Friday, September 27, 2019

"குறிஞ்சி..!" (பாகம் - 4)



குறிஞ்சி – (பாகம் - 4)
இளவேனிற் காலத்துக் குறிஞ்சி நிலமகள்
குமரிக்கோல அழகியல் காட்டும் பருவம்
குளிர்காற்றும் கொஞ்சும் முகிலும் உலவும்
பஞ்சுநிகர் பனித்தூவல் மிதந்து

நெஞ்சம் உறையும் குளிரை வீசும்
புலரும் பொழுதுகள் நடுங்கும் குளிர்
மலரும் குறிஞ்சி தன்னழகு மிளிர
தாகம் தணியும் அழகு..!

காடுகள் கொடிகள் குறுஞ்செடிகள் புற்கள்
குட்டைப் புதர்கள் முட்செடிகள் இன்னபிற
தாவரம் துளிர்த்துச் செழித்து பசுந்தளிர்
பரப்பும் பச்சைப் பட்டழகு..!

பார்ப்பவர் இச்சைத் தூண்டும் எழில்
பூண்டு உயிர்களை உசுப்பும் உந்தம்
காந்தம் போல் கவரும் கவர்ச்சியில்
புணர்ச்சி நிகழும் காலம்..!

முடங்கிக் கிடந்த சோம்பல் விலக்கி
முயன்று வாழும் வேகம் கொடுக்கும்
சூடும் குளிரும் சூழும் உடல்கள்
வாழும் நிலை வசந்தம்…!

தூறலும் சாரலும் கலந்து தூவும்
பனியும் குளிரும் கவிழ்ந்து சூழும்
கதகதப் பூட்டும் காடுகள்..! முழைக்குள்
முடங்கிய உயிர்கள் சிலிர்த்தெழும்…!

தன்னைத்தான் வளம் கூட்டும் தற்சார்பு
நிகழ்த்தும் தாவர மட்கும்,- மட்கும்
தானுண்ண வலிந்து மேல்வந்து நெளியும்
புழுக்கள் பூச்சிகள் வண்டுகள்..!

கூட்டுப்புழுக்கள் கூடுடைத்து உலகம் உலாவ
முட்டைகள் உடைக்கும் மூக்குள்ள உயிர்கள்…!
பறக்கும் சிற்றுயிர் பல்லாயிரம் சிறகடிக்கும்
குறிஞ்சியின் கூந்தல் மலர்கள்…!

தாவர உண்ணிகள் தாண்டவம் காணும்
தழைத்த இலைகள் செழித்த உணவாகும்
கொழுத்த உடல்கள் பருத்துத் திமிரும்
கோலாகல விழாவில் குறிஞ்சி…!

கொழுத்த உடல்கள் பார்த்து ஏங்கும்
ஊண் உண்ணி விருந்தாக்கும் களம்..!
உணவுப் பஞ்சம் நீங்கும் உயிர்கள்
உயிர்ப்புடன் பல்கிப் பெருகும்

காலையும் மாலையும் பூத்துக் குலுங்கும்
குறிஞ்சியும் கட்டழகு சுமந்து நிற்கும்
வண்டுகள் வலம் வரும் – பொன்
வண்டுகள் ஒளிரும் பொழுது…!

இரீங்கார இசையுடன் கலந்து பாடும்
பல்வகை பறவைகள்..! பிளிறல் அலறல்
குமுறல் கதறல் கொஞ்சல் மிஞ்சும்
ஒலிகள் விஞ்சும் குறிஞ்சி…!

கூட்டுப் பூக்கள் தாங்கும் காம்புகள்
ஒற்றை மலர் தாங்கும் தண்டுகள்
சரமெனத் தொங்கும் கொத்து மலர்கள்
தென்றல் தலை துவட்டித்

தாலாட்டும் கொள்ளை அழகில் மகரந்தம்
மணக்க விருந்துப் படைக்கும் காடுகள்
உயிர்களின் உணவு மாநாட்டுத் திடல்…!
கொஞ்சும் அழகில் குறிஞ்சி….!  (தொடரும்)



No comments: