அரியும் சிவனும் விரும்பி அரும்பிய
ஆரமுதே...! அழகே..! பனித்துளி பளிங்கழகே..!
முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..!
முன்னோர் உறை முதூராம் முள்ளுக்குறிச்சியில்
எம்குலத் துதித்த கொழுந்தே..! குலவிளக்கே..!!
எம்மனை செழிக்க எழுந்தப் பேரழகே..!!
எம்முன்னோர் செய்தவத்தின் எழிலார் கலைவடிவே..!
எமக்குவகை தந்த இளஞ்சுடரே...! குலமகளே..!!
இயற்கை எழிலாடும் நெல்லும் கரும்பும்
இருபுறம் செழித்திருக்க வரப்பு வயலோடும்
வாய்க்கால் வழியோடும் வளம் கொழிக்கும்
நீர்வளம் நிறைந்த நாடெங்கும் காடு.

காலம் தந்த கருணையே..! களிப்பே..!!
கடவுள் சக்தி காத்து நிற்கும்
குறுஞ்சிரிப்பே..! நலன்கள் யாவும் மேவி
நாளும் செழிக்க நல்லன யாவும்
சிறக்க,- சீறும் சிறப்பும் பெற்று
பாரும் ஊரும் பாராட்டும் பண்புடன்
வீடும் குலமும் தழைக்கச் செழிப்பாய்..!
விருந்தோம்பி தமிழின் பெருமைக் காப்பாய்.

"அரிகரப்பிரியா...!" பதினாறு வகை பேறுடன்
அரிகரன் புகழ் நிலைக்கும் வண்ணம்
ஆயுள் முழுதும் நிலைத்தப் பொருளோடும்
நீடித்த புகழோடும் வாழ வாழ்த்துகிறேன்.
குறிப்பு : அண்ணன் மகள் "அரிகரப்பிரியா" வின் இரண்டாவது பிறந்த தின வாழ்த்து மடல். பிறந்த நாள் - 23.02.2009.