Thursday, March 05, 2026

உருமாற்றம்..!!


 உருவம் பார்த்து உருவம் பார்த்து

உருவம் செதுக்கும் உருவம் பார்க்கும்

உருவத்தில் உள்ளதை செதுக்குமா? அன்றி

உருவத்தின் உள்ளத்தை செதுக்குமா..??

 

உளிப்பட்ட இடமெல்லாம் வலிகள் உளிக்கா..?

உளிப்பட்ட சிலைக்கா..? உளிப்பிடித்த கரத்துக்கா..?

அசைவற்ற உருவம் வரும்வரை அங்கே

அசைவற்று நிற்கும் கலைக்கா..?

 

உருவம் கொள்ளும் கல்லும் உருக

உருவம் கொள்ளும் உயிரின் தாகம்

உயிர்ப்பெறுமா..? உளியின் வேகம் தாங்கி

உருவக்கல் உயிர்ப்பெறுமா..? உண்மைச்சொல்.

 

பருவம் காட்டும் உருவின் பருவம்

பதியும் கல்லில் பதியும் பருவம்

பதித்தபடிப் பார்த்துப் பதிக்கும் பருவத்தின்

உணர்வில் பதியுமா உருவம்..?

 

விழிகளில் விழிகள் விழுந்து கலந்து

உளிவழி வழியும் உயிரின் உணர்வு

சிலையின் விழிகளில் வழியும் அழகு

கலைகள் பேசும் கவிதை..!!

 

முகமும் அகமும் மொய்த்து மொய்த்து

மொழிகள் மொழியாது மொழிந்த வனப்பு

அகடும் முகடும் அளந்து அளந்து

வளைவும் நெளிவும் வரைந்து

 

குழலும் விரலும் கூட்டும் தகிப்பு

உடுப்பும் இடுப்பும் காட்டும் மடிப்பு

முலைமலர் மொய்க்க முரலும் வண்டு

சிலைமுலை இழைத்த செழிப்பு


கவின்மிகு கவிதை காதல் மலர்ந்து

கலைவழி காதல் கவிதை வடித்து

உளிமொழி உணர உளமது கனிந்து

உலகுக்கு படைத்த அழகமுது...!! 

No comments: