீ பளிங்கு
அழகுதான் என் பள்ளியில்
நீ பளீரென சிரித்த
எதிரொளி
நான் பார்த்து
இரசித்த சுடரொளி
நான் வேர்த்து
விதிர்த்த அருளொளி
நீ ஆயுத எழுத்தாய்
ஆனபோது
நீ ஆபத்தான
அழகாகிறாய்
நான் உயிரும்
மெய்யும் உருகுகிறேன்
நான் ஆச்சரியக்
குறியாகிறேன்
நீ முன்வளைந்து
முழங்கால் முகம்பதிக்க
நீ முன்வந்து
பின்தேங்கும் முகக்குறிப்பில்
நான் கேள்விக்குறியாகிறேன்
வியப்பில்
நான் பலகற்றும்
கல்லாதவனாகிறேன்
நீ ஓங்கி விளித்த
விளிச்சொற்கள்
நீ ”உம்”மென்றிருந்த
பொழுதுகள்
நான் கேட்கும்
ரீங்கார இராகங்கள் இப்பொழுதும்
நான் மௌனத்தின்
மொழிப்பெயர்ப்பாளன்
நீ உணர்த்தியது
ஏராளம் தான் எனக்கு
நீ உணர்ந்ததுதான்
தெரியாது எனக்கு
நான் பிழைப்புக்குப்
பெரும் புலவன்
நான் பேரரசின்
பேரன்
நீ வசந்தகாலத்தின்
வாரிசு
நீ வாலிபத்தின்
போர்முரசு
நான் இலையுதிர்காலத்தின்
எதிர்வீடு
நான் இளமையின்
எக்களிப்பு...
நீ கைவராக்
கவிதையின் ஏகாந்தம்
நீ மையெழுதா
சித்திரம்
நான் கவித்தேன்
குடிக்கும் பித்தன்
நான் பொய்யெழுதா
காலச்சுவடு
நீ உயிர் எழுதிய
உயில்
நீ ஒய்யாரத்தில்
மயில்
நான் காலமெழுதும்
ஓலைச்சுவடு
நான் பஞ்சாரத்தின்
குயில்
நீ கவிதையின்
உயிர் வடிவம்
நீ நாடகத்தின்
தலைமகள்
நான் நடிக்கத்
தெரியாமல் துடிக்கிறேன்

No comments:
Post a Comment