காலை கண் விழிக்கும் அந்த முகம்
காணவில்லை....!
காய்ந்து கிடக்கும்
குழம்பிக் கோப்பைகள்.....
ஈக்களின் வசிப்பிடம்.
எழுப்ப யாருமிலா பொழுதில்
கதிரின் கருணையற்ற
சூடு மனதை சுட்டது...!
இரணங்களுடன் தொடங்கும் நாட்கள்
இரணங்களிலேயே முடிகிறது.
அமைதியாய் இருக்கிறது என் வீடு
உள்ளே நானிருந்தும்...!
ஆளரவமற்ற பாழ் வீடாய்.
நினைவுகள் என்னைத் தின்ன,- நான்
உணர்வுகளை அசைபோடுகிறேன்.
தனி மரம் பார்வைக்குப் பட்ட போதெல்லாம்
புரியாத அதன் தனிமை கொடுமை....
இப்போதுதான் எனக்கு உரைக்கிறது.
வேதனைகளோடு முடிச்சிட்டுக்கொள்ளும்
வாழ்க்கையின் வேர்கள் நீ என்பது...
நான் உணர்ந்த நாள் இது...!
சல்லி வேராய் நமக்குள் எழுந்த சலசலப்புகள்
ஆணிவேரை ஆட்டம் காணச் செய்துவிட்டன.
உன் அன்பின் வாசம் இப்போது அதிகமாய் வீசுகிறது.
காய்ந்து போகும் முன்....
கண்முன் வாராயோ கண்மணி...!
விழிகளில் வழியும் நீர் நின் நேசம் உரைக்கிறது.
யாரும் அறியா வண்ணம் கரங்கள் மறைக்கிறது.
பேரன்பு பெருங்கடலில் எனை தத்தளிக்க விட்டவளே...!
பெருங்காய வாசமாய் பிழைத்திருக்கிறேன்...
உன் நினைவுகளில்...!
சமையலறையும் படுக்கையறையும் என்னை
சாகடிக்கின்றன...!?
பூசையறையோ புறந்தள்ளி கதவடைக்கிறது.
ஈரம் சொட்டும் உன் கூந்தல் வாசம் தேடும்....
நம் குலதெய்வங்கள் சாம்பிராணி மறுக்கின்றன.
சத்தமில்லாமல் நீ சாதித்த வாழ்க்கை புரிகிறது.
யுத்தமில்லாமலே பிரிந்திருக்கிறோம்...
உத்தமியே உணர்வாயோ....!
பாலையில் ஒற்றையாய்
என் கால் நடைப் பயணம்...
பின்னிக்கொள்ளும் என் கால்களோடு
பிணைந்திருக்கிறது என் காலமும்.
சக்தி இல்லா சிவனாய் சாகக் கிடக்கிறேன்
என் சகத்தியே வாராயோ..?!
சந்தோசம் என்பது உறவல்ல...
சந்தோசம் என்பது துறவல்ல....
சந்தோசம் என்பது வீடல்ல...
சந்தோசம் என்பது வரமல்ல...
சந்தோசம் என்பது.............!!
பணமல்ல...., நூலல்ல..., தனிமையல்ல...
சந்தோசம் என்பது ............??
சந்தோசம் என்பது சம்சாரம்.
என் வாழ்வே...!
என் தவமே...!
என் புரிதலே...!
என் விடியலே...!
என் சந்தோசமே....!
உணர்கிறேன்....!!
நீ இல்லாத நான்....
வெறும் கூடு....
உயிரற்ற உடம்பு....
இயக்கத்தில் இருக்கும் துரும்பு...
இருந்தும் இல்லாத கடவுள்.
வா என் பிரியமே....!
வாழாது போன நம் நேசங்களை
வாழ்ந்து தீர்ப்போம்....!
பிரிவது இறப்பினும் கொடுமை என்பது உணர்ந்தேன்.
பிரிதலில் இல்லை வாழ்க்கை.
சேர்தலில்.
பிரிதலில் இல்லை இன்பம்.
சேர்தலில்.
பிரிவென்பது புரிதலின் தொடக்கம்.
புரிகிறது.............!!
புரியப் புரிய ஆழமாய்
உன் அருமை உணர்கிறேன்.
உணர உணர உன்னைத்
திணற திணற நேசிக்கிறேன்.
வாழ்க்கையின் பொருள் நீ..!
வாழ்க்கையை சமைப்பவள் நீ..!
சந்தோசத்தின் இருப்பிடம் நீ..!
என் பிழைகள் மற....
என் கர்வம், திமிர்...
யாவும் மன்னித்து மற...
பரிசுத்த பாசமே...!
வாடுகிறேன் வாராயோ...?!
வசந்தங்கள் தாராயோ..?!
***************************************

மனதின் சுவாசங்களை உயிர்ப்பித்த காதலா...!
மௌனத்தில் எனை ஆழ்த்தி
இன்பத்தில் எனை வீழ்த்தி
வசந்தங்களில் வாழ்க்கை சொன்ன
இதயக்காதலா....!
நினைப்புக்கும் நிசத்துக்கும்
கண்ணீரால் பாலம் கட்டுகிறேன்.
உன் அன்பே நிரம்பி வழிகிறது...!
நீயில்லா நானிங்கே நடைபிணமாய்...
என்செய்வாய்..! என் செல்வமே..!
காலை முதல் இரவு வரை
உன் தேவைகளை பூர்த்தி செய்வதே
நான் செய்த பூசையாகும்...!
இப்போது எப்படி...?
விருந்திலும் மருந்திலும்
அளவோடிரு அன்புள்ளமே...!
எனை இழுத்தணைத்த இன்பங்களை
என் தலையணையில் சேர்த்திருக்கிறேன்.
தலை வைக்க மறவாதே...!
ஆனந்த கடலில் தள்ளியவனும்
அசோக வனத்தில் தனித்து விட்டவனும்
நீயே...!!
கரை சேர்ப்பாய் என்றே காத்திருக்கிறேன்...?!
உன்னையே உலகமாய் வாழ்ந்தவள்.
உனக்கு எப்படி பிடிக்காமல் போனேன்...?
ஆயினும் என் காதல் உன்னோடு....
இன்னமும் உயிர்த்திருக்கிறது...!
அறியாயோ என் ஆருயிரே...!!

கடந்த காலங்களின் இன்பங்களில்தான்
இழையோடிக்கொண்டிருக்கிறது ...
என் சுவாசம்.
நிற்கும் முன் வாராயோ...?
நின் கரங்கள் தாராயோ...?
எனை ஏந்திக் கொள்ளாயோ...?
என்னுயிரே...!
என் மன்னவா...!
உன் மனைவியாய் மடியும் வரம் தா.
******************************************
குறிப்பு: இந்தக் கவிதையின் சூழல் என் அருமை நண்பர் மனசு - சே.குமார் அவர்களால் சொல்லப் பட்டது. அவரின் அன்பிற்கிணங்கி இந்த கவிதை எழுத பட்டுள்ளது.
கரு: திருமணத்திற்கு பின் பிரிந்து வாழும் தம்பதிகளின் மனவோட்டம்.
இதே கருவை மையப்படுத்தி மனசு வலைப்பூவில் சே.குமார் கதை எழுதி இருக்கிறார். அதை படிக்க.....