Tuesday, June 28, 2011

"தேகத் துருவம்..!!"



தேகத் துருவத்துள் கிளரும் மோக
அலைகளில் மூழ்கும் மனம் மருகும்
மாமாயை மயக்கும் மத்தகத்து வித்தகம்
மறைத்து வைக்கும் மகோன்னத மகரந்த


சூல் கொள்ளும் சுகம் யாவும்
மால் தந்த மயக்கமோ அன்றி
மன்மத கரும்பின் கணுக்களில் வடியும்
மாதவ அமுதக் கலச அமுதமோ..?!


துருவத்துள் துய்யும் பருவம் தொட்டு
துருவத்தின் துன்பம் தொடரும் இன்பம்
மேல்கீழ் மாற்றித் தலைக்கீழ் தொங்கும்
தத்துவம் தந்த மகா சக்தி.


பெற்றது பிரபஞ்சமா..? பெற்றெடுத்தது பிரபஞ்சமா..?
கற்றதுக் கொண்டு காண முடியவில்லை
கண்மூடி தவம் செய்ய மனமில்லை
தங்கமே உன்னைத் தவிக்க விட்டு.


முகத்துக்கே மூன்று சென்மம் போகும்
முன்னழகும் பின்னழகும் மூட்டும் தீயில்
முற்பிறவியும் சேர்த்து பிறக்கத் தோன்றும்
முப்பால் சுகமும் முப்பாலுக் கப்பாலும்


மூழ்கத் தூண்டும் மோன இரசம்
மூச்சு முட்டும் சுகம் சொர்க்கத்திலுண்டோ..?!
ஒளியும் ஒலியும் ஒளியும் ஓரிடத்தில்
ஓய்யாரமே..! உன்னோடு மௌனமாய் முயங்குகிறேன்.


பிணைவதும் பிரிவதும் பின்கூடி பிணைவதும்
பிரபஞ்சப் பிழை,- திருத்துவோம் இணைந்தவை
பிரியாமல் இருக்கச் செய்வோம் இன்னுமாயிரம்
பிரபஞ்சம் பிறக்கச் செய்வோம் பின்னும்


பிறிதொரு பூமிப் படைப்போம் பிறக்கும்
உயிர்களில் இன்னும் இன்பம் வைப்போம்
பசியற்றப் பகலும் பசித்தீரா இரவும்
படைப்போம் பந்தியில் இருவருமே பரிமாறுவோம்.


உண்ணுவது உணவாகும் உன்னதம் துய்ப்போம்
உண்டும் இல்லையும் ஒன்றெனச் செய்வோம்
உன்னில் தொடங்கி என்னில் முடியம்
உன்னதப் பொழுதுகள் பிரபஞ்ச விடியல்கள்..!!


சாகா வரம் பெற்ற சாகரமே..!
சாயா மனம் சாய்க்கும் மோனரசமே..!!
யோனிக்கும் ஞானிக்கும் முடிச்சிட்ட முக்கூடலே..!!!
யோகத்தில் தேகத்தை நிறுத்தி மோகிக்க


நீளும் சங்கம சடங்கின் மடங்கு
நாளும் பூத்திருக்கும் நந்தவனமே..! நனித்தேன்
நல்விருந்து நாவுக்கு சுவை நற்கவி
நல்மனதுக்கு சுகம் நறுமலர் நீ


உன்னில் உறைந்து கிடக்கும் பிரபஞ்சத்தை
பிறக்க வைக்க பெரும்பேறு பெற்றவன்
உனக்காக தன் தவம் கலைகிறான்...
உயிர்த்தெழு..! உன்னதமே உலகு செய்வோம்.

2 comments:

dineshar said...

அருமை...
ரசனைக்குரியது.

காயத்ரி வைத்தியநாதன் said...

அற்புதமான பதிவு...பாராட்டுமளவு கவித்திறனில்லை..பிரமித்தபடி ரசித்தேன்..