Thursday, February 03, 2011

"காதல் கவசம்...!"

என்ன தவம் செய்தனரோ ஏந்திழையே..!
நின்னை பெண்ணாய் பெற்றிடவே பெற்றோர்
அன்னைத் தமிழும் அரவணைக்கும் நின்னை
ஆயுள் முழுதும் பார்த்திருப்பேன் உன்னை...

யாண்டும் யான்பெற்ற பெரும் பேறு...
யார் பெற்றார் உன் உற்றார்..?
யௌவனத்து எழிலார் கலைவடிவே..! கரும்பே..!
யாதொரு தவம் செய்தேன்..? இன்னெழிலே..!

முற்றும் தமிழ் மணக்கும் முறுவளே...!
பற்றும் பைந்தமிழ் பரவசப் பூங்குழலே...!
நிற்றல் நடத்தல் கற்றேன் நின்தமிழில்
சாற்றும் தமிழ் போற்றும் ஆரணங்கே...!

காற்றும் கடலும் நிலமும் பேசும்
காதல் மொழி ஊற்றுப் பெருக்கெடுத்து
உணர்வுக் குடமுடைத்து வானூற்றும்
மழைபோல் வந்தடையும் நின் வாசல்...

ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...!
ஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..!
தோற்றுப்போகும் என்றெண்ணி துவண்டு விடாதே...!
தொல்லைகள் தீர்ந்தெம் எல்லைகள் சேர்வாய்.

அறுபத்து மூவரின் தமிழையும் தத்தெடுப்பேன்..!
ஆருயிரே..! தனியொருவனாய் முத்தெடுப்பேன்,- தயங்காதே..!
கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...!
காரணம் நீ என் எழிலோவியம்...!!
 
பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்
பெரும் பேறு பெற்றார் பேருவகை
உற்றார் காட்டும் அன்பில் கற்றார்
கற்றார் களிப்பை பெற்றார் காண்.

முந்திச் சரிந்த தோற்பை முடிச்சவிழ..!
பாங்காய் பதமாய் இதமாய் இடுப்பவிழ..!
ஈரைந்தின் பாரம் இறக்கி வைத்தார்..! 
என்னவளே இன்னும் சுமக்கிறேன் நான்...

நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!
அன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..!
ஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..!
சூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்

வாழும் கலையும் விதி மாற்றும்
நிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..!
காரும் நீரும் கதிரவன் கரங்களில்
தோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..!!

 

தூயவளே..! உனக்கென்ன...? 
அன்புகடல் நீ...!
ஆர்ப்பரிக்கும் அருட்சுடர் நான்... வா,
இன்பக்கடல் சமைப்போம்,- இனியவளே 
இனி இல்லை தயக்கம்...!, 
இன்னுமென்ன மயக்கம்...?         

Wednesday, February 02, 2011

"மீனவ நண்பனும்.. தமிழக அரசும்.." (புதிய திட்டங்களுடன்....)

மீனவன்........

கட்சத் தீவைக் கைக்கழுவி இலங்கையின்
எச்சில் வாழ்க்கைத் தந்த இந்திய அரசே....!
கொச்சைப் படுத்தப்படும் எங்கள் வாழ்வில்
இந்திய மானம் இருக்கவில்லையோ...?!

ஒவ்வொரு படகிலும் நாங்கள்
இதுநாள் வரை பறக்க விட்டது
இந்த தேசத்துக் கொடி என்றே நினைத்திருந்தோம்.
இப்போது புரிகிறது....
இலங்கை தேசத்து கொடி தேவையென்று....
தப்பிப் பிழைக்க ஒரு அவகாசமாவது கிடைக்குமே...

 

கடலை நம்பி பிறந்தவர்கள் நாங்கள்
"கவர்"மெண்டை நம்பி என்ன பயன்..?
கடலும் கட்டுமரமும் காக்கும் எங்களை
கைத்துப்பாக்கி குறிப் பார்க்கிறது...?!

சிங்களவன் பயிற்சிக்கு இலக்கு நாங்கள்...
சிந்தும் உதிரம் இந்துமாக்கடலையும் சிவப்பாக்கும்...
சந்தேகமிருப்பின்....
வள்ளுவ சிலைப் பார். 
***************************************************


தமிழக அரசு.............

"தமிழர்களே...! தமிழர்களே...!!
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்...!
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்....
கவிழ்ந்து விட மாட்டேன்....."

இந்த சூத்திரம் தெரியா ஒரு இனம் தினம்
சுடப்பட்டு சாவது என்ன விந்தை...!!
 
மீனவர்களே....
நீங்கள் இப்போது ஏறுவது எந்த மரம்....?
உங்களிடமிருப்பது கட்டுமரம் இல்லையோ..?
 

உங்களின் தலைக்கு விலை வைக்கப் பட்டிருக்கிறது.
உங்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கம் (உயிருக்கு)
இலவச சுனாமி வீடு..... ( உயிரோடிருந்தால் )
இலவச வேட்டி சேலை... ( மானம் போன பின் )
ஒரு ரூபாய்க்கு அரிசி .... ( வாய்க்கரிசி )
இலவச கலர் டீ.வி ....( செத்தவன் வீட்டில் கருமாதிக்கு காட்ட )

இப்படி நீளும் திட்டங்கள் இருக்க ........!!!
உங்களுக்கு என்ன கவலை.......???
என்கிறது நமது மாநில அரசு.

நீங்கள் ஏன் மீன் பிடிக்கிறீர்கள்....?
நீங்கள் மான் பிடியுங்கள்....
நாங்களே உங்களை சுட்டுப் போடுகிறோம்....
சட்ட விரோதச் செயல் என்று
சாட்சி சொல்லி....

இப்படியும் பேசுவார்கள்...?!

இனியும் வலை விரிக்க வேண்டியது.......
கடலிலா...?
யோசியுங்கள்.....

மானமுள்ள தமிழனாய் வாழும் வழிக் கேட்டால்...
இலவசங்களை பொறுக்கிப் போட்டு
இன்னும் இழிவுப் படுத்தும் ஒரு அரசு...

இங்கே இருப்பவன் பிழைக்க வழி இல்லை....
இங்கிலாந்துகாரனும்... சப்பான்காரனும்....
இங்கு வந்து ஆலை அமைக்க
இன்னொருவர் தூது................
"வரதப்பா..... வரதப்பா.... கஞ்சி வருதப்பா........
கஞ்சிக் கலையம் தாங்கி அரசாங்க வண்டி வருதப்பா...."


இனி எல்லோருக்கும் இலவசமாய் "கஞ்சித் திட்டம்"
இதன் மூலம் இலவச கேஸ் செலவு (இத்தனையாயிரம் கோடி)
தமிழக அரசுக்கு மிச்சம்.... அமைச்சர் அறிக்கை.

நீங்கள் பொங்கலுக்கு "பொங்கலும்"
தீபாவளிக்கு "வெடியும்"
அரசாங்க செலவில் பெறலாம்.

இந்த முறையும் எனக்கே ஓட்டளித்தால்............

மக்களே..... மறவாதீர்கள்.......

( மீனாவை காப்பாற்ற )
மன்னிக்க ( டங் ஸ்லிப் )

மீனவர்களை காப்பாற்ற
எங்களால் மட்டுமே முடியும்.........

"கடலில் செல்லாமல் மீன் பிடிப்பது எப்படி...?"
என்பதை ஆராய வல்லுநர் குழு அமைக்கப் படும்.


வாய்க்கால் வெட்டி கடலை நமது மாநிலத்தின் 
உள் கிராமங்களுக்கு இணைப்பு கொடுத்து
எல்லோரையும் மீன் பிடிக்க செய்யும்
திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.           
  
அதற்கான செலவை நம்முடைய
மத்திய அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்று
உபரித் தொகையை மாநில அரசுப் போட்டு
வாய்க்கால் வெட்டப் படும் என்பதை...

இதன் மூலம் தெரிவிக்கிறேன்..............

மீனவர்களின் வாயில் மீன் (மண்) விழ செய்வதே
எங்கள் நோக்கம்.

நன்றி.      

*****************************************************

தமிழ்க்காதலனின் மீனவர்களின் துயர்ப் பேசும் இன்னுமொரு பதிவைப் படிக்க....
http://thamizhththenral.blogspot.com/2011/01/blog-post_9799.html