Wednesday, December 25, 2019

”உள்ளத் தீ...!!”



உள்ளம் அகலாக எண்ணம் திரியாக
அன்பு நெய்யூற்றி இதயத்தில் தீபம்
ஏற்றும் கண்களில் ஒளிரும் காதல்
சுடரில் எழுதும் கடிதம்....!!

சிந்தனைச் சிறையில் தனிமை தவம்
தன்னை இழந்து தன்மை மறந்து
உண்மை அன்பில் உருகும் மனதை
தேற்றுவதோ? தூற்றுவதோ? நானறியேன்...!!

அண்மை சேய்மை இடைவெளி மறந்து
ஆண்மை பெண்மை பாலினம் கடந்து
அவள் அவனாக அவன் அவளாக
அனுபவ மாற்றம் ஆருயிரில்....!!

கற்சிலை மாறும் கடவுள் நிலை
பொற்சிலை பூணும் பூவின் மணம்
உற்சவ சிலை ஊர்கோலம் காணும்
அன்பில் தேடல் அதிசயம்...!!

உருவம் கடந்து உருகும் உள்ளம்
அருவம் கொண்டு அருகில் செல்லும்
கனவென காணும் நினைவில் நிற்கும்
காதல் காலம் கடக்கும்...!!

கன்னம் சிவக்க கனியும் இதழில்
எண்ணம் எழுதும் முத்த மையில்
பூத்துச் சிரிக்கும் காதல் மயில்
காத்துக் கிடக்கு ஒயிலாக...!!

உருண்டும் புரண்டும் உருவம் தேடும்
அருகில் இருக்கும் அருவம் கண்டு
அரண்டும் மிரண்டும் ஆசைத் திரண்டு
விழிகளில் சிந்தும் காதல்...!!

மொழிகள் மறந்து மொழியவும் மறந்து
வியந்து வியந்து விரியும் விழிகள்
உளரும் உளறல் உள்ளக் கதறல்
ஊமையின் கனவாய் நெஞ்சில்...!!

நெஞ்சம் சுமக்கும் நேசம் கனக்கும்
கொஞ்சம் இறக்கி கொஞ்சும் சிறுக்கி
அஞ்சும் அழகில் தஞ்சம் அடைந்த
உயிரில் உயிர்த்த காதல்...!!  

No comments: